தமிழில் புத்தக அட்டைகளில் பெரும் மாறுதலைக் கொண்டு வந்தது ழ வெளியீடுதான் என்று நினைக்கிறேன். அல்லது அதற்கு முன்பே இது ஆரம்பித்துவிட்டதோ, தெரியவில்லை. அதுவரை, புத்தக அட்டையோ, அல்லது புத்தக வடிவமைப்போ, ஒரு தேர்ந்த ஓவியரைக் கொண்டு செய்யப்பட்டதில்லை.
லக்ஷ்மி கிருஷ்ணமூர்த்தி நடத்திய புக்வென்சர் நிறுவன நூல்களில், கலாசாகரம் ராஜகோபால் என்றொரு ஓவியரின் பங்களிப்பு பெரிய அளவில் இருந்திருக்கிறது. பின்னாளில் அவர் திருவண்ணாமலை சென்று ரமண மகரிஷியின் மார்பளவு சிலையைச் செய்துகொடுத்தார் என்று எஸ்.வைதீஸ்வரன் சொல்லியிருக்கிறார்.
ழ வெளியீடுகளில்தான் ஓவியர் ஆதிமூலத்தின் கைவண்ணம் அதிகம் மிளிர்ந்தது. அவர் ழ வெளியீடுகளின் நூல்களுக்கு அட்டை ஓவியம் வரைந்து தந்ததோடு, அவரே அதன் ஆர்ட் டைரக்டராகவும் இருந்திருக்கிறார். ஆத்மாநாம், ஞானக்கூத்தன், ஆர்.ராஜகோபாலன் போன்றவர்களுக்கு நவீன ஓவியத்தையும் நவீன இலக்கியத்தையும் ஏதோ ஒரு புள்ளியில் இணைக்கவேண்டும் என்ற அவா இருந்திருக்கிறது.
சொல்லப்போனால, கசடதபற பத்திரிகையில்தான் இதற்கான ஆரம்பம் ஏற்பட்டது. அதுநாள் வரை இருந்த புத்தக வெளியீடுகளில் ஒரு ஓவியம் அட்டைப் படத்தை அலங்கரிக்கும். அல்லது வெறும் எழுத்துகள் பளிச்சிடும். கட் கலர் அட்டைப் படங்கள்தான் பெரும்பாலும். அந்தக் காலத்தில் இன்று இருக்கும் வசதிகள் இல்லாததால், பிளாக் எடுத்து, ஒவ்வொரு கலராக ஓட்டி, புத்தக அட்டை தயார் செய்வார்கள்.
தொழில்நுட்பம் எல்லாவற்றையும் எளிமைப்படுத்தியிருப்பது உண்மை.
தொண்ணூறுகளில், ஆதிமூலத்தின் தொடர்ச்சியாக ஓவியர் மருது பெரிய அளவில் தமிழ் புத்தகங்களின், தலைப்பு எழுத்துகளின் தலையெழுத்தை நிர்ண்யித்தார். வித்தியாசம் என்ற பெயரில், எல்லா நூல்களும் இந்தக் கோணல்மாணலான எழுத்துகளைத் தாங்கி வெளிவந்தன. அன்னம், அகரம் ஆகிய பதிப்பகத்தின் நூல்கள் இத்தகைய அட்டைகளைக் கொண்டு இருந்தன. நர்மதா பதிப்பகமும் தமது நாவல் புத்தகங்களுக்கு இத்தகைய ஓவியங்களைப் பயன்படுத்தின.
ஆனால், இந்தப் புதுமையை ஏற்காதவர்களும் நிறையவே தமிழ்ப் பதிப்புலகில் இருந்திருக்கிறார்கள். தீபாவளி, பொங்கல் வாழ்த்து அட்டை ஓவியங்கள், புகைப்படங்களையே அட்டைப் படஙக்ளாக வைத்தவர்கள் நிறைய பேர்.
முகப்பு அட்டை என்பது புத்தக உள்ளடக்கத்தை வெளிப்படுத்தும் ஒரு சாதனம். அட்டை, உள்ளடகக்கத்தின் தன்மையை ஓரளவாவது எடுத்து இயம்ப வேண்டும். அது அலங்காரமல்ல. உடலுக்கு உள்ள் முகம் போன்றது அது.
என் நூலகளுக்கு இதுவரை எனக்குப் பிடித்தமான ஒரு அட்டை கிடைத்ததில்லை. ஒவ்வொரு முறையும் அந்த நேரத்து அவசரத்துக்கு ஏற்ப, மனநிலைக்கு ஏற்ப ஒரு அட்டையை தேர்வு செய்திருக்கிறேன். அட்டையில் உள்ள ஓவியம் அல்லது புகைப்படம் கொஞ்ச நாளிலேயே ரொம்ப அன்னியமாக ஆகிவிடுகின்றன. அல்லது குழந்தைத்தனமாக இருக்கின்றன. சாதாரண வண்ணத்தில் புத்தகத்தின் பெயரை மட்டும் வைத்துத் தந்தால் போதும் என்று தோன்றும்.
இது என் எண்ணம்.
ஆனால், புத்தகப் பதிப்பளர்கள், நல்ல அட்டையை உருவாக்க எப்படி முயற்சிக்கிறார்கள் என்பதை இங்கே படியுங்கள்.