ராயல்டி சமாச்சாரம்

சமீபத்தில் நண்பர் ஒருவர் என்னிடம் பேசிக்கொண்டு இருந்தார். அவர் ஒரு ஆங்கில வலைப்பதிவாளர். நிறைய எழுதுகிறார். அவரது வலைப்பதிவுகளில் இருந்து தொகுத்து ஒரு நூலை வெளியிட ஒரு அமெரிக்கப் பதிப்பகம் முன்வந்துள்ளது. புத்தகம் வரும்போது, அதுவே இந்திய ஆங்கில வலைப்பதிவாளர் ஒருவரின் எழுத்துகள் முதலில் நூல் வடிவம் பெறுவதாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

விஷயம் அதுமட்டுமல்ல. அவருக்கு அமெரிக்கப் பதிப்பகம் அனுப்பிய ராயல்டி அக்ரிமெண்ட்தான் என்னை ஆச்சரியத்துக்கு ஆளாக்கியது.

“என்ன ராயல்டி தராங்கப்பா?”
“50 சதவிகிதம்”

போனில் பேசிய நான் சட்டென சீட் நுனிக்கு வந்துவிட்டேன். என்னால் நம்பவே முடியவில்லை.

“ஒண்ணு ஐந்தா, ஐந்து பூஜ்ஜியமா?”

“ஃபிஃப்டி பர்சண்ட்”

என்னால் என் காதையே நம்ப முடியவில்லை. அதிகம் அவசரப்படவேண்டாம் என்று உள்மனது சொல்ல, முழு பத்தியையும் படிக்கச் சொன்னேன். புத்தகத் தயாரிப்புச் செலவுகள் மற்றும் எல்லாவிதமான கழிவுகள் போக கிடைக்கும் லாபத்தில் 50 சதவிகிதம் ராயல்டி என்பதே அந்தப் பத்தியின் முழு விவரம்.

ஆசிரியரையும் புத்தகத் தயாரிப்பு செலவுகளை ஏற்க வைக்கும் முறைகளில் இதுவும் ஒன்று. புத்தகத் தயாரிப்பு செலவுகள் என்பதில் என்னென்ன அம்சம் அடக்கம் என்பதற்கு எந்த ஒரு பட்டியலும் இல்லை. அதேபோல், கழிவுகள் என்பதில் என்னென்ன கழிவுகள் இதில் சேர்த்துக்கொள்ளப்படும் என்பதற்கும் தெளிவில்லை. ரொம்ப புத்திசாலித்தனமான ராயல்டி முறையாக எனக்குத் தோன்றியது.

பொதுவாக, புத்தக விலையில் – Cover Price – ராயல்டி தொகை வழங்குவதே இப்போது இருந்து வரும் பழக்கம். 5 % தொடங்கி 7.5% வரை இந்த ராயல்டி ஆசிரியருக்கு வழங்கப்படும். சில பதிப்பகங்களில், அட்வான்ஸ் ராயல்டி கொடுக்கப்படும் வழக்கம் இருக்கிறது.

இன்னொரு முறை, அடக்க விலையில் ராயல்டி (Royalty on Nett price) என்பது. அதாவது புத்தக விலையில், விற்பனையாளர்களுக்குக் கொடுக்கப்படும் கழிவு போக மீதமுள்ள தொகையே அடக்க விலை. இதில் 7.5% ராயல்டி என்பதும் புழக்கத்தில் இருக்கும் முறையே.

ராயல்டி என்பது எழுதுபவனுக்குக் கொடுக்கப்படும் மரியாதை. புத்தகம் வெளியிடுபவர்கள், ஆசிரியரின் உழைப்பு, அனுபவம், ஞானம் ஆகியவற்றுக்குக் கொடுக்கும் கெளரவம் அது. வேனிட்டி பப்ளிஷிங்க் எல்லாம் புழக்கத்துக்கு வந்தபின், எல்லாரையும் விற்பனைக்குக் கூட்டுச் சேர்ப்பது எந்த அளவுக்கு நியாயமோ தெரியவில்லை.