‘நேசமுடன்’ முதல் இதழில், கரோனாவால் கிராமப் பொருளாதாரத்தில் ஏற்படவிருக்கும் பாதிப்புகள் பற்றி தெரிவித்திருந்தேன். பிசினஸ் ஸ்டாண்டர்டு இதழ் இதே விஷயத்தைப் பற்றி எழுதியிருக்கிறது. அது, மேற்கு வங்க மாநில கிராம சமூகங்களில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றத்தைப் பற்றிப் பேசுகிறது.
கிராம சமூகங்களில் என்னென்ன சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன தெரியுமா?
1. முதலில், வெளியூர்களில் இருந்து வந்த மக்களை உள்ளூர்க்காரர்களே சந்தேகத்துடன் பார்க்கின்றனர். வெளியூரில் வந்தவர்கள், கரோனாவைக் கொண்டுவந்திருக்கலாம் என்ற அச்சம் நிலவுகிறது. அதனால், அவர்கள் ‘கண்காணிக்கிறார்களாம்.’
2. அடுத்த சில நாட்களில் வெளியூரில் வந்தவர்களிடம் உள்ள சேமிப்புத் தொகை கரைந்துவிடும். அப்புறம் என்ன செய்ய முடியும்? மாநில அரசு வழங்கும் நிதி உதவியை நம்பியே வாழவேண்டும். அது எத்தனை நாட்களுக்குத் தொடரும் என்று தெரியவில்லை.
3. கிராமப் பகுதிகளில் உள்ள பல சிறு மளிகைக் கடைகள் நிரந்தரமாக மூடப்பட்டுவிட்டன. பெரிய வணிகர்களிடம் இருந்து அத்தியாவசிய உணவுப் பொருட்களைக் கூட அதிக விலைக்கு வாங்க வேண்டியிருப்பதால், இவர்களால் கடைகளை நடத்த முடியவில்லை.
4. கிராமங்களுக்குத் திரும்பிவந்துள்ள புலம்பெயர் தொழிலாளர்கள், உள்ளூர் பொருளாதாரத்தில் மிகப்பெரும் சுமையாகப் பார்க்கப்படுகிறார்கள். விவசாயத்தில் ஈடுபடுவதற்குத் தேவையான பயிற்சிகள் இவர்களுக்கு இல்லை. அவர்களுக்கு வேறு தொழில்களில் பயிற்சி உண்டே தவிர, விவசாயத்தில் அல்ல. ஆனால்,
கிராமங்களில், விவசாயப் பணிகள் மட்டுமே கிடைக்கும் என்பதால், இவர்கள் எப்படி புதிய சூழலுக்கு பழகுவார்கள்?
5. கிராமங்களில் தொழிலாளர்களின் எண்ணிக்கை திடீரென பெருகுவதால், விவசாயம் உள்பட, பல துறைகளிலும் நிலவி வரும் கூலித் தொகை குறைந்துபோய்விடும். இவர்கள் எல்லோரும் வேறு வழியில்லாமல் 100 நாள் வேலைத்திட்டத்தைத் தான் நம்பியிருக்க வேண்டும். ஆனால், கடந்த நான்கு ஆண்டுகளில், இத்திட்டத்தின் கீழ் 40 முதல் 45 நாட்களுக்குத் தான் வேலை கொடுக்க முடிந்திருக்கிறது. மேலும் தினக்கூலி என்பது விவசாயக் கூலியை விடக்
குறைவானது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
6. கூலிவேலை செய்வதற்கான ஆட்களின் எண்ணிக்கை அதிகமாகிவிட்டதால், புலம்பெயர் தொழிலாளர்கள், கிராமங்களில் மேலும் சுரண்டப்படுவார்கள்.
7. மேற்குவங்கத்துக்குத் திரும்பிவரும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள், சுமையாகவும் வேண்டாத விருந்தாளியாகவுமே பார்க்கப்படுகிறார்கள்.
ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போன்றதுதான், இந்த மேற்கு வங்க உதாரணம்.
நகரம் வேறு சில பிரச்னைகளைச் சந்திக்கிறது.
1. கேரளத்தில், மதுப்பழக்கத்துக்கு அடிமையானவர்கள், ஊரடங்கு காலத்தில் திண்டாடிப் போயிருக்கிறார்கள். இருவர் தற்கொலை செய்துகொண்டதாக செய்தி.
கேரள முதல்வர், மருத்துவ அறிவுரையின்படி, இவர்களுக்கு மது வழங்கலாம் என்று கருத்து சொல்லி, கடும் விமர்சனத்தைச் சந்தித்துள்ளார்.
2. கரோனா தொற்று முதலில் ஏற்பட்ட சீனாவின் வூஹான் மாகாணத்தில், கடந்து மூன்று மாதங்களில் தம்பதிகளிடையே பேச்சுவார்த்தை தடித்து, விவாகரத்து வரை சென்றிருக்கும் செய்திகள் வந்துள்ளன.
3. வீட்டிலேயே இருப்பதால், குடும்ப வன்முறை, பாலியல் தொந்தரவுகள் ஏற்படலாம் என்று எச்சரிக்கும் சில செய்திகளையும் படிக்க நேர்ந்தது.
4. 2008 பொருளாதார தேக்கத்துக்குப் பின்னர், மீண்டும், ஒருவித அநித்திய சூழலைப் பார்க்கிறேன். வேலை இருக்குமா, இருக்காதா என்பதுதான் பலரது மனத்தில் முதற் கேள்வி. யாருமே தவிர்க்கமுடியாத, இன்றியமையாத நபர் கிடையாது என்ற உண்மை தெளிவாகப் புரிகிறது. தான் இருந்தால் தான் குறிப்பிட்ட வேலை
நடக்கும் என்று இனி நம்புவதற்கில்லை. விளைவு, விரக்தி.
5. நகரங்களில் மறுசீரமைப்பும் மறுகட்டமைப்பும் எப்போது தொடங்கி, நிலைமை சீரடைவதற்கு எத்தனை காலம் ஆகும் என்பதையும் யாராலும் அறுதியிட்டுச் சொல்ல முடியவில்லை.
ஒருமாதிரியான நிலையற்ற தன்மை. எப்படி மீளப் போகிறோமோ?