காணாமல் போகும் தி.நகர்

இன்று காலை [14.08.08] வெளியான இந்து நாளிதழோடு தி.நகர் மேம்பாலத் திறப்பு விழாவை ஒட்டி ஒரு விளம்பரதாரர் சப்ளிமெண்ட் வந்திருக்கிறது. பார்த்திருப்பீர்கள். அதில் முக்கியமாக கவனிக்க வேண்டியது, கீழே உள்ள வாக்கியம்தாம்:

T. Nagar plays pivotal role in the textiles and jewellery trade at an international level. It is the earnest request of our association to declare the area comprising Usman Road, North Usman Road, Nageswara Rao Road, Prakasam Road and Ranganthan Street as a ‘Special Retail Zone’ to enhance shopper’s delight.

இந்தக் கோரிக்கையை நீங்கள் வேறு பல விஷயங்களோடு இணைத்துப் பார்க்க வேண்டும்.

1. நகரின் கட்டட வரைமுறைகளை எல்லாம் மீறி, தம்முடைய இஷ்டத்துக்கு அடுக்குமாடிகளைக் கட்டிக்கொண்டே போனார்கள் வியாபாரிகள். உயர்நீதி மன்றம், அனுமதி பெறாமல் கட்டப்பட்ட பல மாடிகளை இடிக்க உத்தரவிட்டிருக்கிறது.

2. உச்ச நீதிமன்றம வரை போய் தம்முடைய கட்டடங்களைக் காப்பாற்ற முனைந்தார்கள் வியாபாரிகள். அதுவும் முடியாமல் போகவே, இப்போது முற்றிலும் வேறு ஒரு கோரிக்கையை கூட்டாக முன்வைக்கிறார்கள்.

3. மக்களுக்குச் சேவை செய்யவே இதுபோல் கட்டடங்களைக் கட்டியதாகவும், பேராசையினால் அல்ல என்று வியாபாரிகள் சங்கம் கூறியது இதே இந்து நாளிதழில் பிரசுரமாகி உள்ளது.

இதில் பிரச்னை என்ன? ஏன் அவர்களுடைய கோரிக்கையில் உள்ள குற்றம் என்ன என்று கேட்பவர்களுக்கு:

1. தி.நகர் என்பது பொதுமக்கள் வாழும் இடம். அது வணிகத் தலம் அல்ல. ஆனால், பணபலத்தாலும் ஆள் பலத்தாலும் ஆட்சி பலத்தாலும் பனகல் பூங்காவை ஒட்டி உள்ள அத்தனை இடங்களையும் வியாபாரிகள் ஆக்கிரமித்துக் கொண்டு இருக்கிறார்கள். அதனால் நேர்ந்தது என்ன? போக்குவரத்து நெரிசல், அசுத்தம், மாசு, நோய்கள். வியாபாரிகள் பணம் சம்பாதிக்க, பொதுமக்கள் திண்டாட வேண்டுமா என்ன?

2. யார் கொடுத்த தைரியத்தில் இவர்கள் மாடி மேல் மாடி கட்டி விண்ணை முட்டவிட்டார்கள்?  பொதுமக்கள் வாழும் நகரம் என்று தெரிந்தும் தைரியமாக கட்டட வரைமுறைகளை மீறி கட்டடம் எழுப்பத் தூண்டியது எது? பேராசைதானே? மக்கள் சேவை என்பது வெறும் பம்மாத்து அல்லாமல் வேறு என்ன?

3. செய்தது தவறு. அதற்கு நீதிமன்றம அனுமதிக்கவில்லை என்று தெரிந்தவுடன், தங்கள் கட்டடங்களைக் காத்துக்கொள்ள சட்டென அந்த முழு இடத்தையும் ஸ்பெஷல் எகனாமிக் சோன் மாதிரி ஸ்பெஷல் ரீடெயில் சோன் என்று அறிவிக்கக் கோருகிறார்கள். இப்படி ஒரு அந்தஸ்து அந்த ஏரியாவுக்குக் கிடைக்குமானால், அதில் அவர்கள் முற்றும்முழுவதும் குளிர்காய வசதியாக இருக்கும் என்ற எதிர்பார்ப்புதானே?

4. அப்படியே ஒரு ஸ்பெஷல் ரீடெயில் சோன் வேண்டும் என்று விரும்புவார்களாயின், அதற்கான முன்னுதாரணங்களைப் பின்பற்றவேண்டியதுதானே? கொத்தவால்சாவடி, கோயம்பேடு போனதுபோல், பிராட்வே பஸ்நிலையம் கோயம்பேடு போனதுபோல், எல்லாரும் வந்துபோக ஏதுவாக, சரியான அனைத்து வசதிகளோடு கூடிய மாற்று இடத்துக்குச் செல்வதுதானே நியாயம்?ஆனால், அதைச் செய்ய மாட்டார்கள்.

5. ஒவ்வொரு துறையினரும் இதுபோல் தாம் இருக்கும் இடங்களையே ஸ்பெஷல் சோன் ஆக்க கேட்டால், அரசு ஏற்றுக்கொள்ளுமா? தி.நகரில் பதிப்பாளர்கள் நிறைந்திருக்கிறார்கள். ஸ்பெஷல் பப்ளிஷர்ஸ் சோன் கேக்கலாமா? என்.எஸ்.சி.போஸ் சாலையை என்னவென்று அழைக்கலாம்? தேவராஜ முதலி தெருவை ஸ்பெஷல் கண்ணாடி சோன் என்று அழைக்கலாமா? பந்தர் தெருவை ஸ்பெஷல் பேப்பர் சோன் ஆக்கலாமா?

6. ஒரு இடத்தில் ஒரு குறிப்பிட்ட தொழில் மையம் கொள்வது தவிர்க்கமுடியாத விஷயம். ஆனால், நகரின் மொத்த கட்டுமானத்துக்குள், அதன் வசதிகளுக்குள், அதனை ஒட்டி உள்ள மக்களின் வாழ்வுக்கு இணையவே தொழில் நடக்க முடியுமே தவிர, தி. நகர் மாதிரி ராட்சத்தனமாக, பேராசையின் பெருங்கனவாக வளர அனுமதித்ததே தவறு. ராட்சத்தனமாக வளர்ந்துவிட்டதால், அது தனக்கு இன்னும் வேணும் இன்னும் வேணும் என்று பகாசுரத் தீனியைக் கேட்கிறது.

இன்று மாலை, கலைஞர் தி.நகர் மேம்பாலத்தைத் திறந்துவைத்து பேசுகிறார். என்ன சொல்கிறார் என்று பார்ப்போம்.

விமானத்துள் இதழ்கள்

இந்தியாவில் செயல்படும் ஒவ்வொரு விமான சேவை நிறுவனமும், இன் ஃபிளைட் மேகசின் நடத்துகின்றன. மிக அழகிய அச்சு, நல்ல தாள், வண்ணம், உருவாக்கம் என்று திறமையான தயாரிப்பு. கையில் பிடிக்கவே அழகாக இருக்கிறது.

உள்ளடக்கம், உயர் மத்தியதர வர்க்கத்தை மையப்படுத்தியே கொடுக்கப்படுகின்றன. உடைகள், ஆபரணங்கள், ஓட்டல்கள், ரிசார்ட்டுகள், ஸ்பா, அல்லது பயண அனுபவங்கள். பல பக்கங்களைத் தள்ளிக்கொண்டே போய்விடலாம். கஷ்டப்படுத்தாத லைட் ரீடிங் உள்ளடக்கம்.

என் பக்கத்தில் உட்காருபவர்கள் பெரும்பாலும் இதழைத் தொட்டுக்கூட பார்க்க மாட்டேன் என்கிறார்கள். அப்படியே பிரித்துப் பார்ப்பவர்களும் மேய்கிறார்கள், புரட்டிக்கொண்டே போகிறார்கள்.

எவ்வளவு சுலபமான கேப்டிவ் ஆடியன்ஸ்? விமானத்தில் உட்காரும் ஒவ்வொருவரும் அவர் இறங்கும்வரை – அது அரை மணியாக இருக்கலாம், 3 மணி நேரமாகவும் இருக்கலாம் – வேறு ஒன்றையுமே செய்ய முடியாது. சட்டென புற உலகில் இருந்து துண்டிக்கப்பட்ட தருணம் இது. இதில் உருப்படியாக இதழைத் தயாரித்துக்கொடுத்தால், எவ்வளவு நன்றாக இருக்கும்?

சில விமானங்களில் தினசரிகள் உண்டு. லோ-காஸ்ட் ஏர்லைன்களில் அதுவும் இல்லை. இந்த இதழ்தான் உண்டு. ஏதோ ஒரு ஏர்லைனில், பிசினஸ் வேர்ல்டு இதழையும் இன்னொன்றில் வீக் இதழையும் பார்த்தேன்.

இதில் சிக்கல் எங்கே தெரியுமோ? இந்த விமான இதழ்களைத் தயாரிக்கும் பணியை விமான நிறுவனங்கள் அவுட்சோர்ஸ் செய்து இருக்கின்றன. எனக்குத் தெரிந்து மும்பையில் இருக்கும் மூன்று நிறுவனங்களே எல்லா இதழ்களையும் தயாரித்துக் கொடுக்கின்றன. இவையெல்லாம், காண்ட்ராக்ட் பப்ளிஷிங் நிறுவனங்கள். எடிட்டோரியல், விளம்பரத் துறை, அச்சு என்  எல்லாவற்றையும் செண்ட்ரலைஸ் செய்து வைத்து இருக்கின்றன.

முன்னணி இதழ்களோ, தினசரிகளோ இந்த காண்ட்ராக்ட் பப்ளிஷிங் தொழிலில் இறங்கத் தயாரில்லை போல் இருக்கிறது. விளைவு, இதுபோல் அரைகுறை இதழ்களே படிக்கக் கிடைக்கின்றன.

இதில் உள்ளடக்கத்தை விட விளம்பர வருவாயே முக்கியமாகக் கருதப்படுகிறது. மேலும், உள்ளடக்கம் பற்றி விவரம் தெரிந்தவர், எல்லா விமான சேவை நிறுவனத்திலும் இருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை இல்லையா?

வேறு எங்கோ இதைப் படித்தேன். கத்தார் ஏர்வேஸ் என்று ஞாபகம். விமானத்தின் உள்ளே வைக்கப்படும் பத்திரிகை, இதழ்கள், விவர அட்டைகளை எல்லாம் நீக்கினார்களாம்; விமானத்தின் எடையில் ஒரு டன் குறைந்துவிட்டதாம். இப்போ, எல்லாவற்றையும் சீட் முன்னே இருக்கும் டிஜிட்டல் திரையில் படிக்க ஏற்பாடு செய்துவிட்டார்கள்.

விமானத்துள் உள்ளடக்கம் மேம்பட, இதுவும் ஒருவழியாக உருவாகலாம்.

ஏராளமான சிறுபத்திரிகைகள்

சமீத்திய சென்னை பயணத்தின் போது, தி.நகரில் உள்ள நியூ புக்லேண்ட்ஸ் சென்றிருந்தேன். புக்லேண்ட்ஸ் விரிவாக்கப்பட்டு நிறைய நூல்களுக்கு இடம் கொடுக்கப்பட்டிருக்கிறது. எத்தனை நூல்கள்,  எத்தனை இதழ்கள்.. அப்பப்பா.. சட்டென தமிழ்ப் பதிப்புலகம் வீறுகொண்டு எழுந்துவிட்டதோ என்று ஆச்சரியப்படுத்தும் விதத்தில் கடை முழுக்க நூல்கள்.

நான் வாங்கிய சிறு பத்திரிகைகள்:

யுகமாயினி, உயிர் எழுத்து, மணல் வீடு, மணல் புத்தகம், நிழல், புதிய விசை, புத்தகம் பேசுது, விருட்சம், உயிர்மை, காலச்சுவடு, புதிய பெண்ணியம், புதிய பார்வை.

என்னை பெரும் மகிழ்ச்சிக்குள் ஆழ்த்திய விஷயம், இந்த இதழ்களில் நிறைய சிறுகதைகள் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக யுகமாயினி, உயிர் எழுத்து இதழ்கள் நல்ல சிறுகதைகளுக்கு இடம் கொடுக்கின்றன.

இது ஒரு சக்கரம். இலக்கியத்தில் இருந்து தொடங்கி, வேறு பல அறிவுத் துறைகள் எல்லாம் போய்விட்டு, மொழிபெயர்ப்புகளுக்கும் போய்விட்டு, மீண்டும் படைப்பு இலக்கியத்துக்கு வந்து சேர்ந்திருக்கின்றன சிறு பத்திரிகைகள். பல புதிய பெயர்கள் தென்படுகின்றன. படித்துவிட்டுச் சொல்கிறேன்.

விற்பனை பெருகியிருக்கிறதா என்று தெரியவில்லை. சிறுபத்திரிகையிலேயே (அல்லது இடைநிலை இதழ்களில்) அதிகம் விற்பனை ஆவது காலச்சுவடு இதழ்தான் என்று நினைக்கிறேன். 8000 பிரதிகள் விற்பனை ஆவதாகக் கேள்விப்பட்டேன். மற்ற புதிய இதழ்கள் 1000 – 2000 பிரதிகள் விற்பனை ஆகுமோ என்னவோ? 300 -500 இதழ்கள் விற்ற நிலையில் இருந்து பார்க்கும்போது, இது நல்ல வளர்ச்சிதான்.  ஆனால், சஸ்ட்டெயின் பண்ண முடியுமா என்று தெரியவில்லை.

படைப்பு இலக்கியத்துக்கு மீண்டும் மவுசு வந்திருப்பது கண்டு எனக்கு பெரு மகிழ்ச்சியே.

யூத்ஃபுல் விகடன்

ஆனந்த விகடனின் புதிய அவதாரம், ஆல் நியூ யூத்ஃபுல் விகடன். பெரிய சைஸில்
ஒன்றும், சின்ன சைஸில் ஒன்றுமாக இரண்டு விகடன்கள், இனி வாராவாரம். விலை
ரூ.15 ( ரூ. 10 இல் இருந்து ரூ.15 ஆகிவிட்டது).

புதன்கிழமை மாலை இதற்கான வெளியீட்டு விழா, சென்னை லீ ராயல் மெரிடியனில்
நடந்தது. அடியேனை விகடன் நிர்வாக இயக்குநர் அழைத்திருந்தார். மாலை
7.30க்கு நிகழ்ச்சி தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டு, தொடங்குபோது மணி
8.15ஐ நெருங்கி இருந்தது. சோ ராமசாமி, நக்கீரன் கோபால், தயாநிதி மாறன்,
ஹிந்து ராம் போன்றோர் முன்வரிசையில் அமர்ந்திருந்தனர். சோவும் ராமும்
ரொம்பநேரம் நின்றுகொண்டே பேசிக்கொண்டு இருந்தார்கள்.

ஒளிவிளக்குகள் நிறைந்த மேடை. இரண்டு பக்க புரஜக்டர் ஸ்கிரீன்களிலும்,
ஆ.வி. எப்படி காலத்திற்கேற்ப மாறிக்கொண்டே வந்திருக்கிறது விளக்கும்
குறும்படம். ஆ.வி. அட்டைகளை வைத்தே, பின்னணியில் அவ்வக்காலப் பாடல்களை
ஓடவிட்டு, குறும்படம் தயாரிக்கப்பட்டிருந்தது.

நிகழ்ச்சி தொடங்கியது. நான்கு அழகிய பெண்களும் நான்கு ஆண்களும்
கண்ணாமூச்சி ஏனடா என்ற பாடலுக்கு மேடையில் நடனம் ஆடத் தொடங்கினார்கள்.
அடுத்து அடுத்து இன்னும் இரண்டு பாடல்களுக்கு ஆடி முடித்தார்கள்.

பின்னர் மீண்டும் ஸ்கிரீன்களில் எப்படி மாற்றம் தவிர்க்கமுடியாதது என்று
பல்வேறு துறைகளில் இருந்து விளக்கிக்கொண்டே வந்தவர்கள், இப்போது ஆ.வியும்
“ஆல் நியூ யூத்ஃபுல்” விகடனாக மாறியிருப்பதைத் தெரிவித்தார்கள். மேடையின்
நடுவே இருந்த ஒரு பலகை திரும்பி, சென்ற வார ரஜினி – பசுபதி கவரில்
இருந்து இந்த வார இரட்டை விகடனுக்கு மாறியது.

மீண்டும் ஒரு பாடல், நடனம்.

அப்புறம், விகடன் எம்.டி. பா.சீனிவாசன் மேடை ஏறினார். சிக்கனமான உரை.
இளமை என்பதூ ஒரு மனநிலை, அதை வயதை வைத்துக் கணக்கிட முடியாது. இந்த புதிய
விகடன், இளைஞர்களுக்கு, இளைஞர்களால் உருவாக்கப்படும் விகடன் என்றார்.
உடனே அரங்குக்கு வந்திருந்த அனைவருக்கும் ஒரு வெள்ளை பையில் விகடன் செட்
போட்டுத் தரப்பட்டது.

அதைத் தொடர்ந்து காக்டெயில், டின்னர். பின் வந்தவர்கள் கிளம்பி,
தங்கியவர்கள் தள்ளாடி முடிய விடிகாலை மணி இரண்டு.

******

மிகவும் தைரியமாக ரிஸ்க் எடுத்து இருக்கிறார் பா.சீனிவாசன்.

பொதுவாக பத்திரிகைகள் பற்றி நடத்தப்பட்ட பல்வேறு சர்வேக்கள் ஒரே ஒரு
விஷயத்தைத்தான் திரும்பத் திரும்பச் சொல்கின்றன: இளைஞர்கள் இதழ்களை
வாங்குவதில்லை. அவர்களது கனவுகளும் தேவைகளும் முற்றிலும் மாறிவிட்டன.
அவர்களுக்கு முன்பெல்லாம் அரசுமேல் கோபம் இருந்தது உண்டு. இன்று அரசைப்
பற்றியோ அரசியலாளர் பற்றியோ அக்கறையே இல்லை.

தான் உண்டு, படிப்பு உண்டு, வேலை வாய்ப்பு உண்டு, முன்னேற்றம் உண்டு,
காதல் உண்டு, இதையெல்லாம் தக்கவைத்துக்கொள்ள கடவுளின் மேல் பக்தியும்
உண்டு. இவர்களுடைய சைக்காலஜியைப் புரிந்துகொண்டு இதழ்களை உருவாக்கவே
முடியவில்லை. மேலும் ஆங்கிலத்திலும் இவர்களது தேவைகளை பகுதி
பகுதியாகத்தான் நிறைவேற்றுகிறார்களே அன்றி, முழுமையாக நிறைவேற்றக்கூடிய
ஒரே இதழ் என்பதும் இல்லை. விளையாட்டுக்குத் தனி இதழ், ஃபேஷனுக்கு தனி
இதழ், ஃபிட்நஸுக்கு தனி இதழ்.

இன்றைய இளைஞன் பயங்கர காப்ளிகேட்டானவன். இவனது முன்னுரிமைகள்
மாறிப்போய்விட்டன. தேசியமோ, கம்யூனிசமோ, லட்சியவாதமோ ஏதேனும் ஒன்றுகூட
இவர்களை இணைக்கும் கண்ணியாக இல்லை. பயங்கரமாகப் பிரிந்து இருக்கிறார்கள்.

இப்படிப்பட்ட பின்னணி கொண்ட இளைஞர் குழுவுக்கு ஆ.வி.யின் தன்மையே மாற்றி
அமைத்து, அவர்களது ஆர்வங்களுக்கு இடம்கொண்டுக்க முடியும், அதன் மூலம்
ஆ.வி.யை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு போக முடியும் என்று நினைத்து,
இப்போது அதைச் செயல்படுத்தியும் காட்டி இருக்கும் சீனிவாசன் உண்மையில்
தொலைநோக்கு கொண்டவர்தான்.

இதில் வெற்றி கிடைத்தால், இன்னும் முப்பது ஆண்டுகளுக்கு ஆ.வி.
கொண்டாடப்படும், நினைக்கப்படும், எதிர்பார்க்கப்படும். வெற்றி தவறினாலோ,
என்னாகும் என்று சொல்வதற்கு இல்லை.

*****

எல்லா பெரிய தமிழ்ப் பத்திரிகைகளும் ஒரு குறுக்குச் சாலைக்கு வந்து
நிற்கின்றன. அவர்களோடு வளர்ந்த தலைமுறை இன்று வழுக்கைத் தலையர்களாகி,
மெல்ல மெல்ல இறைவனடி சேர்ந்தும் கொண்டு வருகிறார்கள். ஒவ்வொரு முறையும்,
இதுபோன்ற இதழ்கள் தங்கள் தோலை உரித்துப் போட்டுவிட்டு,
புத்துணர்ச்சியுடன் கிளம்ப வேண்டி இருக்கிறது.

எனக்குத் தெரிந்து 1997 அக்டோபரோ / நவம்பரோ மாதத்தில், ஆ.வி இதுப்போல்
ஒருமுறை புது உணர்வு பெற்றது. அதுவரை நவீன இலக்கியம் பக்கம் அதிகம்
தலைவைக்காத ஆ.வி. சட்டென அனைத்து நவீனர்களையும் அரவணைத்துக்கொண்டு புதிய
முகமும் பொலிவும் பெற்றது.

அதேபோல் மீண்டும் புதுப் பொலிவு பெற்ற மற்றொரு தருணம், 2006 ஏப்ரல்
புத்தாண்டு இதழ். எப்போதும் விற்கும் கவர்ச்சி, கும்மாளம் போன்றவற்றை
விட்டுவிட்டு, மிகவும் சீரியஸ்ஸான விஷயங்களைப் பேசத் தொடங்கியது.

சென்ற பல சமயங்களில் நடைபெற்ற மாற்றங்கள் அனைத்தும் பொதுவாக இதழ்கள்
வாங்கும் 30+ / 35+ வாசகர்களை மனத்தில் வைத்தே செய்யப்பட்டன.  ஆனால்,
இம்முறை இன்னும் தைரியமாக 20+ வாசகர்களை மனத்தில் கொண்டு
செய்யப்பட்டிருக்கிறது.

*****

இதழ்கள் இரண்டையும் படித்துவிட்டேன். இளைஞர்களுக்கான பெரிய விகடனில்
க.சீ.சிவகுமார், நாஞ்சில் நாடன், தமிழச்சி போன்ற இலக்கியவாதிகள் தலை
தென்படுகிறது. இதில் அதிகம் கை வைக்கவில்லை.

மற்ற எல்லா பக்கங்களிலும் பேசும் மொழி, விளி, நடை, உள்ளடக்கம் என்று
அனைத்தும் முற்றிலும் வேறோர் தொனியையும் கொண்டாட்டத்தையும் கொண்டு
இருக்கின்றன. லே-அவுட், டிசைன் அம்சங்களும் நிறைய மாற்றமடைந்திருக்கிறது.
வெகுஜன ஊடகமாக இளைஞர்களை சென்றுசேர அனைத்து அம்சங்களும் சேர்க்கப்பட்டு
இருக்கின்றன. காண்டன் மிக்ஸ் மிகச்சரியாக இருக்கிறது.

சின்ன இதழ் ரீப்ரிண்ட் விகடன் மாதிரி இருக்கிறது. பழைய விஷயங்களை நிறைய
மறு பதிப்பு செய்திருக்கிறார்கள். இணையத்தில் இருக்கும் பழைய
தலைமுறையினர் இதனை நிச்சயம் வரவேற்பார்கள். வெளியில் காசுகொடுத்து
வாங்கும் புதிய தலைமுறை இதனை எவ்வளவு தூரம் ரசிக்கும் என்று தெரியவில்லை.

விகடனைச் சேர்ந்தவர்கள் எல்லோரும் புதுப்படம் ரிலீஸ் செய்துவிட்டு,
ரிசல்டுக்குக் காத்திருக்கும் தயாரிப்பாளர் மூடில் இருக்கிறார்கள்.
வழக்கம்போல், வெகுஜன வாசகர்கள் எப்படி இதை எடுத்துக்கொள்ளப் போகிறார்கள்
என்பது இனிமேல்தான் தெரியும்.