க(ணி)தனகுதூகலம்

கணித அறிஞர்களைத் தேடிக்கொண்டு போனபோது, என் கண்ணில் தட்டுப்பட்ட முத்துதான், ‘பாவனா.’ பேரா.சி.எஸ். அரவிந்தாவை ஆசிரியராக கொண்டு வெளிவரும் அற்புத கணித இதழ் இது. ஆண்டுக்கு நான்கு இதழ்கள் தான். பெங்களூருவில் இருந்து வெளிவருகிறது.
ஒவ்வொரு இதழிலும் இந்திய கணித அறிஞர்களின் மிக விரிவான பேட்டிகள் இடம்பெறுகின்றன. பல்வேறு கணிதத் துறைகள் தொடர்பான கட்டுரைகளும் உண்டு. பழைய இதழ்களை எல்லாம் இணையத்தில் சேமித்து வைத்துள்ளனர்.
அனைத்து இதழ்களையும் பைத்தியம் மாதிரி நான் ஒரே இரவில் படித்திருக்கிறேன். பலமுறை மீண்டும் மீண்டும் படித்திருக்கிறேன். நண்பர்கள் எல்லோருக்கும் இதைப் பற்றி வாய் ஓயாமல் எடுத்துச் சொல்லியிருக்கிறேன். இந்தியக் கணிதவியலின் பங்களிப்புகளை வெளிச்சம் போட்டுக் காட்டும் பேட்டிகள் இவ்விதழ்களில்
இடம்பெற்றுள்ளன.
என் வாழ்நாளுக்குள் நான் செய்ய விரும்பும் ஏராளமான வேலைகள் உண்டு. அதில் முக்கியமானது, இவ்விதழ்களில் வெளியாகியுள்ள பேட்டிகளைத் தொகுத்து, தமிழில் மொழிபெயர்த்து வெளியிட வேண்டும் என்பது. இதில் தான், தமிழகத்தின் முக்கியமான கணித அறிஞர்களின் பேட்டிகளும் இடம்பெற்றுள்ளன.
ஐம்பதாண்டுகளுக்கு முன்பு தமிழகத்தின் கணித வளம் எப்படிப்பட்டது, பெற்றோர்கள் அந்தக் காலங்களில் எப்படி தம் பிள்ளைகளை ஊக்குவித்தார்கள், எத்தகைய
அற்புதமான ஆசிரியர்கள் மாணவர்களின் அறிவைச் செழுமைப்படுத்தினார்கள் என்றெல்லாம் இந்தப் பேட்டிகள் தெரிவிக்கின்றன.
அப்பப்பா… பெரிய கணித யாகம் அன்றைய கல்லூரிகளில் நடைபெற்றுள்ளன என்ற எண்ணம் தான் எனக்கு ஏற்படுகிறது.
உண்மையில் எனக்கு வேறொரு எண்ணமும் உண்டு. மத்திய அரசு விஞ்ஞானியான நண்பர் த.வி. வெங்கடேஸ்வரனிடமும் இதைப் பற்றிச் சொல்லிக்கொண்டு இருந்தேன். விஞ்ஞான் பிரசார் சார்பாக, அவர்கள் ஒருசில நூல்களை வெளியிடும் முயற்சியில் உள்ளனர். தமிழகத்தின் கணித அறிஞர்களில் தற்போது இன்னும் உடல்நலத்துடன் உள்ளவர்களைப் பேட்டி கண்டு எழுதி, புத்தகமாக வெளியிட வேண்டும் என்பது என் அவா. ஆதரவு தாருங்கள் என்று சொல்லியிருக்கிறேன்.
சில சமயங்களில் என் நடத்தை எனக்கே ஆச்சரியமளிப்பது உண்டு. ‘பாவனா’ இதழ் ஆசிரியரிடம் பேசவேண்டும் என்பது என்னுடைய ரொம்ப நாள் கனவு.
திடீரென்று அவர்களுடைய வலைத்தளத்தில், ஒரு அலைபேசி எண் கொடுக்கப்பட்டது. அழைத்துப் பேசியபோது, அரவிந்தாவே எதிர்ப்பக்கம் உரையாடினார்.
உண்மையில் நான் சிறுகுழந்தையின் குதூகலத்தோடு என் மகிழ்ச்சியைத் தெரிவித்தேன். தமிழகத்தில் அந்த மனிதர் சுமார் 10 ஆண்டுகள் இருந்திருக்கிறார். என் குரலில் தெரிந்த மகிழ்ச்சி அவரையும் தொற்றிக்கொண்டது.
அனைவரிடமும் கணிதத்தை எடுத்துச் செல்லவேண்டும் என்பதற்காகவே, ஒரு மனிதர் இவ்வளவு தூரம் உழைக்கும்போது, அவரை மெச்சாமல் எப்படி இருக்க
முடியும்?
கணித ஆர்வம் உள்ளவரா நீங்கள்? இதோ ‘பாவனா’ இதழ்கள். படியுங்கள்: http://bhavana.org.in/

‘நீங்களும் உங்க ஐடியாவும்!’

தற்போது பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் தொடங்கியிருக்கவேண்டும். கரோனா கொள்ளை நோயினால் தள்ளிப் போயிருக்கிறது. ஏப்ரல் 15 முதல் தேர்வுகள் நடத்தப்படலாம் என்று சொல்லப்பட்டது. ஏப்ரல் 14இல் தான் பிரதமர் அறிவித்த ஊரடங்கு உத்தரவு நிறைவுபெறவிருக்கிறது. அடுத்த நாளே, பொதுத் தேர்வுகள் தொடங்கும் என்று நம்புவதற்கில்லை. இதுபற்றி சமீபத்தில் தொலைக்காட்சி ஒன்றின் விவாதத்தில் பேசிவிட்டு, வீடு திரும்பினேன். என் முதல் விமர்சகரான, என் மனைவி சுபாஷிணி பிடித்துக்கொண்டுவிட்டார்.
“இன்னிக்கு நீங்க பேசினது எனக்குப் பிடிக்கவே இல்லை.”
லேசான ஜெர்க். பொதுவாக விமர்சனங்கள் கறாராக இருந்தாலும் இதமாக ஆரம்பிக்கும். இன்று நேரடித் தாக்குதல்.
“என்ன தப்பா பேசிட்டேன்?”
“பத்தாம் கிளாஸ், பிளஸ் டூ வெல்லாம் அப்படியே கால் பரீட்சை, அரை பரீட்சை மார்க்கை வெச்சே, பாஸ் போடலாம். மார்க் போடலாம்னு பேசறீங்களே? என்ன நியாயம் இது?”
“இன்னிக்கு இருக்கிற சூழ்நிலைய நினைச்சு அப்படி சொன்னேன். பசங்களை எல்லாம் எக்ஸாம் எழுதச் சொல்றது நியாயம்னு தோணல சுபா.”
“அதுக்காக? குவார்ட்டர்லிலேயும் ஹாஃப் இயர்லிலேயும் பசங்க மார்க்கே வாங்கியிருக்க மாட்டாங்களே. ரிவிஷன் எக்ஸாம் சமயத்துல தான் கொஞ்சம் சீரியஸ்னஸ் வந்திருக்கும். ஸ்டடி லீவுல தான் படிச்சிருப்பாங்க. படிப்படியாக முன்னேறியிருப்பாங்க. எக்ஸாம் கிட்ட வரும்போதுதான் ராவும் பகலும் படிச்சிருப்பாங்க. இப்போ போய், அவங்களோட, கால் பரீட்சை, அரை பரீட்சை மார்க்கை எடுத்துக்குங்கன்னா, அவங்க உழைப்புக்கு என்ன அர்த்தம்? நம்ம நிதர்சனாவுக்கு என்ன ஆச்சு?”
என் இரண்டாவது மகள், நிதர்சனா, சி.பி.எஸ்.இ. பள்ளி ஒன்றில் பத்தாம் வகுப்பு. அவளது பள்ளியில், கணிதம் மிகவும் சிரமம், சிரமம் என்று சொல்லியே பயமுறுத்திவிட்டார்கள். விளைவு, ‘ஸ்டாண்டர்ட் மேத்ஸ்’க்குப் பதில், ‘பேசிக் மேத்ஸ்’ எடுத்துக்கொள்ளச் சொல்லிவிட்டார்கள். ரிவிஷன் தேர்வுகளில் எல்லாம் பயந்து, பயந்து எழுதினாள்.
சி.பி.எஸ்.இ. நடத்திய இறுதித் தேர்வில், பேசிக் மேத்ஸ் மட்டுமல்ல, ஸ்டாண்டர்டு மேத்ஸும் வெகு சுலபமாக இருந்தது. இப்போது, பிளஸ் 1 போகும்போது, அவள் பேசிக் மேத்ஸ் எடுத்ததால், கணிதம் உள்ள எந்த குரூப்பும் கொடுக்கப்பட மாட்டாது. சி.பி.எஸ்.இ.யில் மட்டுமல்ல, மாநில பாடத் திட்டத்திலும் அவளால், கணிதத்தை உயர்நிலைப் பள்ளியில் எடுத்துப் படிக்க முடியாது. இதைத் தான் என் மனைவி சுட்டிக்காட்டினார்.
“கரோனா பயமாத்தான் இருக்கு. ஆனால், பத்துக்கும் பிளஸ் டூவுக்கும் ஆல் பாஸ் போடுங்கறதோ, கால் பரீட்சை, அரைப் பரீட்சை மார்க்கை எடுத்துக்குங்கன்னு சொல்றதெல்லாம் ரொம்ப தப்பு. அவங்களோட முயற்சியையும் வேகத்தையும் நீங்க சிதைக்கறீங்க. என்ன இப்போ? கொஞ்சம் தள்ளி எக்ஸாம் வெக்கறது. மே மாசம் கூட வெக்கட்டுமே. அடுத்த வருஷம் ஸ்கூலை ஜூலை, ஆகஸ்டுல ஆரம்பிச்சா போச்சு. ஜூன் மாசத்துலேயே தான் ஆரம்பிக்கணுமா? இஞ்சினியரிங்க் காலேஜெல்லாம் ஆகஸ்டுல தானே ஆரம்பிக்குது? 210 நாட்களுக்குப் பதில் 160 நாள் ஸ்கூல் நடத்தறது. சனிக்கிழமை நடத்தலாம், பண்டிகை விடுமுறையெல்லாம் கேன்சல் பண்ணிடலாம். இதையெல்லாம் சொல்றதை விட்டுட்டு, அரசாங்கத்துக்கு கிறுக்குத்தனமா ஐடியாவெல்லாம் கொடுக்கறீங்க. கொஞ்சம் ஜாக்கிரதையே பேசுங்க.”
எனக்குப் பேச்சு எழவில்லை.

புரட்டிப் போடும் கரோனா

கரோனா கொள்ளைநோயில் இருந்து தப்பிப்பதற்காக விதிக்கப்பட்டுள்ள ஊரடங்கின் ஐந்தாவது நாள் இன்று. இதற்குள் எதிர்பாராத இரண்டு மூன்று விஷயங்கள் நடந்துவிட்டன. ஒரு சின்ன நகர்வு தான். வீட்டுக்குள் அனைவரும் பத்திரமாயிருங்கள் என்று சொல்லப்பட்டது. அவ்வளவுதான். ஆனால், தொடர்நிகழ்வாக அது எவ்வளவு தூரம் பல்வேறு இடர்களை ஏற்படுத்துகிறது!
தில்லியில் இருந்து பல ஆயிரம் தொழிலாளர்கள் கால்நடையாகவே ஊருக்குத் திரும்புகிறார்கள். அங்கே தான் அப்படியென்று பார்த்தால், கேரளத்தில் இருந்து பல கட்டடத் தொழிலாளர்கள் தமிழகம் நோக்கித் திரும்பிவருகிறார்கள். அதுவும் இரயில்வே இருப்புப்பாதை வழியாகவே. கோவையில் அவர்கள் தடுத்து நிறுத்தப்படும் செய்திகள் வருகின்றன.
இன்னொரு புறம், கேரள- கர்நாடக எல்லைப் பகுதியில், சாலைகளை மறித்து, கர்நாடக காவல்துறை மண்ணைக் கொட்டி தடுப்புகள் ஏற்படுத்தியுள்ளன. அத்தியாவசியத் தேவைகளுக்காக கூட பயணம் மேற்கொள்ள முடியவில்லை, விரைந்து நடவடிக்கை எடுங்கள் என்று கேரள முதல்வர், மத்திய அரசுக்குக் கடிதம் எழுதியுள்ளார்.
கோவாவில் தமிழக மீனவர்கள் மாட்டிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களை மீட்க நடவடிக்கை எடுங்கள் என்று தமிழக மீனவ கிராமம் ஒன்றில் இருந்து தமிழக அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
வெளியூர்களில் இருந்து வருகிறவர்களை பல கிராமங்கள், ஊருக்குள் அனுமதிக்க மறுப்பதாகவும் செய்திகள் சொல்கின்றன. திடீரென்று நான் வேறு; நீ வேறு என்ற பிரிவினை மனப்பான்மை தோன்றியிருப்பது ஆச்சரியமளிக்கிறது.
பல உண்மைகளைச் சொல்லும் செய்திகள் இவை. வெளியூர், வெளிமாநிலங்களில் இருந்து தமிழகத்துக்குப் பஞ்சம் பிழைக்க வந்தவர்களைப் போலவே, தமிழகத்தில் இருந்து ஏராளமானோர் வேறு மாநிலங்களுக்கு இடம்பெயர்ந்திருப்பது இப்போது துலக்கமாகத் தெரிகிறது. இவர்கள் நிரந்தரமாக நகர்ந்தவர்கள் அல்லர்; கூலிகளாக, தாற்காலிக பணியாளர்களாக, ஒப்பந்தப் பணியாளர்களாக சென்றவர்கள்.
இவர்கள் மீண்டும் தம் தாய்மண்ணுக்கே திரும்புகிறார்கள். அந்தக் காலத்தில் எம்டன் குண்டு போட்ட போது, சென்னையைத் துறந்து பலர் தத்தமது கிராமங்களுக்கு திரும்பியதாக சரித்திரத்தில் படித்திருக்கிறேன். இப்போது அதேபோன்றதொரு நிகழ்வு நடந்துகொண்டிருக்கிறதோ என்ற எண்ணமே மேலிடுகிறது.
ஒவ்வொரு ஊரிலும் ஒரு மாதிரியான ரீ அரேஞ்ச்மென்ட் நடந்துகொண்டிருக்கிறது. ஊருக்குள் திரும்பி வருகிறவர்கள், பொருளாதார அழுத்தத்தை இன்னும் அதிகப்படுத்தத் தான் போகிறார்கள். இவர்களால் உள்ளூரில் போதிய வருவாய் ஈட்டமுடியவில்லை என்றுதானே வேறு வெளியூர்களுக்கு வேலை தேடிப் போனார்கள்? இவர்களால் எப்படிப்பட்ட சமூக அழுத்தங்கள் ஏற்படப் போகின்றன என்பதையும் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.
நமது சமூக, பொருளாதாரக் கட்டமைப்பையே கரோனா மாற்றிப் போட்டுவிடும் போலிருக்கிறதே!

குல்ஜாருக்கு அதிர்ஷ்டம்

சாகித்ய அகாதெமி மொழிபெயர்ப்பு விருது 2019 தேர்வுக் குழுவில் நானும் ஒரு உறுப்பினனாக இருந்தேன். டாக்டர் பிரேமா நந்தகுமார், சா. தேவதாஸ் ஆகியோருடன் அமர்ந்து, விருதுபெறும் படைப்பையும் மொழிபெயர்ப்பாளரையும் இறுதி செய்யும் நிகழ்வு சென்னையில் நடைபெற்றது. மிகவும் மகிழ்ச்சியான, ஆரோக்கியமான விவாதங்கள் நடைபெற்ற மூன்று மணிநேரங்கள் அவை.
அதற்கு முன்னர், இறுதிப் பட்டியலில் 11 புத்தகங்கள் இடம்பெற்றிருந்தன. கிட்டத்தட்ட 12 நாட்களில் அனைத்துப் புத்தகங்களையும் படித்து முடித்து, எனக்கான குறிப்புகளை எடுத்துக்கொண்டு, இறுதித் தேர்வுக் கூட்டத்துக்குப் போயிருந்தேன்.
என் பட்டியலை விதவிதமான வழிகளில் வடிவமைத்துக்கொண்டிருந்தேன். நல்ல தரமான மொழிபெயர்ப்பு, தரமான படைப்பின் தரமான மொழிபெயர்ப்பு, புதுமையான படைப்பின் தரமான மொழிபெயர்ப்பு, தமிழுக்கு நிச்சயம் வளம் சேர்க்கும் மொழிபெயர்ப்பு என்றெல்லாம் நானே எனக்குள் பல்வேறு வரையறைகளை வகுத்துக்கொண்டிருந்தேன்.
இவற்றையெல்லாம் எடுத்துப் பேசுவதற்கு அன்று வாய்ப்பு கிடைத்தது.
இறுதியில் மனோஜ் குரூர் மலையாளத்தில் எழுதிய, கே.வி. ஜெயஸ்ரீயால் மொழிபெயர்க்கப்பட்ட நாவலான ‘நிலம் பூத்து மலர்ந்த நாள்’ என்ற நாவல் பரிசுக்குரியதாக தேர்வு பெற்றது.
இதோடு என் மனத்தில் பாதிப்பை ஏற்படுத்திய சில புத்தகங்களையும் குறிப்பிட விரும்புகிறேன்.
முதலில், வாஸந்தி மொழிபெயர்த்த ‘துருவ நட்சத்திரங்கள்’ எனும் நாவல். பஞ்சாபி மொழியில் மிக முக்கியமான நாவலாக இது கருதப்படுகிறது. குல்ஜார் சிங் சிந்து என்ற எழுத்தாளரது படைப்பு.
நான் இதில் மிகவும் ரசித்தது இதன் மொழிபெயர்ப்பைத்தான். ‘பட்டுக் கத்தரித்தாற் போல்’ என்றொரு சொற்றொடர் உண்டு. ரொம்ப பழைய பாணியாகத் தோன்றினாலும் பரவாயில்லை. இந்தச் சொற்றொடர் தான், துருவ நட்சத்திரங்கள் நூலின் மொழிபெயர்ப்பைக் குறிக்கும் சரியான சொல்.
ஒவ்வொரு வரியையும் பத்தியையும் நேர்த்தியாக உருவாக்கியிருக்கிறார் வாஸந்தி. அந்த மொழிபெயர்ப்பைப் பார்க்கும்போதே, அதற்குப் பின்னே போயிருக்கும் உழைப்பை என்னால் யூகிக்க முடிந்தது. முதலில் ஒருமுறை மொழிபெயர்த்துவிட்டு, அதற்குப் பிறகு அந்தப் பிரதியைச் செம்மைப்படுத்தியுள்ளார். பெரும்பாலான மொழிபெயர்ப்புகளில், வாக்கியத்தை முடிக்கும்போது, ஒரே மாதிரியாக இருக்கும். ‘சென்றார்’, ‘சொன்னார்’, ‘என்றார்’… கட்டுரைகளாக இருந்தால், ‘குறிப்பிடத்தக்கது’ எல்லா இடங்களிலும் எட்டிப் பார்க்கும் (உபயம் : சன் டிவி!!).
இந்த நாவலில், மிகவும் கவனத்துடன், ஒவ்வொரு வரியையும் திருந்த நறுக்கியிருக்கிறார். தேவையற்ற உபரி சொற்களை நீக்கி, கச்சிதமாக்கியுள்ளார். தமிழில் படிக்கும்போது, எந்த இடறலும் இல்லை. வாசிப்பது ஒரு பஞ்சாபி நாவல் தானா என்றே சந்தேகம் எழுகிறது.
இந்தியா டுடே இதழில் பணியாற்றிய அனுபவம், எழுத்தாளராகவும் இருக்கும் வீச்சு ஆகியவை வாஸந்தியின் மொழிபெயர்ப்பை மேன்மைப்படுத்தியுள்ளது. எழுத்தாளரே மொழிபெயர்ப்பாளராகவும் இருப்பதால் கிடைக்கும் அனுகூலம் இது. குல்ஜார் சிங் சிந்துவுக்குத்தான் அதிர்ஷ்டம். நல்ல மொழிபெயர்ப்பாளர் அமைவது ஏழு ஜன்மத்துப் புண்ணியம்!

லிபரல்

புதிய தலைமுறை தொலைக்காட்சியின் ‘புதுப் புது அர்த்தங்கள்’ நிகழ்ச்சியில் சமீபத்தில் பேசும்போது, மீண்டும் என்னுடைய விருப்பமான விஷயமான ‘நடுநிலை’ பற்றி பேச வேண்டி வந்தது.

பத்திரிகையாளனுக்கு கட்சி சார்பு தேவை இல்லை. கொள்கை சார்பு தேவை இல்லை. அவனது பார்வை பாரபட்சமற்று இருப்பது மட்டுமே. ‘பாரபட்சமற்று’ இருக்கவே முடியாது. எந்தக் கருத்தும் ஏதேனும் ஒரு தரப்பினருக்குச் சாதகமாகவும் இன்னொரு தரப்பினருக்கும் பாதகமாகவும் இருக்கும். அதனால், உடனடியாக பாதிக்கப்படுபவர்கள் வசவுமழை பொழிவதைப் பார்க்க முடிகிறது. (புதுப் புது அர்த்தங்கள் நிகழ்ச்சி யூடியூபில் வலையேற்றப்பட்டவுடன், அதன் கீழே பல்வேறு நண்பர்களும் என்னை தகாத வார்த்தைகளில் அர்ச்சிப்பதைக் கண்டு முதலில் கொஞ்சம் வருத்தம் இருந்தது. தற்போது, என்ன அர்ச்சனை செய்கிறார்கள்? உள்நோக்கங்கள் கண்டுபிடிக்கிறார்கள்? என்பதைப் படிக்கும் சுவாரசியமே ஏற்பட்டுவிட்டது…அதனால், அதனை நான் தவறவிடுவதில்லை. அதன் அரசியல் மற்றும் உளவியல் பின்னணிகள் பற்றி வேறொரு சமயம் எழுதுகிறேன்).

பாரபட்சமற்று இருப்பதற்கான அர்த்தம், அனைத்துத் தரப்புகளையும் கோணங்களையும் மனத்தில் வாங்கிக் கொண்டு, ஒவ்வொன்றுக்கும் அதற்கே உண்டான நியாயமான இடத்தை வழங்குவதே. அல்லது இன்னொரு விதமாகச் சொல்ல வேண்டுமென்றால், ‘பரந்த மனத்தோடு’ அணுகுவது. சார்புத்தன்மை அற்று அணுகுவது. இதற்கு ஆங்கிலத்தில் ‘லிபரல்’ என்று பெயர். ‘தாராளவாதம்’ என்று இதைச் சொல்லிப் பார்க்கலாம் (ஆனால், அப்போதும் முழுமையான பொருள் வரவில்லை)

ஒரு பத்திரிகையாளனாக இத்தகைய குணம் அவசியம் என்பதே என் கருத்து. எல்லோரையும் ஏதேனும் ஒரு சித்தாந்த, தத்துவ, சாதிய, மத ரீதியான சிமிழுக்குள் அடக்கி, அதையே ஒரு அடையாளமாகவும் வசவாகவும் மாற்றும் உத்தி இன்று செளகரியமாக இருக்கிறது.

இதை மீறி, நல்லதொரு ‘லிபரல்’ மனப்பான்மை உடையவனாக இருப்பதே பெரிய சவால். நான் முடிந்தவரை அதைத்தான் முயற்சி செய்துவருகிறேன்.

பொன்னியின் செல்வன் ஓவியங்கள்!

கல்கி வார இதழில் மீண்டும் பொன்னியின் செல்வன், ஆகஸ்ட் 3, 2014 இதழ் முதல் ஆரம்பிக்கப் போகிறோம். சென்ற இதழில் இருந்து விளம்பரங்கள் ஆரம்பித்துவிட்டன. நாளை வரவிருக்கும் கல்கி இதழில், மேலும் பல விவரங்கள் சொல்லப்பட்டு இருக்கின்றன.

கிட்டத்தட்ட ஜுரம் மாதிரி வேலை நடந்துகொண்டு இருக்கிறது. ஒவ்வொரு தலைமுறையைச் சேர்ந்தவர்களும் பொன்னியின் செல்வனைப் படித்துச் சுவைத்து இருக்கிறார்கள். கடைசியாக வெளியிட்டது 1998 – 2002 காலகட்டத்தில். ஓவியர் பத்மவாசன் அப்போது பொ. செ. தொடருக்கு ஓவியங்கள் தீட்டியிருந்தார்.

பொ.செ. நாவல் எப்படி சுவாரசியமானதோ, அவ்வாறே அதற்குத் தீட்டப்பட்ட ஓவியங்களின் கதைகளும் மனம் கவர்பவை.

1950-54 காலகட்டத்தில்தான் முதல்முறையாக பொன்னியின் செல்வன், கல்கி வார இதழில் வெளியானது. அக்டோபர் 29, 1950 இதழ் முதல் நாவல் தொடங்கியது. அதற்கு முந்தைய இதழான அக்டோபர் 22, 1950 இதழில், அரைப்பக்க விளம்பரம் மட்டுமே வெளியாகி இருக்கிறது. அடுத்த வாரமே இவ்வளவு பெரிய நாவல் தொடங்கப்பட்டது.

எழுத்தாளர் கல்கி குடும்பத்தில் விசாரித்தபோது, ஐந்து பாகங்கள் கொண்ட இவ்வளவு பெரிய நாவலுக்கு எவ்வித குறிப்புகளோ, தயாரிப்புகளோ இருந்தாற்போல் தெரியவில்லை என்கிறார்கள். அத்தனை தயாரிப்புகளும் கல்கி அவர்களின் நினைவில் மட்டுமே இருந்திருக்க வேண்டும்.

முதல் இதழ் தொடங்கி ஓவியர் மணியம் ஒவ்வொரு காட்சியையும் தீட்டிக்கொடுத்திருக்கிறார். அக்காட்சிகளில் உள்ள சம்பவங்கள், விவரங்கள், முகத்தில் காட்டப்படும் உணர்ச்சிகள், பின்னணிகள் அனைத்துமே எழுத்தாளர் கல்கி அவர்களின் நேரடி மேற்பார்வையிலேயே ஓவியர் மணியம் வரைந்தாராம். பல சமயங்களில் மணியன் வரைந்த ஓவியங்களை, கல்கி அவர்கள் மாற்றித்தரச் சொல்ல, அவற்றை அவரது வீட்டில் இருந்தபடியே மாற்றிக்கொடுத்துள்ளாராம்.

அதேபோல், சமீபத்தில் ஓவியர் வேதாவின் மகள் திருமணத்தில், ஓவியர் மணியம் அவர்களின் மகன் ஓவியர் மணியம் செல்வன் அவர்களைச் சந்தித்துப் பேசும் வாய்ப்பு கிடைத்தது. அவர் ஒரு செய்தி சொன்னார். மணியம் ஒரு வாளை வரைந்து எடுத்துக்கொண்டு போய், கல்கி அவர்களிடம் காண்பிக்க, அதன் அழகையும் மிடுக்கையும் கண்ட கல்கி, தன் கதையில் அதை மிகப் பொருத்தமாகச் சேர்த்துக்கொண்டாராம்.

இன்றைக்கும் மணியன் அவர்களின் ஓவியம் கொண்டாடப்படுகிறது.

————

1968ல் மீண்டும் பொன்னியின் செல்வன் தொடராக வெளியிடப்பட்டது. இம்முறை பொன்னியின் செல்வனுக்கு ஓவிய மகுடம் சூட்டியவர் ஓவியர் வினு. இவரது ஓவியங்களுக்கு அடிப்படை ஓவியர் மணியம் வரைந்த ஓவியங்கள்தாம். 

1998ல் பொன்னியின் செல்வன் மீண்டும் தொடராக வெளியானபோது, ஓவியங்களால் அலங்காரம் செய்தவர் ஓவியர் பத்மவாசன். உண்மையிலேயே அவரது ஓவியங்கள் எல்லாம் அலங்காரங்கள்தாம். வண்ணக் கலவையிலும் சின்னச் சின்ன விவரங்களைக் கொண்டுவருவதிலும் அசாத்திய நுணுக்கம் பத்மவாசன் படங்களில் உண்டு. 

பத்மவாசனோடு பேசிக்கொண்டு இருந்தபோது, அவர் எடுத்துக்கொண்டு சிரத்தை என்னை வியப்பில் ஆழ்த்தியது. ஒரு பதிப்பாளர் அவருடைய படங்களைக் கொண்டு பொன்னியின் செல்வன் நூலைப் பதிப்பிக்க திட்டமிட்டு இருந்தாராம். அதில் படங்களை முன்னும் பின்னுமாக வைத்து, லே-அவுட் செய்திருந்தாராம். பாத்திரங்களை உருவாக்கிச் செல்லும்போது, கல்கி தம் எழுத்தில் எத்தகைய ஒரு முன்னேற்றத்தை, முதிர்ச்சியைக் கொண்டு வந்துள்ளாரோ, அதேபோன்றே ஓவியங்களில் அத்தகைய மாற்றங்களைப் பதிவு செய்திருந்தாராம் பத்மவாசன். அது தலைப்பாகையாகவோ, வாளை வைத்துக்கொள்ளும் விதமாகவோ, பெண் பாத்திரங்களின் உடையலங்காரமாகவோ இருக்கலாமாம். முன்னும் பின்னும் படங்கள் பதிப்பிக்கப்பட்டால், ஓவியத்தில் உள்ள மாற்றங்களை வாசகர்கள் உணர்ந்துகொள்ள முடியாது என்றார்.

இந்த நாவலுக்கு ஓவியம் தீட்டிய அனைத்து ஓவியர்களுமே அதனோடே பயணம் செய்து, தம் மனத்துக்குள் பாத்திரங்களையும் காட்சிகளையும் உணர்ச்சிகளையும் சம்பவங்களையும் யூகித்துக்கொண்டு, கோடுகளின் வழியாகத் தம் மேதமையைப் பொழிந்திருக்கிறார்கள்.

——–

இப்போது அதேபோன்றதொரு சவால், ஓவியர் வேதாவுக்குக் காத்திருக்கிறது. பிரபஞ்சன் எழுதிவரும் “மகாபாரத மாந்தர்கள் – காலம் தோறும் தர்மம்” தொடரிலேயே வேதாவின் ஓவியங்கள் வாசகர்களைக் கொள்ளை கொண்டிருக்கிறது.

இப்போது, பொன்னியின் செல்வன் தொடருக்கு, ஓவியர் வேதா அவர்களே ஓவியங்களைத் தீட்டிக் கொடுக்கிறார். ஒவ்வொரு படமாக அவரிடம் இருந்து வாங்கும்போதும் புதிய அனுபவமாக இருக்கிறது. 

கதையில் படித்த காட்சிகள், எண்ணங்கள் ஆகியவை, ஓவியரின் கைத்திறனில் பரிமளிக்கும்போது, அதன் வீச்சு விசேஷமாக இருக்கிறது. அவரது படங்களைக் கொண்டே அத்தனை விளம்பரங்களும் தயாராகிக்கொண்டு இருக்கின்றன. பேனர்கள், பஸ் பேக் பேனல்கள், போஸ்டர்கள், ரயிலுக்குள் ஸ்டிக்கர்கள், விளம்பர வாகனங்கள், நாளிதழ் விளம்பரங்கள் என்று அடுத்த இருபது நாள்களும் தமிழகமெங்கும் பொன்னியின் செல்வன் ஓவியங்கள் வலம் வரப்போகின்றன.

ஆகஸ்ட் 3,014 முதல், கல்கி வார இதழில், எழுத்தாளர் கல்கி அவர்கள் வழங்கும் இலக்கிய அனுபவத்தோடு ஓவிய எழிலும் வாசகர்களுக்கு விருந்தாகக் காத்திருக்கிறது. 

வார்த்தை வாங்கியவன்!

சமீபத்தில் ஒரு கட்டுரையில் “சுனாமி” என்ற சொல்லைப் பயன்படுத்த வேண்டி வந்தது. எழுதும்போதே உள்ளம் பதற ஆரம்பித்துவிட்டது. அதற்கு இணையாக வேறொரு சொல் சட்டெனக் கிடைக்கவில்லை. எழுதி, பின் நிறுத்தி, மாற்ற நினைத்து, வார்த்தை தேடி… சில கணங்கள் அவஸ்தை. 2004 ஆழிப்பேரலையும் அது என்னுள் ஏற்படுத்திய பாதிப்புகளும் மிக மிக ஆழமானது. அந்தச் சொல்லை நினைத்தாலே அது ஏற்படுத்தும் பயவுணர்வு கூடவே சேர்ந்து வருவதைத் தவிர்க்க முடியவில்லை. 

சொற்களுக்கு பயந்தவன் நான்! சொல்லுக்குள்ள பலம் அது. எந்தச் சொல்லும் எளிமையானது அல்ல. ஆசீர்வாதமாகவோ வசவாகவோ மாறும் தன்மை அதற்குண்டு. இது என் பள்ளி கணித ஆசிரியரிடம் இருந்து கற்றது. இன்றைக்கு கணிதத்தில் எனக்கு உள்ள ஆர்வத்துக்கும் புரிதலுக்கும் காரணம் அவரே. அவர் பி.எஸ். சி. கணிதம் மட்டுமே படித்தவர். எம்.எஸ்.சி. படிக்க முடியாமல் – முடிக்க முடியாமல் – வலி சுமந்தவர். ஒருமுறை சொன்னார், “நான் என்னோட பேரண்ட்ஸ்கிட்ட வாங்கின சாபம்தான் காரணம்…இன்னிவரைக்கும் முடிக்க முடியல…நல்ல வார்த்தை வாங்க முடியலன்னா கூட பரவாயில்லை… திட்டு மட்டும் வாங்கிடக் கூடாது.’’

நானும் அப்படி யாரிடமேனும் வார்த்தை வாங்கிவிட்டேனோ என்று அவ்வப்போது யோசிப்பதுண்டு. அடுத்தவர்களிடம் மிக ஜாக்கிரதையாகப் பேசுபவன் நான். எந்தச் சந்தர்ப்பத்திலும் யாரையும் மனம் நோக அடித்துவிடக் கூடாது, சுடு எண்ணம், சுடுசொல்லுக்கு ஆளாகிவிடக் கூடாது என்பதில் நிரம்ப கவனம் உண்டு. ஆனால், எனக்கு தெரியாமல் யாரிடமோ அப்படி “வார்த்தை வாங்கியிருக்கவேண்டும்.” இன்று திரும்பிப் பார்க்கும்போது, என் கல்வி இவ்வளவு தூரம் தடைபட்டிருக்க வேறு எந்தக் காரணத்தையும் என்னால் நினைத்துப் பார்க்க முடியவில்லை. 

பி.எஸ்.சி (கணிதம்) முடித்தேன். எம்.எஸ்.சி. ஓராண்டு மட்டுமே படித்தேன். தொடரமுடியவில்லை. வேலைக்கு வந்துவிட்டேன். பின்னர் எம்.பி.ஏ. சேர்ந்தேன். இது 1994. முடிக்கவே முடியவில்லை. கிட்டத்தட்ட பதினைந்து ஆண்டுகள். ஏதோ ஒரு காரணம். ஏதோ ஒரு தடை. சிக்கல். படிப்பின் அருகே போகவே முடியவில்லை. படிக்க முடியவில்லை என்ற வேதனை என்னை ஆட்டிப் படைத்த இரவுகள் எண்ணற்றவை. பலமுறை இதே சென்னை பல்கலைக்கழகம் வழியாகத்தான் போவேன், வருவேன். ஒருமுறை கூட உள்ளே போய், நின்றுவிட்ட நான்கு பேப்பர்களை எழுதி, எம்.பி.ஏ. கிளியர் செய்யவேண்டும் என்ற உந்துதல் ஏற்பட்டதில்லை. 

ஆனால், அதிசயம் 2010ல் நடந்தது. விடுபட்ட நான்கு தாள்களையும் ஒருசேர படித்து எழுதி, முடித்தேன். தாமதமானாலும் நான் எம்.பி.ஏ. படிப்பை முடித்த மகிழ்ச்சியோடு, நான் வாங்கிய வார்த்தை என்னை இவ்வளவு தூரம் அலைக்கழித்திருக்கிறது, அதை ஓரளவு தகர்ந்தெரிந்து மீண்டுவிட்டேன் என்ற ஆசுவாசமே நிம்மதி அளித்தது. 

எம்.பி.ஏ. முடிக்கவே முடியாது என்ற உறுதியாக இருந்த சமயத்தில், வேறு ஏதேனும் படிக்கவேண்டும் என்ற எண்ணம் பிறந்தது. அப்போது, எம்.ஏ. இதழியல் படிக்க ஆரம்பித்தேன். எப்போது எந்தத் தடை ஏற்பட்டுவிடுமோ என்ற பதற்றம் அந்த இரண்டு ஆண்டுகளும் எனக்கிருந்தது. என் வரையில் நான் ஒழுங்காக படித்தேன், பல செய்திகள் புதியவை, புரிந்துகொண்டேன். ஆனால், தேர்வு அறைக்குப் போனபோதுதான், மனம் வெதும்பிற்று. முழு அறையிலும் மாஸ் காப்பி. ஒருவர் புத்தகத்தைத் திறந்துவைத்துக்கொண்டு பதில் எழுதினார். கேள்வி கேட்ட இன்விஜிலேட்டரிடம் சண்டைக்கே போய்விட்டார் அவர். இப்படிப்பட்ட ஒரு டிகிரி எனக்குத் தேவையா என்று எண்ணம் ஏற்பட்டுவிட்டது. தேர்வு அறையில் இருந்து எழுந்து வெளியே வந்துவிடத் துணிந்துவிட்டேன். ஒன்றரை மணிநேரத்துக்குப் பின்னரே வெளியே செல்ல அனுமதி என்ற நிலை. மனம் ஒருநிலைப்பட கொஞ்ச நேரமானது. என்னால் எதையும் மாற்ற முடியாது; என் வரையில் ஒழுங்காக எழுதினேன் என்ற மத்தியமர்களின் திருப்தி / கையாலாகத்தன லாஜிக் எட்டிப் பார்த்தது. அமைதியாக அத்தனை தாள்களையும் எழுதி முடித்து, இரண்டு ஆண்டுகளில் இதழியல் டிகிரி பெற்றேன். 

இப்போது அடுத்த கட்டமாக, முனைவர் ஆய்வு செய்யும் முயற்சியில் இறங்கியிருக்கிறேன். எல்லாம் ஒழுங்காக நடந்திருக்குமானால், என்னுடைய 25 வயதில் பி.எச்.டி. முடித்திருக்கவேண்டும்; அதுதான் நான் அடைய நினைத்த இலக்கு. இருபதாண்டுகள் தாமதம். கல்வி என்னும் மலையில் நான் விழுந்து விழுந்து, தடுமாறித் தடுமாறியே மேலே உயர்ந்திருக்கிறேன்.

ஆனால், அதில் எனக்கு இருக்கும் ஆர்வம் என்றுமே குறைந்ததில்லை. யார் கல்வி வாய்ப்புகள், புதிய துறைகள், புதிய படிப்புகள் பற்றிப் பேசினாலும், ஆவென வாயைத் திறந்து பார்த்துக்கொண்டு இருப்பேன். இப்போதேனும் எந்தத் தடையும் இன்றி, என் முனைவர் ஆய்வு தொடங்கவேண்டும், நல்லதொரு தீசிஸ் எழுதி வழங்கவேண்டும் என்றெல்லாம் ஆயிரம் பயங்கள். 

கல்வி பெரும்சொத்து. அதற்கு புத்திசாலித்தனம், உழைப்பு மட்டும் போதாது, கூடவே கொஞ்சம் இறைவன் அருளும் வேண்டும். வார்த்தைகள் வாங்காமலும் இருக்கவேண்டும்.

கூருணர்வுச் சொற்கள்!

தொலைக்காட்சியில் நான் செய்திப் ப்ரியன். மெகா தொடர்கள் பார்ப்பவன் அல்ல. இரண்டு நாள்களுக்கு முன்பு, கூடத்தில் ஓடிக்கொண்டு இருந்த தொலைக்காட்சி தொடர் நடுவே சில நொடிகள் நின்றேன். பிரபலமான “சரவணன் – மீனாட்சி” தொடரின் இடையே வரும் முன்னோட்டம் அது. ஒரு முதிய பெண் இன்னொரு பெண்ணைப் பார்த்துச் சொல்கிறார் : “தமிழுக்குத்தான் இது ஃபர்ஸ்ட் நைட். உனக்கு அப்படியா என்ன…” அந்தப் பெண் கூனிக் குறுகி தவித்தாள். அதற்கு மேல் அங்கே என்னால் நிற்க முடியவில்லை. கதையில் வரும் அந்தச் சூழ்நிலையை என்னால் புரிந்துகொள்ள முடிந்தது. இந்த வசனத்தை எழுதியவருக்கு எவ்வளவு மனவக்கிரம் இருக்கவேண்டும்? அதைக் காட்சிப்படுத்தி திரைக்கதை எழுதிய இயக்குனர் எவ்வளவு கூருணர்வு இல்லாதவராக இருக்கவேண்டும்? மக்கள் அனைவரும் பார்க்கும் ஒரு தொடரில் இவ்வளவு கீழ்த்தரமாக யோசிக்க முடியுமா? என்னால் ஜீரணித்துக்கொள்ளவே முடியவில்லை.

வார்த்தைகளை மணிமணியாகப் பயன்படுத்த வேண்டாமா? சூழ்நிலைக்கேற்ப, அங்கு நிலவும் உணர்வுகளுக்கு ஏற்ப, சொற்களைத் தட்டித் தட்டிப் பார்த்துப் பயன்படுத்த வேண்டாமா? இரண்டாயிரம் ஆண்டு பண்பாடு, வளர்ச்சி, மூத்த குடி என்றெல்லாம் பெருமைப்படுகிறோம். அப்படியானால், நம் மனங்களில் எவ்வளவு தூரம் பண்பாடு மேலோங்கி இருக்கவேண்டும்? அது நம் வார்த்தைகளில் எவ்வளவு அழகாக பிரதிபலிக்க வேண்டும்? ஏன் இல்லாமல் போச்சு நாகரிகம்? தெரியவில்லை.

பல சொற்களைப் பயன்படுத்த நான் மிகவும் சங்கடப்படுவேன். வேறு வார்த்தைகளுக்காக ரொம்ப நேரம் காத்திருந்த அனுபவமும் உண்டு. “விதவை” அப்படிப்பட்ட சொல். பயன்படுத்த மனம் ஒப்பாத சொல். பயன்படுத்தித் தேய்ந்து போன சொல் மட்டுமல்ல; அது எதிர்மறை எண்ணங்களைச் சுமந்துள்ள சொல். பெண்ணுக்கு எந்த வகையிலும் பெருமை சேர்க்காத சொல் அது. சொல்லப் போனால், அது அப்பெண்ணை இன்னும் காயப்படுத்தவல்லது, இழிவுபடுத்தவல்லது. மனம் நிறைந்த கணவனை இழந்து நிற்கும் ஒரு பெண்ணை, எவ்வளவு கெளரவத்தோடு எடுத்துப் பேசவேண்டும்? அவளை எழுத்தால் கூட நான் காயப்படுத்த விரும்பவில்லை.

“கைம்பெண்” என்று கொஞ்ச நாள் எழுதினேன். அதுவும் ஒப்பவில்லை. பின்னர், “வைதவ்யம்” என்ற சொல்லைக் கண்டுபிடித்தேன். புழக்கத்தில் இல்லாத சொல்தான். ஆனால், ’விதவை’யும், ’கைம்பெண்’ணும் அடைந்துள்ள நலிவை, இச்சொல் இன்னும் அடையவில்லை. என் மனத்துக்குள் உணர்வு ரீதியாக ”வைதவ்யம்” இன்னும் தேய்ந்து, பொருளழிந்து போகவில்லை. கெளரவமும் சிதையவில்லை.

இதேபோல், பெண்ணைக் குறிக்கும் “ஃபிகர்” என்ற சொல்லை என்னால் பயன்படுத்தவே முடியாது. இது அவளைக் கொச்சைப்படுத்துவது மட்டுமல்ல, எல்லாவிதமான தப்பர்த்தங்களுக்கும் இட்டுச்செல்லவல்லது. அதுவும் “செம ஃபிகர்” என்பதெல்லாம் பாலியல் ரீதியாக மிகவும் வக்கிர மனத்தின் வெளிப்பாடு. ஒரு பெண்ணை சகமனுஷியாக அல்லாமல் சதைப் பிண்டமாக நோக்கும் கற்காலச் சிந்தனையை வெளிப்படுத்தும் சொல் அது.

கூருணர்வு என்பது சமூகமொழியில் வெளிப்பட வேண்டும். சமூகம் முன்னேறி இருக்கிறது என்பதற்கு அதுதான் அடையாளம். இப்போதெல்லாம் யாரும் “ஊனமுற்றவர்” என்று பயன்படுத்துவதில்லை; நல்ல சொல் “மாற்றுத் திறனாளி.” அரசியலில் யாரும் “பொய்” சொல்வதில்லை; “உண்மைக்கு மாறான” செய்திகளையே சொல்வார்கள். ”அலி” அவதூறு; “அரவாணி” நீங்கி, இப்போது எங்கும் “திருநங்கை”தான்.  ”தாழ்த்தப்பட்டவர்கள்”, “தலித்”, “பிற்படுத்தப்பட்டவர்கள்” எல்லாம் சமூகம் இவர்களுக்கு உரிய மரியாதையைக் கொடுக்க விரும்புகிறது என்பதை வெளிப்படுத்தும் சொற்கள்.  இதற்கு முன்பு பயன்படுத்தப்பட்ட சொற்களில் தொக்கி நின்றவை மேலாதிக்கம், ஆணவம், திமிர் ஆகியவை. அவற்றை சமூகம் விலக்க விரும்புகிறது என்பதற்கு முதல் படிதான், சொற்களில் காட்டப்படும் கரிசனம். பொலிட்டிக்கல் கரெக்ட்னஸ், ஜெண்டர் கரெக்ட்னஸ் மிகவும் முக்கியம்.

உணர்வுகளுக்கான மொழி வார்த்தைகள். அது அடுத்தவரைக் காயப்படுத்தக் கூடாது. கொச்சைப்படுத்தக் கூடாது. இந்த ஜாக்கிரதையோடுதான் ஒவ்வொரு எழுத்தும் உருவாக வேண்டும். டிவியாக இருந்தாலும் சரி, இதழாக இருந்தாலும் சரி – இது தான் நியதி.

ஈரத்தை மீட்டெடுக்க…

பாப்புலர் இதழ்களானாலும் சரி, இலக்கிய இதழ்கள் ஆனாலும் சரி, நேரடி நாவல்கள் ஆனாலும் சரி, எங்கும் நல்ல காதல் கதையே காணோம். சட்டென்று ஞாபகம் வரும் கதைகள் எல்லாம் இருபதாண்டுகளுக்கு முந்தைய கதைகளாகவே உள்ளன. மாதநாவல்கள், தொடர்கதைகள் ஆகியவற்றில் சித்திரிக்கப்படும் காதல் வெகு மேம்போக்காக, உள்ளத்தைத் தீண்டாமல், மேற்பரப்பிலேயே நிற்கின்றன. ஆண், பெண்கள் ஒன்று ஏற்கெனவே சந்தித்து, காதல் செய்துகொண்டிருப்பார்கள்; அல்லது காதலுக்கு பெற்றோர், இன்ன பிற எதிர்ப்புகளைச் சந்தித்துக்கொண்டு இருப்பார்கள். அங்கே காதலைவிட, வேறு பிரச்னைகளே முக்கியத்துவம் பெற்றிருக்கும். வாசகனின் மனத்தை ஈர்க்கும் காதல் கதைகளுக்கு இன்றைக்கு கடும் பஞ்சம்.

இலக்கிய இதழ்களில் எழுதப்படும் சிறுகதைகளில், காதலுக்கு இடமே இல்லை. அங்கே காமம் தான் தூக்கல். ஆண் – பெண் பாத்திரங்கள் ஏதோ ஒருவித மனப்பிரச்னைகளோடு அலைவார்கள். மென்மையை முற்றிலும் இழந்தநிலையில், உடல்ரீதியான தேவைகளே முன்னிற்கின்றன. காமத்தை எழுதுவதுதான் அதிர்ச்சி அளிக்கும்; அதுதான் நவ நவீனத்துவம், மரபுகளை மீறுதல்; புது வித எழுத்து என்ற எண்ணங்கள் ஆழ வேரூன்றி இருப்பது தெரிகிறது. உடைந்த மனங்களையும், நொறுங்கிய உறவுகளையும், நிம்மதியற்ற மனிதர்களையும் பதிவு செய்வதில் காட்டப்படும் ஆர்வம், நல்ல ஆரோக்கியமான உறவுகள் பற்றி எழுதுவதில் காட்டப்படுவதில்லை. காதல் ஒருவித பொய்; அல்லது எழுதி எழுதி தேய்ந்துபோன கருப்பொருள் என்ற காரணங்களும் பின்னணியில் இருக்கலாம். காதல் கதை எழுதுவது இன்றைய காலகட்டத்தில் இலக்கிய அந்தஸ்துக்குரிய அம்சமாகவும் இல்லாமல் இருக்கலாம்! வார்த்தைகளுக்குள் சிக்கிக்கொண்டு, அருவ உணர்வுகளுக்கு உருவம் கொடுக்க முயல்வதுதான் வெற்றிகரமான இலக்கிய இதழ் எழுத்தாளர்களுக்கான அடையாளமாக மாறிப்போய்விட்டதோ என்னவோ!

நேரடி நாவல்களிலும் இதே பிரச்னைதான். காதலைத் தவிர்த்துவிட்டு வேறேதோ எழுதுகிறார்கள். அல்லது, காதலைத் தொடாமல், நேரடியாக உடல் ரீதியான உறவுகளுக்குத் தாவிவிடுகிறார்கள். இதையெல்லாம் அடிப்படை தரவுகளாக கொண்டு சமூகத்தைப் புரிந்துகொள்ள முயன்றால், இப்படித்தான் புரிந்துகொள்ள முடிகிறது:

மனித வாழ்வுக்கு ஆதார உணர்வான அன்பை நாம் தொலைத்துவிட்டோம்.

அன்பின் பல்வேறு முகங்களில் ஒன்று காதல். அதன் நளினத்தை, எழிலை, கூச்சத்தை, விவரிக்கயியலா வலிகளை, எதிர்பார்ப்புகளை எல்லாம் நாம் இழந்து நிற்கிறோம். மிருது உணர்வு நீங்கி, முரட்டுத்தனமே கோலோச்சுகிறது.

அதற்கான அத்தாட்சிகளைத்தான் தில்லி மருத்துவக் கல்லூரி மாணவி வன்கொடுமை முதல் அனைத்து இடங்களில் காண்கிறோம்.

காதல் ஓர் ஆரோக்கிய உணர்வு. மனத்தை வளப்படுத்தவல்லது. உறவுகளை மேம்படுத்தவல்லது. எதிர்கால நம்பிக்கை, துணிவு, வாழ்க்கை மேல் பிடிப்பு, சகமனிதர்களை நேசித்தல் ஆகிய அனைத்தையும் ஏற்படுத்தவல்லது. அதற்கு எந்தவிதமான எல்லைகளும் வேலியமைக்க முடியாது. 

இலக்கியத்தில் காதல் கதைகளே இல்லாமல் போனதுகூட, தில்லி சம்பவத்துக்குக் காரணமாக இருக்ககூடுமோ என்ற எண்ணம் எனக்குண்டு. ஒரு சமூகத்தின் கட்டமைப்பில், பேசப்படும் பல்வேறு உணர்வுகள்தான், மனிதர்களின் மனங்களைக் கட்டமைக்கிறது. இன்று, பணம் சம்பாதித்தல், உயர் பதவிகளை அடைதல், அமெரிக்கா செல்தல், கார் வாங்குதல், வீடு கட்டுதல் என்று பொருள்ரீதியான வாழ்க்கை முக்கியத்துவம் பெற்றுவிட்டது. சமூகத்தில் திரும்பிய பக்கமெல்லாம் இவைதான் முன்னிறுத்தப்படுகின்றன. யாரும் அன்பையோ கருணையையோ சகோதரத்துவத்தையோ இணக்கத்தையோ – உணர்வுகள் சார்ந்த எதையுமே பேசுவதில்லை. மெல்லமெல்ல உணர்வுகள் மொண்ணையாகி, இயல்புத்தன்மை விலகி, முரட்டுத்தனமே மேலே எழுகிறது.

இன்றைய நிலையில், நாம் அன்பை மீட்டெடுப்பது மிகவும் அவசியம். மிருது உணர்வுகளை போதிப்பது அவசியம். ரசனையைக் கட்டியெழுப்புவது அவசியம். பொறியியல் படிப்புகளைவிட, கலைத்துறைப் படிப்புகள் முன்னணி பெற வேண்டும். கவிதையும் கதையும் ஓவியங்களும் நாடகங்களும் நுண்கலைகளும் மனிதர்களை மனிதர்களாக மீட்டெடுக்க உதவும் கருவிகள். வரட்டுத்தனத்தை, தனிமையை, அந்நியமாதலை விலக்கி, ஈரத்தையும் பாசத்தையும் ஊட்டுவது கலைஞர்களின் கடமை.  

இத்தனை ஆண்டுகளும் நான் காதல் கதைகளே எழுதியதில்லை. எழுதிய சிலவும் உணர்வுரீதியாக எனக்குத் திருப்தி தராதவை. வெண்ணிற இரவுகள், வண்ணநிலவனின் கடல்புரத்தில், மெஹரூனிஸா, பிரபஞ்சனின் பல கதைகளைப் படித்த பின்னர், என்னால் இப்படியெல்லாம் எழுதவே முடியாது என்ற நிச்சயமான தயக்கமே முதல் காரணம். அப்படிப்பட்ட உச்சங்களைத் தொட்டப் பிறகு, வேறு உயரம் குறைவான படைப்புகள் கவனமே பெறாமல் போய்விடும் என்ற அச்சமும் மறுகாரணம். 

ஆனால், இன்று சமூக ரீதியாக காதல் கதைகளுக்கான தேவை அதிகரித்துள்ளது. உணர்வுகளை மீட்டெடுக்க, ஈரத்தை மீட்டெடுக்க, மனிதத்தின் மேன்மையை உணர்த்த, காதல் கதைகளே ஒரே வழி.

சரியாக வருகிறதோ, இல்லையோ, இனி காதல் கதைகள் எழுதுவதாக இருக்கிறேன்!

 

மிடில்கிளாஸ் அல்பத்தனங்கள்?

திருமணமோ, வேறு வைபவங்களோ, எப்போது வெளியே உணவு உட்கொண்டாலும் வீட்டுக்கு வந்தவுடன், சூடாக ஒரு டம்ளர் வெந்நீர் குடித்துவிட்டே படுப்பேன். வெளி உணவுகளில் காரமோ, எண்ணெயோ அதிகமாக இருப்பதே காரணம். வெந்நீர் பருகுவது சின்னவயசு பழக்கம். எந்த உடல் பிரச்னையானாலும் வெந்நீர் எனக்குக் கைகண்ட மருந்து. ஜூரம் வந்தாலும் சரி, சோர்வு, அசதி, வலி ஏற்பட்டாலும் சரி, வெந்நீரைக் குடித்தால் போதும். சற்று நேரத்தில் உடல் தெம்பாகிவிடும். அதில் என்ன மாயம் இருக்கிறது என்று தெரியவில்லை. செரிமானக் கோளாறு இருந்தாலும் வெந்நீர்தான். உணவு உடனே ஜீரணமாகிவிடும். அல்லது வாயால் வெளியேறிவிடும். எதுவானாலும் நல்ல பலன்தான்!

வெந்நீரை நோய் நிவாரணியாகப் பயன்படுத்துவது சரியா என்று தெரியவில்லை. எனக்கு அது சரியாக வேலை செய்கிறது. என் குடும்பத்தினருக்கும் இதைப் பரிந்துரைப்பேன். ஆனால், வெந்நீர் குடிப்பது நிறைய பேருக்குப் பிடிப்பதில்லை. குளிர்ந்த நீர் சுவை இருப்பதாக கருதுவோர், இதில் எந்தச் சுவையும் இல்லை என்றே சொல்லக் கேட்டிருக்கிறேன். வெறும் நீர்தான், சப்பென்று இருக்கும் என்று முகம் சுளிப்பதைப் பார்த்திருக்கிறேன். அந்த வெப்பம்தான் அதன் மகிமையே. நீரை நன்கு கொதிக்க விட்டு, டபரா டம்ளரில் எடுத்துக்கொள்வேன். வாய் பொறுக்கும் சூட்டுக்கு அதை ஆற்றி,வெப்பத்தைத் தணித்து, பின்னர் குடிக்கத் தொடங்குவேன். நீர் தொண்டை வழியாக, நெஞ்சில் இறங்கி, வயிற்றை அடைவதை, வெப்பப் பாதை சொல்லும். உணவகங்களில், வெந்நீர் கேட்டுவாங்கிப் பருகும் மூத்தவர்களைப் பார்த்திருக்கிறேன்.

வேறொரு சந்தர்ப்பத்தில் இணையத்தில், வெந்நீர் பற்றி படித்தபோது, ஏராளமான தகவல்கள் கிடைத்தன. உடல் எடையைக் குறைக்கக்கூட வெந்நீர் பயன்படும் என்பதெல்லாம் கொஞ்சம் அதிகபட்சமாகத் தோன்றியது. ஆனால், அது உடலில் உள்ள நச்சுத்தன்மையை நீக்க உதவுகிறது, ஜீரணத்துக்கு கைகண்ட மருந்து என்பதெல்லாம் ஏற்கத்தக்கவை. வெந்நீருக்கு ஏதோ மருத்துவ குணம் இருக்கவேண்டும் என்பதை மட்டும் எல்லோரும் ஏற்கின்றனர்.

தேங்காய் எண்ணெய் மற்றொரு அருமருந்து. எந்தப் புண்ணாக இருந்தாலும், அடியாக இருந்தாலும், தோல் சம்பந்தமாக எந்தவிதமான குறைகள் தெரிந்தாலும், தேங்காய் எண்ணெய்தான் உடனடி நிவாரணி. பல வீடுகளில் தேங்காய் எண்ணெய் இருப்பதில்லை. பெண்கள், தங்கள் கேசத்துக்கு வேறு வகை கிரீம்களைப் பயன்படுத்தத் தொடங்கியபின், தேங்காய் எண்ணெய்க்கு மவுசு போய்விட்டது போலும். தேங்காயைப் பற்றிய இன்றைய சிந்தனைகள் வெகுவாக மாறிவிட்டன. அதை கொழுப்புச் சத்து நிறைந்தது, அதன் வாசனை ஒவ்வாமையை ஏற்படுத்துகிறது என்று சொல்லப்படுகிறது. சின்னச் சின்ன காயங்களுக்கு தேங்காய் எண்ணெய்யும் நீபாசல்ஃப் பெளடரும்தான் கைமருந்து.

காற்றடைத்த சோடா (carbonated water) இன்னொரு பிரமாதமான கைமருந்து. எப்போது செரிமானக்கோளாறு ஏற்பட்டு, வயிற்றுப்போக்கு உண்டானாலும் சோடாவை வாங்கி ஒரே மூச்சில் குடித்து முடித்துவிட்டால் போதும். வயிறு திம்மென்று இருக்கும். அடுத்த வேளையே வயிற்றுப் போக்கு முற்றிலும் நின்றுவிடுவதைப் பார்த்திருக்கிறேன்.

இவற்றையெல்லாம் மற்றவர்களுக்குச் சொல்லும்போது, ஒருவித ஏளனத்தைச் சந்தித்திருக்கிறேன். மிடில்கிளாஸ் அல்பத்தனத்தின் வெளிப்பாடாக இவை பார்க்கப்படுகின்றன. நேரடியாக மருத்துவரிடம் செல்வதும், அவர் எழுதித்தரும் மருந்துகளை வாங்கி உண்பதுமே மிகச் சரியான வழி என்று ஆணியடித்தாற்போல் மக்கள் மனங்களில் ஆழப்பதிந்துவிட்டது. அதுதான் சரியான முறை என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. வழிவழியாக ஒரு சில மருத்துவமுறைகள் நல்ல பலனைக் கொடுத்திருக்கின்றன என்பதும் உண்மை.

உடலைப் புரிந்துகொள்வதிலும் அதற்கேற்ப சிகிச்சைமுறைகளை உருவாக்குவதிலும் ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொரு நாட்டிலும் ஆர்வம் காட்டப்பட்டிருக்கிறது. இதில் ஒருசில இன்று வழக்கொழிந்திருக்கின்றன; ஒரு சில மேலோங்கி இருக்கின்றன. இதில் தவறு, சரி என்று எதுவுமில்லை. எல்லாமே மக்கள் சாய்ஸ்தான்.

எனக்கும் மாற்று மருத்துவம் பக்கம் போக பயம் அதிகம். வாய்ப்புண் வந்தபோது, உறவினர் ஒரு தந்த தைரியத்தில், அண்ணா நகரில் இருந்து ஒரு சித்த மருத்துவரைப் பார்த்தேன். வலது உள்ளங்கையை விரிக்கச் சொன்னார் அவர். அதற்கு மேலே, மணியின் நாக்கு போலிருந்த ஒரு குமிழைக் கையில் பிடித்துக்கொண்டு, ஆட்டினார். கூடவே, நாடியையும் பிடித்துக்கொண்டார். என் உடலின் தன்மை பற்றியும் அதில் இருக்கக்கூடிய பிரச்னைகள் பற்றியும் அவர் சொல்லச் சொல்ல, அசந்து போனேன். என் மாமியாருக்கு மூட்டுவலி. அவரிடம் பேசிக்கொண்டே வலது கை நடுவிரலில், பால்பாயிண்ட் பேனாவால் அழுத்தி உருட்டினார் அந்த மருத்துவர். “வலி குறைஞ்சிருக்காம்மா?” என்று கேட்டபடி, அடுத்த ஒரு சில நிமிடங்கள் பேனாவால் தொடர்ந்து அழுத்தம். எனக்கே நம்புவதற்கு கொஞ்சம் யோசனையாகத்தான் இருக்கிறது. மூட்டு வலி குறைந்திருப்பதாக மாமியார் தெரிவித்தார்.

என் நண்பர் டாக்டர் ராஜா வெங்கடேஷ், சென்னை பொது மருத்துவமனையில் உள்ள கார்டியோதொராசிக் சர்ஜன். பேசும்போதெல்லாம், அவர் ஒரு விஷயத்தை வலியுறுத்துவார். ஆங்கில மருத்துவம் ஒரு சில நோய்களுக்கு மிகச் சிறந்தது. வேறு சில நோய்களை மாற்று மருத்துவர்கள் மிகச் சிறப்பாக குணமடைய வைக்கிறார்கள். அவர்கள் சொல்வதை அலோபதி மருத்துவர்கள் ஏற்றுக்கொள்ளவே மாட்டார்கள். இதுதான் பெரிய பிரச்னை. எங்கெல்லாம் முடியுமோ அங்கெல்லாம் மருத்துவ முறைகளை இணைத்து, ஒருங்கிணைந்த மருத்துவ முறையை உருவாக்கவேண்டும். நாம் மக்களுக்குதானே உதவப் போகிறோம். அவர்கள் விரைவாகவும், தொடர் பாதிப்புகள் இல்லாமலும், பின் விளைவுகள் ஏதுமின்றியும் குணமடைந்தால், அதைவிட பெரிய சாதனை என்ன இருக்க முடியும் என்று கேட்பார் டாக்டர் ராஜா.

நியாயம்தானே?