குல்ஜாருக்கு அதிர்ஷ்டம்

சாகித்ய அகாதெமி மொழிபெயர்ப்பு விருது 2019 தேர்வுக் குழுவில் நானும் ஒரு உறுப்பினனாக இருந்தேன். டாக்டர் பிரேமா நந்தகுமார், சா. தேவதாஸ் ஆகியோருடன் அமர்ந்து, விருதுபெறும் படைப்பையும் மொழிபெயர்ப்பாளரையும் இறுதி செய்யும் நிகழ்வு சென்னையில் நடைபெற்றது. மிகவும் மகிழ்ச்சியான, ஆரோக்கியமான விவாதங்கள் நடைபெற்ற மூன்று மணிநேரங்கள் அவை.
அதற்கு முன்னர், இறுதிப் பட்டியலில் 11 புத்தகங்கள் இடம்பெற்றிருந்தன. கிட்டத்தட்ட 12 நாட்களில் அனைத்துப் புத்தகங்களையும் படித்து முடித்து, எனக்கான குறிப்புகளை எடுத்துக்கொண்டு, இறுதித் தேர்வுக் கூட்டத்துக்குப் போயிருந்தேன்.
என் பட்டியலை விதவிதமான வழிகளில் வடிவமைத்துக்கொண்டிருந்தேன். நல்ல தரமான மொழிபெயர்ப்பு, தரமான படைப்பின் தரமான மொழிபெயர்ப்பு, புதுமையான படைப்பின் தரமான மொழிபெயர்ப்பு, தமிழுக்கு நிச்சயம் வளம் சேர்க்கும் மொழிபெயர்ப்பு என்றெல்லாம் நானே எனக்குள் பல்வேறு வரையறைகளை வகுத்துக்கொண்டிருந்தேன்.
இவற்றையெல்லாம் எடுத்துப் பேசுவதற்கு அன்று வாய்ப்பு கிடைத்தது.
இறுதியில் மனோஜ் குரூர் மலையாளத்தில் எழுதிய, கே.வி. ஜெயஸ்ரீயால் மொழிபெயர்க்கப்பட்ட நாவலான ‘நிலம் பூத்து மலர்ந்த நாள்’ என்ற நாவல் பரிசுக்குரியதாக தேர்வு பெற்றது.
இதோடு என் மனத்தில் பாதிப்பை ஏற்படுத்திய சில புத்தகங்களையும் குறிப்பிட விரும்புகிறேன்.
முதலில், வாஸந்தி மொழிபெயர்த்த ‘துருவ நட்சத்திரங்கள்’ எனும் நாவல். பஞ்சாபி மொழியில் மிக முக்கியமான நாவலாக இது கருதப்படுகிறது. குல்ஜார் சிங் சிந்து என்ற எழுத்தாளரது படைப்பு.
நான் இதில் மிகவும் ரசித்தது இதன் மொழிபெயர்ப்பைத்தான். ‘பட்டுக் கத்தரித்தாற் போல்’ என்றொரு சொற்றொடர் உண்டு. ரொம்ப பழைய பாணியாகத் தோன்றினாலும் பரவாயில்லை. இந்தச் சொற்றொடர் தான், துருவ நட்சத்திரங்கள் நூலின் மொழிபெயர்ப்பைக் குறிக்கும் சரியான சொல்.
ஒவ்வொரு வரியையும் பத்தியையும் நேர்த்தியாக உருவாக்கியிருக்கிறார் வாஸந்தி. அந்த மொழிபெயர்ப்பைப் பார்க்கும்போதே, அதற்குப் பின்னே போயிருக்கும் உழைப்பை என்னால் யூகிக்க முடிந்தது. முதலில் ஒருமுறை மொழிபெயர்த்துவிட்டு, அதற்குப் பிறகு அந்தப் பிரதியைச் செம்மைப்படுத்தியுள்ளார். பெரும்பாலான மொழிபெயர்ப்புகளில், வாக்கியத்தை முடிக்கும்போது, ஒரே மாதிரியாக இருக்கும். ‘சென்றார்’, ‘சொன்னார்’, ‘என்றார்’… கட்டுரைகளாக இருந்தால், ‘குறிப்பிடத்தக்கது’ எல்லா இடங்களிலும் எட்டிப் பார்க்கும் (உபயம் : சன் டிவி!!).
இந்த நாவலில், மிகவும் கவனத்துடன், ஒவ்வொரு வரியையும் திருந்த நறுக்கியிருக்கிறார். தேவையற்ற உபரி சொற்களை நீக்கி, கச்சிதமாக்கியுள்ளார். தமிழில் படிக்கும்போது, எந்த இடறலும் இல்லை. வாசிப்பது ஒரு பஞ்சாபி நாவல் தானா என்றே சந்தேகம் எழுகிறது.
இந்தியா டுடே இதழில் பணியாற்றிய அனுபவம், எழுத்தாளராகவும் இருக்கும் வீச்சு ஆகியவை வாஸந்தியின் மொழிபெயர்ப்பை மேன்மைப்படுத்தியுள்ளது. எழுத்தாளரே மொழிபெயர்ப்பாளராகவும் இருப்பதால் கிடைக்கும் அனுகூலம் இது. குல்ஜார் சிங் சிந்துவுக்குத்தான் அதிர்ஷ்டம். நல்ல மொழிபெயர்ப்பாளர் அமைவது ஏழு ஜன்மத்துப் புண்ணியம்!

மஞ்சள் வெயில் – விமர்சனம்

தமிழில் காதல் நாவல்கள் மிகவும் அருகிவிட்ட நிலையில், யூமா வாசுகியின் மஞ்சள் வெயிலையும், ஜெ.பிரான்சிஸ் கிருபாவின் கன்னி நாவலையும் படியுங்கள் என்று நண்பர்கள் பரிந்துரைத்தார்கள்.

மஞ்சள் வெயில் 132 பக்கமுள்ள நாவல். கதிரவன் என்ற ஓவியன் / எழுத்தாளனின் ஒருதலைக் காதலைப் பேசும் நாவல் இது.  தினச்செய்தி என்ற பத்திரிகை அலுவலகத்தில் பணிபுரியும் பெண் ஜீவிதா. அவள், கதிரவன் ஓவியங்களின் வாசகி. அதைத் தெரிந்துகொண்டு, ஜீவிதாவோடு மனதளவில் காதல் கொள்ள முயலும் கதிரவன் கதை இது.

நாவல் முழுவதும் கதிரவன், ஜீவிதாவுக்கு எழுதும் கடிதம் போன்றே அமைக்கப்பட்டிருக்கிறது.

இதில் கதிரவன் ஒரு introvert. தனனையே நொந்துகொள்ளும் தன்மையுடையவன். நாவல் முழுவதும் ஒருவிதத் தனிமைப் பினாத்தல் எக்கச்சக்கமாக இருக்கிறது.  கதிரவன் இரண்டு மூன்று வேலையைத்தான் நாவல் முழுவதும் அதிகம் செய்கிறார்: ஒன்று கடற்கரைக்குப் போய், கடலோடும் மணலோடும் மனத்தாங்கலைப் பகிர்ந்துகொள்கிறார்.  இரண்டு, அங்கே போவதற்கு முன்பு மறக்காமல் குடித்துவிடுகிறார். 

இந்த நாவலை எப்படி அணுகவேண்டும் என்று எனக்குத் தெரியவில்லை. தனிமையும் சுயவெறுப்பும் மிகுந்த loner ஒருவனின் கதை இது. அப்படியானால், இதை பரிதாபத்தோடு அணுகவேண்டுமா? தான் தனி, உலகம் தனி என்று விலகியிருப்பது அல்லது உலகியலோடு ஒட்டமுடியாமல் இருப்பதை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

இந்த நாவலில் இரண்டு அம்சங்கள் பாராட்டுக்குரியன: கான் சாகிபு என்றொரு சின்ன பாத்திரம் வருகிறது. மிக அழகான மனத்தை நெருடும் பாத்திரம் அது. இரண்டு, சந்திரன் என்றொரு பத்திரிகை உதவி ஆசிரியர் வருகிறார். அதிகம் மது குடித்தபின், ஒரு இரவு எப்படி கதிரவனை அவர் சமாதானப்படுத்த முடியாமல் தவிக்கிறார் என்றொரு காட்சி வருகிறது. மிக அழகாக உருவாக்கப்பட்ட காட்சி அது.

மிக எளிமையான காதல் கதை. ஆனால், அதீத தனிமையையும் தேவையற்ற வார்த்தைச் சிடுக்குகளையும் வலிந்து திணித்து, அதற்கு ஒரு தீவிரத்தன்மையை உருவாக்க ஆசிரியர் முனைந்திருப்பதாகவே தோன்றுகிறது.

ஒரு நாவலாக எனக்கு இந்தப் படைப்பு அவ்வளவாக திருப்தி தரவில்லை.

வெளியீடு: அகல், 342, டி.டி.கே. சாலை, சென்னை 14, தொ.பே: 28115584.

விலை: ரூ.65.00