கணித அறிஞர்களைத் தேடிக்கொண்டு போனபோது, என் கண்ணில் தட்டுப்பட்ட முத்துதான், ‘பாவனா.’ பேரா.சி.எஸ். அரவிந்தாவை ஆசிரியராக கொண்டு வெளிவரும் அற்புத கணித இதழ் இது. ஆண்டுக்கு நான்கு இதழ்கள் தான். பெங்களூருவில் இருந்து வெளிவருகிறது.
ஒவ்வொரு இதழிலும் இந்திய கணித அறிஞர்களின் மிக விரிவான பேட்டிகள் இடம்பெறுகின்றன. பல்வேறு கணிதத் துறைகள் தொடர்பான கட்டுரைகளும் உண்டு. பழைய இதழ்களை எல்லாம் இணையத்தில் சேமித்து வைத்துள்ளனர்.
அனைத்து இதழ்களையும் பைத்தியம் மாதிரி நான் ஒரே இரவில் படித்திருக்கிறேன். பலமுறை மீண்டும் மீண்டும் படித்திருக்கிறேன். நண்பர்கள் எல்லோருக்கும் இதைப் பற்றி வாய் ஓயாமல் எடுத்துச் சொல்லியிருக்கிறேன். இந்தியக் கணிதவியலின் பங்களிப்புகளை வெளிச்சம் போட்டுக் காட்டும் பேட்டிகள் இவ்விதழ்களில்
இடம்பெற்றுள்ளன.
என் வாழ்நாளுக்குள் நான் செய்ய விரும்பும் ஏராளமான வேலைகள் உண்டு. அதில் முக்கியமானது, இவ்விதழ்களில் வெளியாகியுள்ள பேட்டிகளைத் தொகுத்து, தமிழில் மொழிபெயர்த்து வெளியிட வேண்டும் என்பது. இதில் தான், தமிழகத்தின் முக்கியமான கணித அறிஞர்களின் பேட்டிகளும் இடம்பெற்றுள்ளன.
ஐம்பதாண்டுகளுக்கு முன்பு தமிழகத்தின் கணித வளம் எப்படிப்பட்டது, பெற்றோர்கள் அந்தக் காலங்களில் எப்படி தம் பிள்ளைகளை ஊக்குவித்தார்கள், எத்தகைய
அற்புதமான ஆசிரியர்கள் மாணவர்களின் அறிவைச் செழுமைப்படுத்தினார்கள் என்றெல்லாம் இந்தப் பேட்டிகள் தெரிவிக்கின்றன.
அப்பப்பா… பெரிய கணித யாகம் அன்றைய கல்லூரிகளில் நடைபெற்றுள்ளன என்ற எண்ணம் தான் எனக்கு ஏற்படுகிறது.
உண்மையில் எனக்கு வேறொரு எண்ணமும் உண்டு. மத்திய அரசு விஞ்ஞானியான நண்பர் த.வி. வெங்கடேஸ்வரனிடமும் இதைப் பற்றிச் சொல்லிக்கொண்டு இருந்தேன். விஞ்ஞான் பிரசார் சார்பாக, அவர்கள் ஒருசில நூல்களை வெளியிடும் முயற்சியில் உள்ளனர். தமிழகத்தின் கணித அறிஞர்களில் தற்போது இன்னும் உடல்நலத்துடன் உள்ளவர்களைப் பேட்டி கண்டு எழுதி, புத்தகமாக வெளியிட வேண்டும் என்பது என் அவா. ஆதரவு தாருங்கள் என்று சொல்லியிருக்கிறேன்.
சில சமயங்களில் என் நடத்தை எனக்கே ஆச்சரியமளிப்பது உண்டு. ‘பாவனா’ இதழ் ஆசிரியரிடம் பேசவேண்டும் என்பது என்னுடைய ரொம்ப நாள் கனவு.
திடீரென்று அவர்களுடைய வலைத்தளத்தில், ஒரு அலைபேசி எண் கொடுக்கப்பட்டது. அழைத்துப் பேசியபோது, அரவிந்தாவே எதிர்ப்பக்கம் உரையாடினார்.
உண்மையில் நான் சிறுகுழந்தையின் குதூகலத்தோடு என் மகிழ்ச்சியைத் தெரிவித்தேன். தமிழகத்தில் அந்த மனிதர் சுமார் 10 ஆண்டுகள் இருந்திருக்கிறார். என் குரலில் தெரிந்த மகிழ்ச்சி அவரையும் தொற்றிக்கொண்டது.
அனைவரிடமும் கணிதத்தை எடுத்துச் செல்லவேண்டும் என்பதற்காகவே, ஒரு மனிதர் இவ்வளவு தூரம் உழைக்கும்போது, அவரை மெச்சாமல் எப்படி இருக்க
முடியும்?
கணித ஆர்வம் உள்ளவரா நீங்கள்? இதோ ‘பாவனா’ இதழ்கள். படியுங்கள்: http://bhavana.org.in/
பகுப்பு: பத்திரிகை
கூருணர்வுச் சொற்கள்!
தொலைக்காட்சியில் நான் செய்திப் ப்ரியன். மெகா தொடர்கள் பார்ப்பவன் அல்ல. இரண்டு நாள்களுக்கு முன்பு, கூடத்தில் ஓடிக்கொண்டு இருந்த தொலைக்காட்சி தொடர் நடுவே சில நொடிகள் நின்றேன். பிரபலமான “சரவணன் – மீனாட்சி” தொடரின் இடையே வரும் முன்னோட்டம் அது. ஒரு முதிய பெண் இன்னொரு பெண்ணைப் பார்த்துச் சொல்கிறார் : “தமிழுக்குத்தான் இது ஃபர்ஸ்ட் நைட். உனக்கு அப்படியா என்ன…” அந்தப் பெண் கூனிக் குறுகி தவித்தாள். அதற்கு மேல் அங்கே என்னால் நிற்க முடியவில்லை. கதையில் வரும் அந்தச் சூழ்நிலையை என்னால் புரிந்துகொள்ள முடிந்தது. இந்த வசனத்தை எழுதியவருக்கு எவ்வளவு மனவக்கிரம் இருக்கவேண்டும்? அதைக் காட்சிப்படுத்தி திரைக்கதை எழுதிய இயக்குனர் எவ்வளவு கூருணர்வு இல்லாதவராக இருக்கவேண்டும்? மக்கள் அனைவரும் பார்க்கும் ஒரு தொடரில் இவ்வளவு கீழ்த்தரமாக யோசிக்க முடியுமா? என்னால் ஜீரணித்துக்கொள்ளவே முடியவில்லை.
வார்த்தைகளை மணிமணியாகப் பயன்படுத்த வேண்டாமா? சூழ்நிலைக்கேற்ப, அங்கு நிலவும் உணர்வுகளுக்கு ஏற்ப, சொற்களைத் தட்டித் தட்டிப் பார்த்துப் பயன்படுத்த வேண்டாமா? இரண்டாயிரம் ஆண்டு பண்பாடு, வளர்ச்சி, மூத்த குடி என்றெல்லாம் பெருமைப்படுகிறோம். அப்படியானால், நம் மனங்களில் எவ்வளவு தூரம் பண்பாடு மேலோங்கி இருக்கவேண்டும்? அது நம் வார்த்தைகளில் எவ்வளவு அழகாக பிரதிபலிக்க வேண்டும்? ஏன் இல்லாமல் போச்சு நாகரிகம்? தெரியவில்லை.
பல சொற்களைப் பயன்படுத்த நான் மிகவும் சங்கடப்படுவேன். வேறு வார்த்தைகளுக்காக ரொம்ப நேரம் காத்திருந்த அனுபவமும் உண்டு. “விதவை” அப்படிப்பட்ட சொல். பயன்படுத்த மனம் ஒப்பாத சொல். பயன்படுத்தித் தேய்ந்து போன சொல் மட்டுமல்ல; அது எதிர்மறை எண்ணங்களைச் சுமந்துள்ள சொல். பெண்ணுக்கு எந்த வகையிலும் பெருமை சேர்க்காத சொல் அது. சொல்லப் போனால், அது அப்பெண்ணை இன்னும் காயப்படுத்தவல்லது, இழிவுபடுத்தவல்லது. மனம் நிறைந்த கணவனை இழந்து நிற்கும் ஒரு பெண்ணை, எவ்வளவு கெளரவத்தோடு எடுத்துப் பேசவேண்டும்? அவளை எழுத்தால் கூட நான் காயப்படுத்த விரும்பவில்லை.
“கைம்பெண்” என்று கொஞ்ச நாள் எழுதினேன். அதுவும் ஒப்பவில்லை. பின்னர், “வைதவ்யம்” என்ற சொல்லைக் கண்டுபிடித்தேன். புழக்கத்தில் இல்லாத சொல்தான். ஆனால், ’விதவை’யும், ’கைம்பெண்’ணும் அடைந்துள்ள நலிவை, இச்சொல் இன்னும் அடையவில்லை. என் மனத்துக்குள் உணர்வு ரீதியாக ”வைதவ்யம்” இன்னும் தேய்ந்து, பொருளழிந்து போகவில்லை. கெளரவமும் சிதையவில்லை.
இதேபோல், பெண்ணைக் குறிக்கும் “ஃபிகர்” என்ற சொல்லை என்னால் பயன்படுத்தவே முடியாது. இது அவளைக் கொச்சைப்படுத்துவது மட்டுமல்ல, எல்லாவிதமான தப்பர்த்தங்களுக்கும் இட்டுச்செல்லவல்லது. அதுவும் “செம ஃபிகர்” என்பதெல்லாம் பாலியல் ரீதியாக மிகவும் வக்கிர மனத்தின் வெளிப்பாடு. ஒரு பெண்ணை சகமனுஷியாக அல்லாமல் சதைப் பிண்டமாக நோக்கும் கற்காலச் சிந்தனையை வெளிப்படுத்தும் சொல் அது.
கூருணர்வு என்பது சமூகமொழியில் வெளிப்பட வேண்டும். சமூகம் முன்னேறி இருக்கிறது என்பதற்கு அதுதான் அடையாளம். இப்போதெல்லாம் யாரும் “ஊனமுற்றவர்” என்று பயன்படுத்துவதில்லை; நல்ல சொல் “மாற்றுத் திறனாளி.” அரசியலில் யாரும் “பொய்” சொல்வதில்லை; “உண்மைக்கு மாறான” செய்திகளையே சொல்வார்கள். ”அலி” அவதூறு; “அரவாணி” நீங்கி, இப்போது எங்கும் “திருநங்கை”தான். ”தாழ்த்தப்பட்டவர்கள்”, “தலித்”, “பிற்படுத்தப்பட்டவர்கள்” எல்லாம் சமூகம் இவர்களுக்கு உரிய மரியாதையைக் கொடுக்க விரும்புகிறது என்பதை வெளிப்படுத்தும் சொற்கள். இதற்கு முன்பு பயன்படுத்தப்பட்ட சொற்களில் தொக்கி நின்றவை மேலாதிக்கம், ஆணவம், திமிர் ஆகியவை. அவற்றை சமூகம் விலக்க விரும்புகிறது என்பதற்கு முதல் படிதான், சொற்களில் காட்டப்படும் கரிசனம். பொலிட்டிக்கல் கரெக்ட்னஸ், ஜெண்டர் கரெக்ட்னஸ் மிகவும் முக்கியம்.
உணர்வுகளுக்கான மொழி வார்த்தைகள். அது அடுத்தவரைக் காயப்படுத்தக் கூடாது. கொச்சைப்படுத்தக் கூடாது. இந்த ஜாக்கிரதையோடுதான் ஒவ்வொரு எழுத்தும் உருவாக வேண்டும். டிவியாக இருந்தாலும் சரி, இதழாக இருந்தாலும் சரி – இது தான் நியதி.
இதை நான் செஞ்சிருக்கணும்…
நல்ல நாவல், நல்ல சிறுகதை, நல்ல சினிமா, எதைப் பார்த்தாலும், சே..இதை நான் செஞ்சிருக்கணும்… மிஸ் பண்ணிட்டேனே என்று ராத்தூக்கம் இல்லாமல் அவஸ்தை படுவேன். இதழியலில், இது இன்னும் கொஞ்சம் ரொம்பவே ஓவர்.
ஏதாவது நல்ல லேஅவுட், டிசைன், கட்டுரை, தொடர், அட்டைப்படம் பார்த்துவிட்டால், மனசே ஆறாது. திருப்பித் திருப்பி அதையே பார்த்துக்கொண்டு இருப்பேன், பேசுபவர்களிடமே சம்பந்தம் இருக்கிறதோ இல்லையோ, அதை எடுத்துச் சொல்லுவேன். ஆற்றாமை ஆற ரொம்ப நேரம் ஆகும்!
சமீபத்தில் இப்படி என்னை ஆற்றாமைக்குள் ஆட்படுத்தும் ஆச்சரியங்கள் நடந்துகொண்டு இருக்கின்றன:
1. புதிய தலைமுறை இதழில் சட்டென பிரியல்லண்டாக தென்படும் சில கட்டுரைகள். குறிப்பாக, எழுத்தாளர் பிரபஞ்சனின் தொடர். நேர்த்தியான மொழி, அழகான வடிவம், மனத்தைத் தீண்டும் அனுபவங்கள்.
2. பாவை சந்திரன் இதழ் ஆசிரியராக பொறுப்பேற்ற பின்பு வரும் தினமணி கதிர் வார இதழை, அப்படியே கண்களில் ஒற்றிக்கொள்ளலாம். பாவையின் டிசைன் சென்ஸ் என்னை எப்போதும் கட்டிப்போடும். புதிய பார்வை இணை ஆசிரியராக இருந்தபோது, அவர் அதில் செய்த லே அவுட்கள் ஒவ்வொன்றும் அபாரம்! பத்திரமாக பழைய இதழ்களைச் சேமித்து வைத்திருக்கிறேன். இயற்கையாகவே அவருக்குள் ஓர் அழகியல் பார்வை உண்டு. அதுதான் இதழ் முழுவதும் வியாபித்திருக்கும். இப்போது, தினமணி கதிர் அந்த டிசைன் பாக்கியத்தைப் பெற்றிருக்கிறது.
3. சமநிலை சமுதாயம் என்று ஒரு இஸ்லாமிய இதழ் வருகிறது. ரொம்ப தைரியமான இதழ். இஸ்லாமிய சமுதாயத்துக்கு உள்ளேயே கேட்கப்பட வேண்டிய கேள்விகளின் திறவுகோல் இந்த இதழ். ஹஜ் யாத்திரை அழைத்துப் போகிறேன் என்று கல்லா கட்டும் பயண முகவர்களைப் பற்றி மிக நல்ல கட்டுரை இதன் ஓர் இதழில் இடம்பெற்றது. வேலூரில் இருக்கும் மற்றொரு இஸ்லாமிய மார்க்க கல்லூரியின் குறைகளைப் பற்றி இந்த இதழில் கட்டுரை வந்திருக்கிறது. ச.ச. இதழ், அட்டைப்படத்துக்கு கொடுக்கும் முக்கியத்துவம் என்னை பரவசப்படுத்தும். ஜெ. ஜெயித்து வந்தபோது, ச.ச. இதழின் முகப்பில் ஓர் அட்டைப்படம் வைத்தார்கள். இன்றுவரை அதை எல்லோருக்கும் நான் சொல்லிக்கொண்டு இருக்கிறேன்.
4. அடுத்து, இன்னும் கொஞ்ச நாளைக்கு நான் சொல்லிக்கொண்டு திரியும் ஒரு விஷயத்தை நேற்று படித்து முடித்தேன். தி சண்டே இந்தியன் இதழில் தீபாவளி இதழோடு, ரசிகன் என்றொரு இணைப்பு இதழும் வந்திருக்கிறது. தமிழின் முக்கிய நடிகைகளைக் குறித்த மலரும் நினைவுகள். முக்கிய எழுத்தாளர்கள் அனைவரும் எழுதியிருக்கிறார்கள். ஒவ்வொரு நடிகையும் எவ்வாறு தமிழ்சமூகத்தின் மனத்திரையில் நீக்காத இடம் பிடித்திருக்கிறார்கள் என்று நாஸ்டால்ஜியாவைத் தூண்டு சுவையான கட்டுரைகள். கலெக்டர்ஸ் ஐட்டம் மாதிரியான ஓர் நூல். அ.முத்துலிங்கம், மாலன், சுகுமாரன், இயக்குநர் வஸந்த், ஜெயமோகன், நாசர் ஆகியோரின் கட்டுரைகள் முதல் தரமானவை. பத்திரப்படுத்திக்கொள்ளத் தூண்டும் ஆவணம்.
தேவதையை முன்வைத்து…
சென்ற செவ்வாய்கிழமை அன்று (14.07.09) சென்னையில் இரண்டு புதிய இதழ்களின் வெளியீடு நடைபெற்றது. கிரிகுஜாம்பாள் பப்ளிகேஷன்ஸ் பெண்களுக்காக தேவதை என்ற இதழையும் ஆன்மிகத்துக்காக திரிசக்தி என்ற இதழையும் வெளியிட்டு இருக்கிறது. இதழ் விலை ரூ.15. தேவதைக்கு ஆசிரியர் தயாமலர். இவர் அவள் விகடன் இதழின் முன்னாள் பொறுப்பாசிரியர். திரிசக்திக்கு பி.சுவாமிநாதன் ஆசிரியர். இவர் சக்தி விகடனின் முன்னாள் பொறுப்பாசிரியர்.
எனக்கு புதிய இதழ்கள், புதிய மீடியா முயற்சிகள் மீது எப்போதும் ஒருவித மோகம் உண்டு. ஓர் இதழியல் மாணவனாக, வெளிவரும் ஒவ்வொரு புதிய இதழையும் வாங்கி, அதன் உள்ளடக்கத்தைப் பார்த்து, அதன் தன்மைகளைப் புரிந்துகொள்வதில் எனக்கு பெரும் ஆர்வம் உண்டு.
நான் பல ஆண்டுகளாக எல்லாவிதமான பெண்கள் இதழ்களையும் வாங்கியிருக்கின்றேன். ஆரம்பத்தில் இருந்து கடைசி வரை பெண்கள் இதழ்களின் பக்கங்களை நான் அப்படியே தள்ளிக்கொண்டு போன காலம் உண்டு. எனக்கு அதில் படிக்க ஒன்றுமில்லை என்ற எண்ணம் மிகுந்திருந்தது. ஆனால் ஒவ்வொரு பெண்கள் இதழும் தனக்கான வெற்றியைப் பெற்று வந்திருக்கின்றன. படிக்க ஒன்றுமில்லாமல் எப்படி ஒரு பத்திரிகை விற்பனையில் வெற்றி பெற முடியும் என்ற கேள்வி என்னைக் குடைந்துகொண்டே இருக்கும்.
நான் பெண்கள் இதழின் வாசகன் இல்லை என்ற உண்மை புரிய கொஞ்சம் காலம் ஆயிற்று. ஆனாலும் பெண்கள் இதழ்களை நான் தொடர்ந்து பின்பற்றி வந்திருக்கிறேன். வணிக ரீதியாக இந்த இதழ்கள் ஒரு முக்கிய விஷயத்தைச் செய்கின்றன. வாசகர்களின் பரப்பை ஒவ்வொரு புதிய இதழும் விரிவாக்குகின்றன. இல்லை, இருக்கும் வாசகர் பரப்பைத்தான் ஒவ்வொரு புதிய இதழும் பங்குபோட்டுக்கொள்கின்றன என்ற கருத்தும் உண்டு. மார்க்கெட்டிங் ரிசர்ச் துறையில், ஒவ்வொரு புதிய பிராடக்டும் பழைய பிராட்கட் ஒன்றின் இடத்தை பிடிக்கவே வருகிறது என்று சொல்லுவார்கள். பத்திரிகை விற்பனையிலும் இப்படி நடப்பதாக ஆய்வுகள் சொல்வதுண்டு. இதுவும் சரியாக இருக்கலாம். ஆனால், ஒவ்வொரு இதழும் குறைந்தபட்சம் ஒரு புதிய வாசகர் குழுவை நோக்கி பேசுவதாக நான் நினைக்கிறேன். இந்த எண்ணிக்கை குறைவாக இருக்கலாம்.
தேவதை இதழை முன்வைத்து என் எண்ணங்களைப் பதிவு செய்யவே இக்கட்டுரையை எழுத ஆரம்பித்தேன். தேவதைக்கு ஓர் முன்னோடி உண்டு. அது அவள் விகடன். அவள் விகடனின் இன்னொரு அச்சுப் பிரதி, மல்லிகை மகள் என்ற இதழ். இதற்கு ஆசிரியர் ம.கா.சிவஞானம். இவரும் முன்பு அவள் விகடனின் நிர்வாக ஆசிரியராக இருந்தவர். ம.கா.சிவஞானம், தயாமலர் ஆகியோர் அவள் விகடனின் உள்ளடக்க வடிவத்தை (Content Mix) உருவாக்கியதில் முக்கிய பங்கு வகித்திருக்க வேண்டும். அந்த வடிவம், வியாபார ரீதியாக பெரிய வெற்றியைப் பெறவே, அதை அப்படியே பின்பற்றி தம் இதழ்களை உருவாக்கி இருக்கிறார்கள். சினிமா போல், சக்ஸஸ் ஃபார்முலாவை அப்படியே மறுமுறை பயன்படுத்திப் பார்க்கிறார்கள். ஒரு இடத்தில் வெற்றி பெற்றது மற்றொரு இடத்திலும் வெற்றி பெற வேண்டும் என்ற எதிர்பார்ப்பு நியாயம்தானே?
இந்த வெற்றி ஃபார்முலா என்ன? இதற்கு முன்பு பெண்கள் இதழ்களுக்கான வேறு வெற்றி ஃபார்முலா இருந்ததுண்டா? அதற்கு ஏதும் வழித்தோன்றல்கள் உண்டா? இந்த குறிப்பிட்ட ஃபார்முலா மட்டும் சட்டென ஏன் இவ்வளவு முக்கியத்துவம் பெறுகிறது?
அவள் விகடனுக்கு முன்பு உருவாக்கப்பட்ட வெற்றி ஃபார்முலா என்றால் அது மங்கையர் மலர் ஃபார்முலா தான். அப்போது அதன் ஆசிரியராக இருந்த மஞ்சுளா ரமேஷ் இந்த வெற்றி ஃபார்முலாவை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகித்திருக்க வேண்டும். ஒரு கட்டத்தில், அவர் மங்கையர் மலரை விட்டு வெளியேறி சினேகிதி (குமுதம் சிநேகிதி வேறு) என்ற இதழைத் தொடங்கி நடத்தி வருகிறார். சினேகிதி இதழில் மங்கையர் மலரின் தாக்கம் அதிகம் இருக்கும். அதன் உள்ளடக்கம், வடிவமைப்பு, எழுதும் முறை என்று அனைத்திலும் இந்தத் தாக்கத்தைப் பார்க்க முடியும்.
சொல்லப்போனால், இந்த மங்கையர் மலர் வெற்றி ஃபார்முலாதான் பல ஆண்டுகள் சந்தையில் கோலோச்சிக்கொண்டு இருந்தது. இன்னும் இருக்கிறது. எந்த வீட்டுக்குப் போனாலும் நிச்சயம் அங்கே மங்கையர் மலரைப் பார்த்திருக்கிறேன். அதைப் பொக்கிஷம் போல் பல ஆண்டுகள் பாதுகாத்து வைத்து வரும் குடும்பங்களும் உண்டு. இதற்கு மாற்றாக அல்லது இணையாகவேனும் மற்றொரு வெற்றி ஃபார்முலா கண்டுபிடிக்கப்படாமல் இருந்தது. அவள் விகடன் கடந்த பத்து ஆண்டுகளாக உருவாக்கி, திருத்தி, செம்மைப்படுத்தி, மேம்படுத்தி மற்றொரு வெற்றி ஃபார்முலாவை உருவாக்கியது. இன்று பல வீடுகளில் இரண்டு இதழ்களும் வாங்கப்படுகின்றன.
மேலும் பல பெண்கள் இதழ்கள் சந்தையில் கிடைக்கின்றன. லேடீஸ் ஸ்பெஷல், குமுதம் சிநேகிதி, தங்க மங்கை என்றில்லாமல், தினசரிகளும் பெண்கள் இணைப்பிதழ்களும் வெளியிடுகின்றன. இணைப்பிதழ்கள் பெரிய அளவில் பெண்களிடையே கவனம் பெறுவதில்லை. அதன் உள்ளடக்கம் சிரத்தையாக உருவாக்கப்படாமையே இதற்குக் காரணம்.
தமிழ் பெண்கள் இதழ்களைப் பொறுத்தவரை இரண்டு முக்கிய பள்ளிகள் இருக்கின்றன: ஒன்று மங்கையர் மலர் வழி, இன்னொன்று அவள் விகடன் வழி.
இரண்டுக்கும் உள்ள ஒற்றுமை வேற்றுமைகள்தான் சுவாரசியமானது.
அடிப்படையில், அவள் விகடன் 28 – 35 வயதுடைய அலுவலகம் போகும் பெண்களை முன்னிலைப்படுத்தி பேச, மங்கையர் மலர் 40+ பெண்களுக்கான விஷயங்களைப் பேசுகிறது. இரண்டிலும் தாய்மைக்கான அம்சங்கள் இருந்தாலும், மங்கையர் மலரில் அதன் அளவு கொஞ்சம் அதிகமாக இருக்கும்.
மங்கையர் மலர் முன்னிலைப்படுத்தும் பெண்ணை வர்ணிக்கச் சொன்னால் இப்படித்தான் ஒருவரால் வர்ணிக்க முடியும்: வழக்கமான குடும்பத் தலைவி. படித்தவர், விவரங்கள் தெரிந்தவர், ஆனால் வேலைக்குப் போகாதவர். குறைந்தபட்சம் 15 வயதில் ஒரு பெண்ணோ பையனோ இருக்கக்கூடியவர். பழமையில் நம்பிக்கை மிகுந்தவர், நெற்றித் திலகத்துடன் புடைவை கட்டுபவர், அழகை செய்துகொள்வதில் கொஞ்சம் அக்கறை குறைவானவர்.
அவள் விகடன் பெண் எப்படி இருப்பாள்? படித்து முடித்து வேலைக்குப் போக ஆரம்பித்து இரண்டு மூன்று ஆண்டுகள் ஆகியிருக்கலாம், திருமணம் ஆகி மனதளவில் புதுக்கருக்கு கலையாமல் இருக்கலாம், சமையலை இப்போதுதான் கற்றுக்கொள்ள ஆரம்பித்து இருக்கலாம், நவீன டெக்னாலஜி சார்ந்த கருவிகளை லாவகமாக உபயோகிக்கத் தெரிந்தவர், சுடிதாரோ பிற நவீன உடைகளோ அணிவதில் ஆர்வமுள்ளவர், தன்னை அழகாக வைத்துக்கொள்ள வேண்டும் என்பது கவனம் உண்டு, பழைய கருத்துகள் அதிகம் தெரியாது, கணவர், குழந்தை என்று ஓர் அழகிய இல்லத்தை உருவாக்குவதில் நாட்டமுள்ளவர்.
இரண்டு மேஜர் கேட்டகரி பெண்களை இந்த இரண்டு பத்திரிகைகளும் தமதாக்கிக்கொண்டு இருக்கின்றன. இந்தப் பெண்களை மனத்தில் வைத்துக்கொண்டு இவ்விரு இதழ்களையும் நீங்கள் பார்த்தால், அவர்களுக்குத் தேவைப்படும் அத்தனை அம்சங்களையும் இப்பத்திரிகைகள் வழங்குவதை புரிந்துகொள்ள முடியும்.
இதனால்தான் மங்கையர் மலரில் ஆன்மிகம் சற்று தூக்கலாக இருக்கும். வரன் தேடும் விளம்பரப் பகுதி தனியாக இருக்கும். அதில் வரக்கூடிய பெண்கள் புகைப்படங்கள் எல்லாம் 35 வயதுக்கு மேற்பட்ட பெண்களின் புகைப்படங்களாக இருக்கும். இல்லை, நிறைய கோட்டோவியங்களைப் பயன்படுத்தியிருப்பார்கள்.
இதே காரணத்தினால்தான், அவள் விகடன் வாசகி, 32 பக்க சமையல் இணைப்பிதழை முக்கியமானதாகக் கருதுகிறார். ஃபேஷன் ஜுவல்லரிக்கென்றே தனி பக்கங்கள் உண்டு. மேலும் உலக நடப்புகளைத் தெரிந்துகொள்ள ஏதுவாக செய்திகளைத் திரட்டி இரண்டு பக்கங்கள் தந்திருப்பார்கள், பெண்கள் ஜெயித்த வெற்றிக் கதைகளை ஒவ்வொரு இதழிலும் கவர் ஸ்டோரியாக ஆக்கியிருப்பார்கள். ஒவ்வொரு இதழிலும் தன் தனிப்பட்ட சோகக் கதையை ஒரு பெண் எழுத, அதற்குப் பிற பெண்கள் வழிகாட்டும் பகுதியான வாசகி டைரி இதில் மிகவும் பிரபலம்.
இவ்விரு இதழ்களையும் தொடர்ந்து பார்த்து வந்தால், தமிழ் பெண்களின் ஓர் குறுக்குவெட்டுத் தோற்றம் கிடைத்துவிடும். வெகுஜன கலாச்சாரம் உருவாக்கியிருக்கும் தமிழ் பெண்ணின் பிம்பம் இவ்விரு இதழ்களிலும் முழுமையாக வெளிப்பட்டு இருக்கிறது.
இருபத்தெட்டு வயதுக்கு கீழே உள்ள பெண்கள் என்ன செய்கிறார்கள் என்று பார்த்தால், ஒன்று அவர்கள் இன்னும் பெண்கள் பத்திரிகையைப் படிக்க ஆரம்பிக்கவில்லை. கல்லூரிப் படிப்பு, வேலையில் நிலைபெறுபவது, காதலிப்பது, திருமணம் செய்துகொள்வது போன்ற வாழ்வின் முதற்தேவைகள் அங்கே கவனம் பெற்றிருக்கின்றன. அவர்கள் படிக்க ஆரம்பிக்கும்போது, முதலில் அவர்களுக்கு அணுக்கமாக இருப்பது அவள் விகடன் தான்.
அதேபோல் 33 – 35 வயதைக் கடந்த பெண்கள், மெல்ல மங்கையர் மலரை நோக்கி முன்னேறத் தொடங்குகிறார்கள். திடீரென்று, அவர்களுக்கு அவள் விகடன் போதாமல் போய்விடுகிறது. படிக்க ஒன்றுமே இல்லை என்ற எண்ணம் தோன்றிவிடுகிறது. 40க்குப் பின் 60 – 70 வயது வரை உள்ள பெண்களுக்கு மங்கையர் மலர் முக்கியமான இதழாக தெரிகிறது. குடும்ப மதிப்பீடுகள், பண்பாடு, கலாச்சாரம் போன்ற பிடிப்புகளின் மேல் அவர்களின் கவனம் குவியத் தொடங்க, மங்கையர் மலர் அந்த எண்ணத்தை எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்து வருகிறது.
இந்த வயது வித்தியாசமே, இருபத்திரிகைகளின் எழுதும் முறையையும் வித்தியாசப்படுத்திக் காட்டுகின்றன. மங்கையர் மலர் எழுதும்முறை ஒருவித அமரிக்கையான, நிதானமான தொனியோடு இருக்க, அவள் விகடன் மொழியோ இன்னும் இளமையாக இருக்கும். துணுக்கின் தன்மை அதிகம் இருக்கும். நீண்ட பத்திகளாக இல்லாமல், சின்ன சின்ன வாக்கியங்களில் அவளில் கட்டுரை எழுதுவார்கள்.
இரண்டு பத்திரிகைகளுமே தங்கள் உள்ளடக்கங்களை பெருமளவு நேர்த்தி செய்துவிட்டன. அதில் புதிதாக சேர்க்க்க என்று ஒன்றை இனிமேல் தான் கண்டுபிடிக்க வேண்டும். அந்த அளவுக்கு நியர் பர்பெக்ஷனுக்கு இவ்விரு இதழ்களும் வந்துவிட்டன.
இந்த நிலையில், அவள் மாதிரியே இன்னும் இரண்டு இதழ்கள் – மல்லிகை மகள், தேவதை – சந்தைக்கு வந்திருப்பதைப் பார்க்கும்போது கொஞ்சம் ஆச்சரியமாக இருக்கிறது. அவள் வாங்கும் வீடுகளில் அவள் மாதிரியே இருக்கும் இன்னொரு இதழை வாங்க மாட்டார்கள். அதே சமயத்தில் அவள் விகடனை ரீபிளேஸ் செய்யவும் தயங்குவார்கள். ரீபிளேஸ் செய்ய முடியாது என்று இல்லை. ஆனால், புதிய இதழ்களின் உள்ளடக்கம் அவ்வளவு ஈர்க்கக்கூடியதாக இருக்கவேண்டியது அவசியம்.
இன்னொரு வகையில் சொல்வதனால், இப்போது போட்டி உள்ளடக்கத்தில் இல்லை. மார்க்கெட்டிங்கில் இருக்கிறது. மக்களிடம் கொண்டு போய் சேர்ப்பதில் இருக்கிறது. மங்கையர் மலரை ஒட்டியே உருவாக்கப்பட்ட சினேகிதி, அதன் மூல இதழ் அளவுக்கு விற்பனை ஆகவில்லை. உள்ளடக்கம் மட்டும் இருந்தால் போதும், பெரிய வாசகர் கூட்டத்தை அது தானாகவே கொண்டு வந்துவிடும் என்ற நம்பிக்கை தவறானது. சினேகிதி விஷயத்தில் நடந்தது அதுதான். மார்க்கெட்டிங் முனைப்பு போதவில்லை. மல்லிகை மகள் விஷயத்தில் நடந்தது அதுதான். மார்க்கெட்டிங் பலம் போதவில்லை.
இதெல்லாம் பாடங்கள். இதழியல் மாணவனாக எனக்குள் சேமித்துக்கொண்ட விஷயங்கள். உள்ளடக்கம், மார்க்கெட்டிங் மாதிரி சுவாரசியான விஷயங்கள் எனக்குத் தெரிந்து வேறு இல்லை.