கரோனா: கிராமமும், நகரமும்

‘நேசமுடன்’ முதல் இதழில், கரோனாவால் கிராமப் பொருளாதாரத்தில் ஏற்படவிருக்கும் பாதிப்புகள் பற்றி தெரிவித்திருந்தேன். பிசினஸ் ஸ்டாண்டர்டு இதழ் இதே விஷயத்தைப் பற்றி எழுதியிருக்கிறது. அது, மேற்கு வங்க மாநில கிராம சமூகங்களில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றத்தைப் பற்றிப் பேசுகிறது.
கிராம சமூகங்களில் என்னென்ன சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன தெரியுமா?
1. முதலில், வெளியூர்களில் இருந்து வந்த மக்களை உள்ளூர்க்காரர்களே சந்தேகத்துடன் பார்க்கின்றனர். வெளியூரில் வந்தவர்கள், கரோனாவைக் கொண்டுவந்திருக்கலாம் என்ற அச்சம் நிலவுகிறது. அதனால், அவர்கள் ‘கண்காணிக்கிறார்களாம்.’
2. அடுத்த சில நாட்களில் வெளியூரில் வந்தவர்களிடம் உள்ள சேமிப்புத் தொகை கரைந்துவிடும். அப்புறம் என்ன செய்ய முடியும்? மாநில அரசு வழங்கும் நிதி உதவியை நம்பியே வாழவேண்டும். அது எத்தனை நாட்களுக்குத் தொடரும் என்று தெரியவில்லை.
3. கிராமப் பகுதிகளில் உள்ள பல சிறு மளிகைக் கடைகள் நிரந்தரமாக மூடப்பட்டுவிட்டன. பெரிய வணிகர்களிடம் இருந்து அத்தியாவசிய உணவுப் பொருட்களைக் கூட அதிக விலைக்கு வாங்க வேண்டியிருப்பதால், இவர்களால் கடைகளை நடத்த முடியவில்லை.
4. கிராமங்களுக்குத் திரும்பிவந்துள்ள புலம்பெயர் தொழிலாளர்கள், உள்ளூர் பொருளாதாரத்தில் மிகப்பெரும் சுமையாகப் பார்க்கப்படுகிறார்கள். விவசாயத்தில் ஈடுபடுவதற்குத் தேவையான பயிற்சிகள் இவர்களுக்கு இல்லை. அவர்களுக்கு வேறு தொழில்களில் பயிற்சி உண்டே தவிர, விவசாயத்தில் அல்ல. ஆனால்,
கிராமங்களில், விவசாயப் பணிகள் மட்டுமே கிடைக்கும் என்பதால், இவர்கள் எப்படி புதிய சூழலுக்கு பழகுவார்கள்?
5. கிராமங்களில் தொழிலாளர்களின் எண்ணிக்கை திடீரென பெருகுவதால், விவசாயம் உள்பட, பல துறைகளிலும் நிலவி வரும் கூலித் தொகை குறைந்துபோய்விடும். இவர்கள் எல்லோரும் வேறு வழியில்லாமல் 100 நாள் வேலைத்திட்டத்தைத் தான் நம்பியிருக்க வேண்டும். ஆனால், கடந்த நான்கு ஆண்டுகளில், இத்திட்டத்தின் கீழ் 40 முதல் 45 நாட்களுக்குத் தான் வேலை கொடுக்க முடிந்திருக்கிறது. மேலும் தினக்கூலி என்பது விவசாயக் கூலியை விடக்
குறைவானது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
6. கூலிவேலை செய்வதற்கான ஆட்களின் எண்ணிக்கை அதிகமாகிவிட்டதால், புலம்பெயர் தொழிலாளர்கள், கிராமங்களில் மேலும் சுரண்டப்படுவார்கள்.
7. மேற்குவங்கத்துக்குத் திரும்பிவரும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள், சுமையாகவும் வேண்டாத விருந்தாளியாகவுமே பார்க்கப்படுகிறார்கள்.
ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போன்றதுதான், இந்த மேற்கு வங்க உதாரணம்.
நகரம் வேறு சில பிரச்னைகளைச் சந்திக்கிறது.
1. கேரளத்தில், மதுப்பழக்கத்துக்கு அடிமையானவர்கள், ஊரடங்கு காலத்தில் திண்டாடிப் போயிருக்கிறார்கள். இருவர் தற்கொலை செய்துகொண்டதாக செய்தி.
கேரள முதல்வர், மருத்துவ அறிவுரையின்படி, இவர்களுக்கு மது வழங்கலாம் என்று கருத்து சொல்லி, கடும் விமர்சனத்தைச் சந்தித்துள்ளார்.
2. கரோனா தொற்று முதலில் ஏற்பட்ட சீனாவின் வூஹான் மாகாணத்தில், கடந்து மூன்று மாதங்களில் தம்பதிகளிடையே பேச்சுவார்த்தை தடித்து, விவாகரத்து வரை சென்றிருக்கும் செய்திகள் வந்துள்ளன.
3. வீட்டிலேயே இருப்பதால், குடும்ப வன்முறை, பாலியல் தொந்தரவுகள் ஏற்படலாம் என்று எச்சரிக்கும் சில செய்திகளையும் படிக்க நேர்ந்தது.
4. 2008 பொருளாதார தேக்கத்துக்குப் பின்னர், மீண்டும், ஒருவித அநித்திய சூழலைப் பார்க்கிறேன். வேலை இருக்குமா, இருக்காதா என்பதுதான் பலரது மனத்தில் முதற் கேள்வி. யாருமே தவிர்க்கமுடியாத, இன்றியமையாத நபர் கிடையாது என்ற உண்மை தெளிவாகப் புரிகிறது. தான் இருந்தால் தான் குறிப்பிட்ட வேலை
நடக்கும் என்று இனி நம்புவதற்கில்லை. விளைவு, விரக்தி.
5. நகரங்களில் மறுசீரமைப்பும் மறுகட்டமைப்பும் எப்போது தொடங்கி, நிலைமை சீரடைவதற்கு எத்தனை காலம் ஆகும் என்பதையும் யாராலும் அறுதியிட்டுச் சொல்ல முடியவில்லை.
ஒருமாதிரியான நிலையற்ற தன்மை. எப்படி மீளப் போகிறோமோ?

தமிழகத்தில் முடங்கிய கணித நதி

முதலில் சில பெயர்களைச் சொல்கிறேன், ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள்:
கே.ஆர்.பார்த்தசாரதி, சி.எஸ். சேஷாத்ரி, எம்.எஸ். நரசிம்மன், வி.எஸ். வரதராஜன், எஸ்.ஆர். ஸ்ரீனிவாச வரதன், எம்.எஸ். ரகுநாதன், இ.எம்.வி. கிருஷ்ணமூர்த்தி, எஸ். ரமணன், எஸ். ராகவன், ஆர். ஸ்ரீதரன், ஆர். பார்த்தசாரதி, டி.பார்த்தசாரதி, ஆர்.பாலசுப்பிரமணியன், அண்ணாமலை ராமநாதன், வி.கே. சுந்தர், டி.ஆர்.
ராமதாஸ், ராமன் பரிமளா, எஸ். தங்கவேலு…
உலக கணித வரைபடத்தில் இந்தியாவின் புகழை நிலைநாட்டிய அற்புத தமிழர்கள் இவர்கள். நான் அடிப்படையில் கணிதம் படித்தவன். எப்போதும், கணிதத் துறையின் மீது ஆர்வமுண்டு.
தினமலர் மாணவர் பதிப்பான ‘பட்டம்’ இதழின் கணித பக்கத்துக்கு இந்திய கணித மேதைகளைப் பற்றி எழுதலாம் என்று ஆசை வந்தது. தேடத் தொடங்கியபோது தான் பெரிய வரலாற்று உண்மை என்னைத் தாக்கியது.
அதாவது, 1930கள் முதல், சுமார் 1970கள் வரை, தமிழகத்தில் இருந்து கணித அறிவுஜீவிகளின் வற்றாத ஆறு ஓடிக்கொண்டே இருந்திருக்கிறது. மிகவும் சுவாரசியமான வரலாறு இது.
தமிழகத்தின் பல்வேறு சிற்றூர்களில் இருந்தெல்லாம் கணித மேதைகள் தோன்றியுள்ளார்கள். இவர்கள் எல்லோரும் சென்னை நோக்கிய படையெடுப்பார்கள்.
இவர்களுக்கு இருந்தது இரண்டே முகவரிகள் தான். ஒரு பகுதியினர் இலயோலா கல்லூரிக்குப் போவார்கள். இன்னொரு குழுவினர் விவேகானந்தா கல்லூரிக்கும்,மாநிலக் கல்லூரிக்கும் செல்வார்கள்.
இலயோலாவில் அந்தக் காலத்தில், ஃபாதர் ரெசின் (Fr. C. Racine, S. J) என்றொரு உயர்ந்த கணித பிதாமகர் இருந்துள்ளார். இவரே அனைத்து மாணவர்களையும் ஊக்கப்படுத்தி, மும்பையில் உள்ள டாடா அடிப்படை ஆய்வு மையத்தின் கணிதத் துறைக்கு அனுப்பிவைத்துள்ளார். அங்கே சென்றவர்கள் எவரும் சோடை
போனதில்லை. தொடர்ச்சியாக கணித ஆய்வுகள் மேற்கொள்ள இவர்கள் பிரான்ஸ் போன்ற ஐரோப்பிய நாடுகளுக்குப் போய் புகழ்பரப்பினார்கள்.
இந்தப் பக்கம், விவேகானந்தாவிலும், மாநிலக் கல்லூரியிலும் பயின்றவர்கள், நேராக கொல்கத்தாவில் இருக்கும் இந்தியப் புள்ளியியல் இன்ஸ்டிடியூட்டுக்குப் போனார்கள். அங்கே கணித ஆய்வுகளில் கொடிகட்டிப் பறக்க, இவர்கள் எல்லோரையும் அமெரிக்கா அரவணைத்துக்கொண்டது.
மும்பையில் கே.எஸ். சந்திரசேகரனும் கொல்கத்தாவில் சி.ஆர். ராவும் தான் தமிழக கணித மாணவ அறிவுஜீவிகளுக்கு குருமார்கள். அப்படியொரு வாய்ப்பை இவர்களுக்கு உருவாக்கிக் கொடுக்க, உலக அளவில் கணிதத்தில் தமிழகம் கோலோச்சியுள்ளது.
எண்பதுகளுக்குப் பிறகு இந்த வரலாற்றில் பெரிய தொய்வு. இலயோலாவும் விவேகானந்தாவும் மாநிலக் கல்லூரியில் இத்தகைய உயர்தரமான கணித அறிஞர்களை உற்பத்தி செய்யவில்லை. தமிழகப் பெற்றோர்களின் முன்னுரிமைகள் மாறியிருப்பதையே இது உணர்த்துகிறது.
சுயநிதிப் பொறியியல் கல்லூரிகளும், பிற்பாடு கணினி அறிவியலும் கோலோச்சத் தொடங்க, அடிப்படைக் கணிதத்தை தமிழகப் பெற்றோர்கள் கைவிட்டுவிட்டனர்.
இன்னொருவிதமாகவும் புரிந்துகொள்ளலாம். எழுபதுகளிலும் எண்பதுகளிலும் மிகப்பெரும் பொருளாதார மந்தநிலை நீடித்தது. தனியார் வேலைவாய்ப்புகள் சரிந்திருந்தன. ஆசிரியர் பணியும் வங்கித் துறை வேலைகளும் தான் அப்போதைய கனவு. நடுவே சில ஆண்டுகள் விளம்பர ஏஜென்சிகள் (அதுவும் வெளிநாட்டு
விளம்பர ஏஜென்சிக்களின் வரவால்!) ஒரு கற்பனை உலகைச் சிருஷ்டித்தன. இந்நிலையில், எது பணம் சம்பாதிக்க ஏதுவான துறையோ, அதில் தம் குழந்தைகளை ஈடுபடுத்தினர். இவையெல்லாம் 1991க்கு முன்புள்ள இரண்டு தசாப்தங்களில் தமிழகத்தின் வரலாறு.
இங்கே தான், கணிதம் பின்தங்கிப் போனது.
இப்போதும் தமிழக பெற்றோர்கள் சிலரிடத்தில், அறிவியலுக்கும் கணிதத்துக்கும் மவுசு உள்ளதென்றால், அது தமிழகத்தின் பழைய வாசனையால் தான். எந்த மாணவரேனும் கணிதத்தில் மிகச் சிறப்பாக செயல்பட்டால், நாம் உச்சிமுகர்ந்து கொண்டாடுவதற்கும் காரணம், நம் மரபணுவிலேயே கணிதம் ஊறிக் கிடக்கிறது என்பதுதான்.
முடங்கிப் போன கணித நதி எப்போது ஓடப் போகிறதோ?

க(ணி)தனகுதூகலம்

கணித அறிஞர்களைத் தேடிக்கொண்டு போனபோது, என் கண்ணில் தட்டுப்பட்ட முத்துதான், ‘பாவனா.’ பேரா.சி.எஸ். அரவிந்தாவை ஆசிரியராக கொண்டு வெளிவரும் அற்புத கணித இதழ் இது. ஆண்டுக்கு நான்கு இதழ்கள் தான். பெங்களூருவில் இருந்து வெளிவருகிறது.
ஒவ்வொரு இதழிலும் இந்திய கணித அறிஞர்களின் மிக விரிவான பேட்டிகள் இடம்பெறுகின்றன. பல்வேறு கணிதத் துறைகள் தொடர்பான கட்டுரைகளும் உண்டு. பழைய இதழ்களை எல்லாம் இணையத்தில் சேமித்து வைத்துள்ளனர்.
அனைத்து இதழ்களையும் பைத்தியம் மாதிரி நான் ஒரே இரவில் படித்திருக்கிறேன். பலமுறை மீண்டும் மீண்டும் படித்திருக்கிறேன். நண்பர்கள் எல்லோருக்கும் இதைப் பற்றி வாய் ஓயாமல் எடுத்துச் சொல்லியிருக்கிறேன். இந்தியக் கணிதவியலின் பங்களிப்புகளை வெளிச்சம் போட்டுக் காட்டும் பேட்டிகள் இவ்விதழ்களில்
இடம்பெற்றுள்ளன.
என் வாழ்நாளுக்குள் நான் செய்ய விரும்பும் ஏராளமான வேலைகள் உண்டு. அதில் முக்கியமானது, இவ்விதழ்களில் வெளியாகியுள்ள பேட்டிகளைத் தொகுத்து, தமிழில் மொழிபெயர்த்து வெளியிட வேண்டும் என்பது. இதில் தான், தமிழகத்தின் முக்கியமான கணித அறிஞர்களின் பேட்டிகளும் இடம்பெற்றுள்ளன.
ஐம்பதாண்டுகளுக்கு முன்பு தமிழகத்தின் கணித வளம் எப்படிப்பட்டது, பெற்றோர்கள் அந்தக் காலங்களில் எப்படி தம் பிள்ளைகளை ஊக்குவித்தார்கள், எத்தகைய
அற்புதமான ஆசிரியர்கள் மாணவர்களின் அறிவைச் செழுமைப்படுத்தினார்கள் என்றெல்லாம் இந்தப் பேட்டிகள் தெரிவிக்கின்றன.
அப்பப்பா… பெரிய கணித யாகம் அன்றைய கல்லூரிகளில் நடைபெற்றுள்ளன என்ற எண்ணம் தான் எனக்கு ஏற்படுகிறது.
உண்மையில் எனக்கு வேறொரு எண்ணமும் உண்டு. மத்திய அரசு விஞ்ஞானியான நண்பர் த.வி. வெங்கடேஸ்வரனிடமும் இதைப் பற்றிச் சொல்லிக்கொண்டு இருந்தேன். விஞ்ஞான் பிரசார் சார்பாக, அவர்கள் ஒருசில நூல்களை வெளியிடும் முயற்சியில் உள்ளனர். தமிழகத்தின் கணித அறிஞர்களில் தற்போது இன்னும் உடல்நலத்துடன் உள்ளவர்களைப் பேட்டி கண்டு எழுதி, புத்தகமாக வெளியிட வேண்டும் என்பது என் அவா. ஆதரவு தாருங்கள் என்று சொல்லியிருக்கிறேன்.
சில சமயங்களில் என் நடத்தை எனக்கே ஆச்சரியமளிப்பது உண்டு. ‘பாவனா’ இதழ் ஆசிரியரிடம் பேசவேண்டும் என்பது என்னுடைய ரொம்ப நாள் கனவு.
திடீரென்று அவர்களுடைய வலைத்தளத்தில், ஒரு அலைபேசி எண் கொடுக்கப்பட்டது. அழைத்துப் பேசியபோது, அரவிந்தாவே எதிர்ப்பக்கம் உரையாடினார்.
உண்மையில் நான் சிறுகுழந்தையின் குதூகலத்தோடு என் மகிழ்ச்சியைத் தெரிவித்தேன். தமிழகத்தில் அந்த மனிதர் சுமார் 10 ஆண்டுகள் இருந்திருக்கிறார். என் குரலில் தெரிந்த மகிழ்ச்சி அவரையும் தொற்றிக்கொண்டது.
அனைவரிடமும் கணிதத்தை எடுத்துச் செல்லவேண்டும் என்பதற்காகவே, ஒரு மனிதர் இவ்வளவு தூரம் உழைக்கும்போது, அவரை மெச்சாமல் எப்படி இருக்க
முடியும்?
கணித ஆர்வம் உள்ளவரா நீங்கள்? இதோ ‘பாவனா’ இதழ்கள். படியுங்கள்: http://bhavana.org.in/

‘நீங்களும் உங்க ஐடியாவும்!’

தற்போது பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் தொடங்கியிருக்கவேண்டும். கரோனா கொள்ளை நோயினால் தள்ளிப் போயிருக்கிறது. ஏப்ரல் 15 முதல் தேர்வுகள் நடத்தப்படலாம் என்று சொல்லப்பட்டது. ஏப்ரல் 14இல் தான் பிரதமர் அறிவித்த ஊரடங்கு உத்தரவு நிறைவுபெறவிருக்கிறது. அடுத்த நாளே, பொதுத் தேர்வுகள் தொடங்கும் என்று நம்புவதற்கில்லை. இதுபற்றி சமீபத்தில் தொலைக்காட்சி ஒன்றின் விவாதத்தில் பேசிவிட்டு, வீடு திரும்பினேன். என் முதல் விமர்சகரான, என் மனைவி சுபாஷிணி பிடித்துக்கொண்டுவிட்டார்.
“இன்னிக்கு நீங்க பேசினது எனக்குப் பிடிக்கவே இல்லை.”
லேசான ஜெர்க். பொதுவாக விமர்சனங்கள் கறாராக இருந்தாலும் இதமாக ஆரம்பிக்கும். இன்று நேரடித் தாக்குதல்.
“என்ன தப்பா பேசிட்டேன்?”
“பத்தாம் கிளாஸ், பிளஸ் டூ வெல்லாம் அப்படியே கால் பரீட்சை, அரை பரீட்சை மார்க்கை வெச்சே, பாஸ் போடலாம். மார்க் போடலாம்னு பேசறீங்களே? என்ன நியாயம் இது?”
“இன்னிக்கு இருக்கிற சூழ்நிலைய நினைச்சு அப்படி சொன்னேன். பசங்களை எல்லாம் எக்ஸாம் எழுதச் சொல்றது நியாயம்னு தோணல சுபா.”
“அதுக்காக? குவார்ட்டர்லிலேயும் ஹாஃப் இயர்லிலேயும் பசங்க மார்க்கே வாங்கியிருக்க மாட்டாங்களே. ரிவிஷன் எக்ஸாம் சமயத்துல தான் கொஞ்சம் சீரியஸ்னஸ் வந்திருக்கும். ஸ்டடி லீவுல தான் படிச்சிருப்பாங்க. படிப்படியாக முன்னேறியிருப்பாங்க. எக்ஸாம் கிட்ட வரும்போதுதான் ராவும் பகலும் படிச்சிருப்பாங்க. இப்போ போய், அவங்களோட, கால் பரீட்சை, அரை பரீட்சை மார்க்கை எடுத்துக்குங்கன்னா, அவங்க உழைப்புக்கு என்ன அர்த்தம்? நம்ம நிதர்சனாவுக்கு என்ன ஆச்சு?”
என் இரண்டாவது மகள், நிதர்சனா, சி.பி.எஸ்.இ. பள்ளி ஒன்றில் பத்தாம் வகுப்பு. அவளது பள்ளியில், கணிதம் மிகவும் சிரமம், சிரமம் என்று சொல்லியே பயமுறுத்திவிட்டார்கள். விளைவு, ‘ஸ்டாண்டர்ட் மேத்ஸ்’க்குப் பதில், ‘பேசிக் மேத்ஸ்’ எடுத்துக்கொள்ளச் சொல்லிவிட்டார்கள். ரிவிஷன் தேர்வுகளில் எல்லாம் பயந்து, பயந்து எழுதினாள்.
சி.பி.எஸ்.இ. நடத்திய இறுதித் தேர்வில், பேசிக் மேத்ஸ் மட்டுமல்ல, ஸ்டாண்டர்டு மேத்ஸும் வெகு சுலபமாக இருந்தது. இப்போது, பிளஸ் 1 போகும்போது, அவள் பேசிக் மேத்ஸ் எடுத்ததால், கணிதம் உள்ள எந்த குரூப்பும் கொடுக்கப்பட மாட்டாது. சி.பி.எஸ்.இ.யில் மட்டுமல்ல, மாநில பாடத் திட்டத்திலும் அவளால், கணிதத்தை உயர்நிலைப் பள்ளியில் எடுத்துப் படிக்க முடியாது. இதைத் தான் என் மனைவி சுட்டிக்காட்டினார்.
“கரோனா பயமாத்தான் இருக்கு. ஆனால், பத்துக்கும் பிளஸ் டூவுக்கும் ஆல் பாஸ் போடுங்கறதோ, கால் பரீட்சை, அரைப் பரீட்சை மார்க்கை எடுத்துக்குங்கன்னு சொல்றதெல்லாம் ரொம்ப தப்பு. அவங்களோட முயற்சியையும் வேகத்தையும் நீங்க சிதைக்கறீங்க. என்ன இப்போ? கொஞ்சம் தள்ளி எக்ஸாம் வெக்கறது. மே மாசம் கூட வெக்கட்டுமே. அடுத்த வருஷம் ஸ்கூலை ஜூலை, ஆகஸ்டுல ஆரம்பிச்சா போச்சு. ஜூன் மாசத்துலேயே தான் ஆரம்பிக்கணுமா? இஞ்சினியரிங்க் காலேஜெல்லாம் ஆகஸ்டுல தானே ஆரம்பிக்குது? 210 நாட்களுக்குப் பதில் 160 நாள் ஸ்கூல் நடத்தறது. சனிக்கிழமை நடத்தலாம், பண்டிகை விடுமுறையெல்லாம் கேன்சல் பண்ணிடலாம். இதையெல்லாம் சொல்றதை விட்டுட்டு, அரசாங்கத்துக்கு கிறுக்குத்தனமா ஐடியாவெல்லாம் கொடுக்கறீங்க. கொஞ்சம் ஜாக்கிரதையே பேசுங்க.”
எனக்குப் பேச்சு எழவில்லை.

புரட்டிப் போடும் கரோனா

கரோனா கொள்ளைநோயில் இருந்து தப்பிப்பதற்காக விதிக்கப்பட்டுள்ள ஊரடங்கின் ஐந்தாவது நாள் இன்று. இதற்குள் எதிர்பாராத இரண்டு மூன்று விஷயங்கள் நடந்துவிட்டன. ஒரு சின்ன நகர்வு தான். வீட்டுக்குள் அனைவரும் பத்திரமாயிருங்கள் என்று சொல்லப்பட்டது. அவ்வளவுதான். ஆனால், தொடர்நிகழ்வாக அது எவ்வளவு தூரம் பல்வேறு இடர்களை ஏற்படுத்துகிறது!
தில்லியில் இருந்து பல ஆயிரம் தொழிலாளர்கள் கால்நடையாகவே ஊருக்குத் திரும்புகிறார்கள். அங்கே தான் அப்படியென்று பார்த்தால், கேரளத்தில் இருந்து பல கட்டடத் தொழிலாளர்கள் தமிழகம் நோக்கித் திரும்பிவருகிறார்கள். அதுவும் இரயில்வே இருப்புப்பாதை வழியாகவே. கோவையில் அவர்கள் தடுத்து நிறுத்தப்படும் செய்திகள் வருகின்றன.
இன்னொரு புறம், கேரள- கர்நாடக எல்லைப் பகுதியில், சாலைகளை மறித்து, கர்நாடக காவல்துறை மண்ணைக் கொட்டி தடுப்புகள் ஏற்படுத்தியுள்ளன. அத்தியாவசியத் தேவைகளுக்காக கூட பயணம் மேற்கொள்ள முடியவில்லை, விரைந்து நடவடிக்கை எடுங்கள் என்று கேரள முதல்வர், மத்திய அரசுக்குக் கடிதம் எழுதியுள்ளார்.
கோவாவில் தமிழக மீனவர்கள் மாட்டிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களை மீட்க நடவடிக்கை எடுங்கள் என்று தமிழக மீனவ கிராமம் ஒன்றில் இருந்து தமிழக அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
வெளியூர்களில் இருந்து வருகிறவர்களை பல கிராமங்கள், ஊருக்குள் அனுமதிக்க மறுப்பதாகவும் செய்திகள் சொல்கின்றன. திடீரென்று நான் வேறு; நீ வேறு என்ற பிரிவினை மனப்பான்மை தோன்றியிருப்பது ஆச்சரியமளிக்கிறது.
பல உண்மைகளைச் சொல்லும் செய்திகள் இவை. வெளியூர், வெளிமாநிலங்களில் இருந்து தமிழகத்துக்குப் பஞ்சம் பிழைக்க வந்தவர்களைப் போலவே, தமிழகத்தில் இருந்து ஏராளமானோர் வேறு மாநிலங்களுக்கு இடம்பெயர்ந்திருப்பது இப்போது துலக்கமாகத் தெரிகிறது. இவர்கள் நிரந்தரமாக நகர்ந்தவர்கள் அல்லர்; கூலிகளாக, தாற்காலிக பணியாளர்களாக, ஒப்பந்தப் பணியாளர்களாக சென்றவர்கள்.
இவர்கள் மீண்டும் தம் தாய்மண்ணுக்கே திரும்புகிறார்கள். அந்தக் காலத்தில் எம்டன் குண்டு போட்ட போது, சென்னையைத் துறந்து பலர் தத்தமது கிராமங்களுக்கு திரும்பியதாக சரித்திரத்தில் படித்திருக்கிறேன். இப்போது அதேபோன்றதொரு நிகழ்வு நடந்துகொண்டிருக்கிறதோ என்ற எண்ணமே மேலிடுகிறது.
ஒவ்வொரு ஊரிலும் ஒரு மாதிரியான ரீ அரேஞ்ச்மென்ட் நடந்துகொண்டிருக்கிறது. ஊருக்குள் திரும்பி வருகிறவர்கள், பொருளாதார அழுத்தத்தை இன்னும் அதிகப்படுத்தத் தான் போகிறார்கள். இவர்களால் உள்ளூரில் போதிய வருவாய் ஈட்டமுடியவில்லை என்றுதானே வேறு வெளியூர்களுக்கு வேலை தேடிப் போனார்கள்? இவர்களால் எப்படிப்பட்ட சமூக அழுத்தங்கள் ஏற்படப் போகின்றன என்பதையும் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.
நமது சமூக, பொருளாதாரக் கட்டமைப்பையே கரோனா மாற்றிப் போட்டுவிடும் போலிருக்கிறதே!

குல்ஜாருக்கு அதிர்ஷ்டம்

சாகித்ய அகாதெமி மொழிபெயர்ப்பு விருது 2019 தேர்வுக் குழுவில் நானும் ஒரு உறுப்பினனாக இருந்தேன். டாக்டர் பிரேமா நந்தகுமார், சா. தேவதாஸ் ஆகியோருடன் அமர்ந்து, விருதுபெறும் படைப்பையும் மொழிபெயர்ப்பாளரையும் இறுதி செய்யும் நிகழ்வு சென்னையில் நடைபெற்றது. மிகவும் மகிழ்ச்சியான, ஆரோக்கியமான விவாதங்கள் நடைபெற்ற மூன்று மணிநேரங்கள் அவை.
அதற்கு முன்னர், இறுதிப் பட்டியலில் 11 புத்தகங்கள் இடம்பெற்றிருந்தன. கிட்டத்தட்ட 12 நாட்களில் அனைத்துப் புத்தகங்களையும் படித்து முடித்து, எனக்கான குறிப்புகளை எடுத்துக்கொண்டு, இறுதித் தேர்வுக் கூட்டத்துக்குப் போயிருந்தேன்.
என் பட்டியலை விதவிதமான வழிகளில் வடிவமைத்துக்கொண்டிருந்தேன். நல்ல தரமான மொழிபெயர்ப்பு, தரமான படைப்பின் தரமான மொழிபெயர்ப்பு, புதுமையான படைப்பின் தரமான மொழிபெயர்ப்பு, தமிழுக்கு நிச்சயம் வளம் சேர்க்கும் மொழிபெயர்ப்பு என்றெல்லாம் நானே எனக்குள் பல்வேறு வரையறைகளை வகுத்துக்கொண்டிருந்தேன்.
இவற்றையெல்லாம் எடுத்துப் பேசுவதற்கு அன்று வாய்ப்பு கிடைத்தது.
இறுதியில் மனோஜ் குரூர் மலையாளத்தில் எழுதிய, கே.வி. ஜெயஸ்ரீயால் மொழிபெயர்க்கப்பட்ட நாவலான ‘நிலம் பூத்து மலர்ந்த நாள்’ என்ற நாவல் பரிசுக்குரியதாக தேர்வு பெற்றது.
இதோடு என் மனத்தில் பாதிப்பை ஏற்படுத்திய சில புத்தகங்களையும் குறிப்பிட விரும்புகிறேன்.
முதலில், வாஸந்தி மொழிபெயர்த்த ‘துருவ நட்சத்திரங்கள்’ எனும் நாவல். பஞ்சாபி மொழியில் மிக முக்கியமான நாவலாக இது கருதப்படுகிறது. குல்ஜார் சிங் சிந்து என்ற எழுத்தாளரது படைப்பு.
நான் இதில் மிகவும் ரசித்தது இதன் மொழிபெயர்ப்பைத்தான். ‘பட்டுக் கத்தரித்தாற் போல்’ என்றொரு சொற்றொடர் உண்டு. ரொம்ப பழைய பாணியாகத் தோன்றினாலும் பரவாயில்லை. இந்தச் சொற்றொடர் தான், துருவ நட்சத்திரங்கள் நூலின் மொழிபெயர்ப்பைக் குறிக்கும் சரியான சொல்.
ஒவ்வொரு வரியையும் பத்தியையும் நேர்த்தியாக உருவாக்கியிருக்கிறார் வாஸந்தி. அந்த மொழிபெயர்ப்பைப் பார்க்கும்போதே, அதற்குப் பின்னே போயிருக்கும் உழைப்பை என்னால் யூகிக்க முடிந்தது. முதலில் ஒருமுறை மொழிபெயர்த்துவிட்டு, அதற்குப் பிறகு அந்தப் பிரதியைச் செம்மைப்படுத்தியுள்ளார். பெரும்பாலான மொழிபெயர்ப்புகளில், வாக்கியத்தை முடிக்கும்போது, ஒரே மாதிரியாக இருக்கும். ‘சென்றார்’, ‘சொன்னார்’, ‘என்றார்’… கட்டுரைகளாக இருந்தால், ‘குறிப்பிடத்தக்கது’ எல்லா இடங்களிலும் எட்டிப் பார்க்கும் (உபயம் : சன் டிவி!!).
இந்த நாவலில், மிகவும் கவனத்துடன், ஒவ்வொரு வரியையும் திருந்த நறுக்கியிருக்கிறார். தேவையற்ற உபரி சொற்களை நீக்கி, கச்சிதமாக்கியுள்ளார். தமிழில் படிக்கும்போது, எந்த இடறலும் இல்லை. வாசிப்பது ஒரு பஞ்சாபி நாவல் தானா என்றே சந்தேகம் எழுகிறது.
இந்தியா டுடே இதழில் பணியாற்றிய அனுபவம், எழுத்தாளராகவும் இருக்கும் வீச்சு ஆகியவை வாஸந்தியின் மொழிபெயர்ப்பை மேன்மைப்படுத்தியுள்ளது. எழுத்தாளரே மொழிபெயர்ப்பாளராகவும் இருப்பதால் கிடைக்கும் அனுகூலம் இது. குல்ஜார் சிங் சிந்துவுக்குத்தான் அதிர்ஷ்டம். நல்ல மொழிபெயர்ப்பாளர் அமைவது ஏழு ஜன்மத்துப் புண்ணியம்!

லிபரல்

புதிய தலைமுறை தொலைக்காட்சியின் ‘புதுப் புது அர்த்தங்கள்’ நிகழ்ச்சியில் சமீபத்தில் பேசும்போது, மீண்டும் என்னுடைய விருப்பமான விஷயமான ‘நடுநிலை’ பற்றி பேச வேண்டி வந்தது.

பத்திரிகையாளனுக்கு கட்சி சார்பு தேவை இல்லை. கொள்கை சார்பு தேவை இல்லை. அவனது பார்வை பாரபட்சமற்று இருப்பது மட்டுமே. ‘பாரபட்சமற்று’ இருக்கவே முடியாது. எந்தக் கருத்தும் ஏதேனும் ஒரு தரப்பினருக்குச் சாதகமாகவும் இன்னொரு தரப்பினருக்கும் பாதகமாகவும் இருக்கும். அதனால், உடனடியாக பாதிக்கப்படுபவர்கள் வசவுமழை பொழிவதைப் பார்க்க முடிகிறது. (புதுப் புது அர்த்தங்கள் நிகழ்ச்சி யூடியூபில் வலையேற்றப்பட்டவுடன், அதன் கீழே பல்வேறு நண்பர்களும் என்னை தகாத வார்த்தைகளில் அர்ச்சிப்பதைக் கண்டு முதலில் கொஞ்சம் வருத்தம் இருந்தது. தற்போது, என்ன அர்ச்சனை செய்கிறார்கள்? உள்நோக்கங்கள் கண்டுபிடிக்கிறார்கள்? என்பதைப் படிக்கும் சுவாரசியமே ஏற்பட்டுவிட்டது…அதனால், அதனை நான் தவறவிடுவதில்லை. அதன் அரசியல் மற்றும் உளவியல் பின்னணிகள் பற்றி வேறொரு சமயம் எழுதுகிறேன்).

பாரபட்சமற்று இருப்பதற்கான அர்த்தம், அனைத்துத் தரப்புகளையும் கோணங்களையும் மனத்தில் வாங்கிக் கொண்டு, ஒவ்வொன்றுக்கும் அதற்கே உண்டான நியாயமான இடத்தை வழங்குவதே. அல்லது இன்னொரு விதமாகச் சொல்ல வேண்டுமென்றால், ‘பரந்த மனத்தோடு’ அணுகுவது. சார்புத்தன்மை அற்று அணுகுவது. இதற்கு ஆங்கிலத்தில் ‘லிபரல்’ என்று பெயர். ‘தாராளவாதம்’ என்று இதைச் சொல்லிப் பார்க்கலாம் (ஆனால், அப்போதும் முழுமையான பொருள் வரவில்லை)

ஒரு பத்திரிகையாளனாக இத்தகைய குணம் அவசியம் என்பதே என் கருத்து. எல்லோரையும் ஏதேனும் ஒரு சித்தாந்த, தத்துவ, சாதிய, மத ரீதியான சிமிழுக்குள் அடக்கி, அதையே ஒரு அடையாளமாகவும் வசவாகவும் மாற்றும் உத்தி இன்று செளகரியமாக இருக்கிறது.

இதை மீறி, நல்லதொரு ‘லிபரல்’ மனப்பான்மை உடையவனாக இருப்பதே பெரிய சவால். நான் முடிந்தவரை அதைத்தான் முயற்சி செய்துவருகிறேன்.

பொன்னியின் செல்வன் ஓவியங்கள்!

கல்கி வார இதழில் மீண்டும் பொன்னியின் செல்வன், ஆகஸ்ட் 3, 2014 இதழ் முதல் ஆரம்பிக்கப் போகிறோம். சென்ற இதழில் இருந்து விளம்பரங்கள் ஆரம்பித்துவிட்டன. நாளை வரவிருக்கும் கல்கி இதழில், மேலும் பல விவரங்கள் சொல்லப்பட்டு இருக்கின்றன.

கிட்டத்தட்ட ஜுரம் மாதிரி வேலை நடந்துகொண்டு இருக்கிறது. ஒவ்வொரு தலைமுறையைச் சேர்ந்தவர்களும் பொன்னியின் செல்வனைப் படித்துச் சுவைத்து இருக்கிறார்கள். கடைசியாக வெளியிட்டது 1998 – 2002 காலகட்டத்தில். ஓவியர் பத்மவாசன் அப்போது பொ. செ. தொடருக்கு ஓவியங்கள் தீட்டியிருந்தார்.

பொ.செ. நாவல் எப்படி சுவாரசியமானதோ, அவ்வாறே அதற்குத் தீட்டப்பட்ட ஓவியங்களின் கதைகளும் மனம் கவர்பவை.

1950-54 காலகட்டத்தில்தான் முதல்முறையாக பொன்னியின் செல்வன், கல்கி வார இதழில் வெளியானது. அக்டோபர் 29, 1950 இதழ் முதல் நாவல் தொடங்கியது. அதற்கு முந்தைய இதழான அக்டோபர் 22, 1950 இதழில், அரைப்பக்க விளம்பரம் மட்டுமே வெளியாகி இருக்கிறது. அடுத்த வாரமே இவ்வளவு பெரிய நாவல் தொடங்கப்பட்டது.

எழுத்தாளர் கல்கி குடும்பத்தில் விசாரித்தபோது, ஐந்து பாகங்கள் கொண்ட இவ்வளவு பெரிய நாவலுக்கு எவ்வித குறிப்புகளோ, தயாரிப்புகளோ இருந்தாற்போல் தெரியவில்லை என்கிறார்கள். அத்தனை தயாரிப்புகளும் கல்கி அவர்களின் நினைவில் மட்டுமே இருந்திருக்க வேண்டும்.

முதல் இதழ் தொடங்கி ஓவியர் மணியம் ஒவ்வொரு காட்சியையும் தீட்டிக்கொடுத்திருக்கிறார். அக்காட்சிகளில் உள்ள சம்பவங்கள், விவரங்கள், முகத்தில் காட்டப்படும் உணர்ச்சிகள், பின்னணிகள் அனைத்துமே எழுத்தாளர் கல்கி அவர்களின் நேரடி மேற்பார்வையிலேயே ஓவியர் மணியம் வரைந்தாராம். பல சமயங்களில் மணியன் வரைந்த ஓவியங்களை, கல்கி அவர்கள் மாற்றித்தரச் சொல்ல, அவற்றை அவரது வீட்டில் இருந்தபடியே மாற்றிக்கொடுத்துள்ளாராம்.

அதேபோல், சமீபத்தில் ஓவியர் வேதாவின் மகள் திருமணத்தில், ஓவியர் மணியம் அவர்களின் மகன் ஓவியர் மணியம் செல்வன் அவர்களைச் சந்தித்துப் பேசும் வாய்ப்பு கிடைத்தது. அவர் ஒரு செய்தி சொன்னார். மணியம் ஒரு வாளை வரைந்து எடுத்துக்கொண்டு போய், கல்கி அவர்களிடம் காண்பிக்க, அதன் அழகையும் மிடுக்கையும் கண்ட கல்கி, தன் கதையில் அதை மிகப் பொருத்தமாகச் சேர்த்துக்கொண்டாராம்.

இன்றைக்கும் மணியன் அவர்களின் ஓவியம் கொண்டாடப்படுகிறது.

————

1968ல் மீண்டும் பொன்னியின் செல்வன் தொடராக வெளியிடப்பட்டது. இம்முறை பொன்னியின் செல்வனுக்கு ஓவிய மகுடம் சூட்டியவர் ஓவியர் வினு. இவரது ஓவியங்களுக்கு அடிப்படை ஓவியர் மணியம் வரைந்த ஓவியங்கள்தாம். 

1998ல் பொன்னியின் செல்வன் மீண்டும் தொடராக வெளியானபோது, ஓவியங்களால் அலங்காரம் செய்தவர் ஓவியர் பத்மவாசன். உண்மையிலேயே அவரது ஓவியங்கள் எல்லாம் அலங்காரங்கள்தாம். வண்ணக் கலவையிலும் சின்னச் சின்ன விவரங்களைக் கொண்டுவருவதிலும் அசாத்திய நுணுக்கம் பத்மவாசன் படங்களில் உண்டு. 

பத்மவாசனோடு பேசிக்கொண்டு இருந்தபோது, அவர் எடுத்துக்கொண்டு சிரத்தை என்னை வியப்பில் ஆழ்த்தியது. ஒரு பதிப்பாளர் அவருடைய படங்களைக் கொண்டு பொன்னியின் செல்வன் நூலைப் பதிப்பிக்க திட்டமிட்டு இருந்தாராம். அதில் படங்களை முன்னும் பின்னுமாக வைத்து, லே-அவுட் செய்திருந்தாராம். பாத்திரங்களை உருவாக்கிச் செல்லும்போது, கல்கி தம் எழுத்தில் எத்தகைய ஒரு முன்னேற்றத்தை, முதிர்ச்சியைக் கொண்டு வந்துள்ளாரோ, அதேபோன்றே ஓவியங்களில் அத்தகைய மாற்றங்களைப் பதிவு செய்திருந்தாராம் பத்மவாசன். அது தலைப்பாகையாகவோ, வாளை வைத்துக்கொள்ளும் விதமாகவோ, பெண் பாத்திரங்களின் உடையலங்காரமாகவோ இருக்கலாமாம். முன்னும் பின்னும் படங்கள் பதிப்பிக்கப்பட்டால், ஓவியத்தில் உள்ள மாற்றங்களை வாசகர்கள் உணர்ந்துகொள்ள முடியாது என்றார்.

இந்த நாவலுக்கு ஓவியம் தீட்டிய அனைத்து ஓவியர்களுமே அதனோடே பயணம் செய்து, தம் மனத்துக்குள் பாத்திரங்களையும் காட்சிகளையும் உணர்ச்சிகளையும் சம்பவங்களையும் யூகித்துக்கொண்டு, கோடுகளின் வழியாகத் தம் மேதமையைப் பொழிந்திருக்கிறார்கள்.

——–

இப்போது அதேபோன்றதொரு சவால், ஓவியர் வேதாவுக்குக் காத்திருக்கிறது. பிரபஞ்சன் எழுதிவரும் “மகாபாரத மாந்தர்கள் – காலம் தோறும் தர்மம்” தொடரிலேயே வேதாவின் ஓவியங்கள் வாசகர்களைக் கொள்ளை கொண்டிருக்கிறது.

இப்போது, பொன்னியின் செல்வன் தொடருக்கு, ஓவியர் வேதா அவர்களே ஓவியங்களைத் தீட்டிக் கொடுக்கிறார். ஒவ்வொரு படமாக அவரிடம் இருந்து வாங்கும்போதும் புதிய அனுபவமாக இருக்கிறது. 

கதையில் படித்த காட்சிகள், எண்ணங்கள் ஆகியவை, ஓவியரின் கைத்திறனில் பரிமளிக்கும்போது, அதன் வீச்சு விசேஷமாக இருக்கிறது. அவரது படங்களைக் கொண்டே அத்தனை விளம்பரங்களும் தயாராகிக்கொண்டு இருக்கின்றன. பேனர்கள், பஸ் பேக் பேனல்கள், போஸ்டர்கள், ரயிலுக்குள் ஸ்டிக்கர்கள், விளம்பர வாகனங்கள், நாளிதழ் விளம்பரங்கள் என்று அடுத்த இருபது நாள்களும் தமிழகமெங்கும் பொன்னியின் செல்வன் ஓவியங்கள் வலம் வரப்போகின்றன.

ஆகஸ்ட் 3,014 முதல், கல்கி வார இதழில், எழுத்தாளர் கல்கி அவர்கள் வழங்கும் இலக்கிய அனுபவத்தோடு ஓவிய எழிலும் வாசகர்களுக்கு விருந்தாகக் காத்திருக்கிறது. 

வார்த்தை வாங்கியவன்!

சமீபத்தில் ஒரு கட்டுரையில் “சுனாமி” என்ற சொல்லைப் பயன்படுத்த வேண்டி வந்தது. எழுதும்போதே உள்ளம் பதற ஆரம்பித்துவிட்டது. அதற்கு இணையாக வேறொரு சொல் சட்டெனக் கிடைக்கவில்லை. எழுதி, பின் நிறுத்தி, மாற்ற நினைத்து, வார்த்தை தேடி… சில கணங்கள் அவஸ்தை. 2004 ஆழிப்பேரலையும் அது என்னுள் ஏற்படுத்திய பாதிப்புகளும் மிக மிக ஆழமானது. அந்தச் சொல்லை நினைத்தாலே அது ஏற்படுத்தும் பயவுணர்வு கூடவே சேர்ந்து வருவதைத் தவிர்க்க முடியவில்லை. 

சொற்களுக்கு பயந்தவன் நான்! சொல்லுக்குள்ள பலம் அது. எந்தச் சொல்லும் எளிமையானது அல்ல. ஆசீர்வாதமாகவோ வசவாகவோ மாறும் தன்மை அதற்குண்டு. இது என் பள்ளி கணித ஆசிரியரிடம் இருந்து கற்றது. இன்றைக்கு கணிதத்தில் எனக்கு உள்ள ஆர்வத்துக்கும் புரிதலுக்கும் காரணம் அவரே. அவர் பி.எஸ். சி. கணிதம் மட்டுமே படித்தவர். எம்.எஸ்.சி. படிக்க முடியாமல் – முடிக்க முடியாமல் – வலி சுமந்தவர். ஒருமுறை சொன்னார், “நான் என்னோட பேரண்ட்ஸ்கிட்ட வாங்கின சாபம்தான் காரணம்…இன்னிவரைக்கும் முடிக்க முடியல…நல்ல வார்த்தை வாங்க முடியலன்னா கூட பரவாயில்லை… திட்டு மட்டும் வாங்கிடக் கூடாது.’’

நானும் அப்படி யாரிடமேனும் வார்த்தை வாங்கிவிட்டேனோ என்று அவ்வப்போது யோசிப்பதுண்டு. அடுத்தவர்களிடம் மிக ஜாக்கிரதையாகப் பேசுபவன் நான். எந்தச் சந்தர்ப்பத்திலும் யாரையும் மனம் நோக அடித்துவிடக் கூடாது, சுடு எண்ணம், சுடுசொல்லுக்கு ஆளாகிவிடக் கூடாது என்பதில் நிரம்ப கவனம் உண்டு. ஆனால், எனக்கு தெரியாமல் யாரிடமோ அப்படி “வார்த்தை வாங்கியிருக்கவேண்டும்.” இன்று திரும்பிப் பார்க்கும்போது, என் கல்வி இவ்வளவு தூரம் தடைபட்டிருக்க வேறு எந்தக் காரணத்தையும் என்னால் நினைத்துப் பார்க்க முடியவில்லை. 

பி.எஸ்.சி (கணிதம்) முடித்தேன். எம்.எஸ்.சி. ஓராண்டு மட்டுமே படித்தேன். தொடரமுடியவில்லை. வேலைக்கு வந்துவிட்டேன். பின்னர் எம்.பி.ஏ. சேர்ந்தேன். இது 1994. முடிக்கவே முடியவில்லை. கிட்டத்தட்ட பதினைந்து ஆண்டுகள். ஏதோ ஒரு காரணம். ஏதோ ஒரு தடை. சிக்கல். படிப்பின் அருகே போகவே முடியவில்லை. படிக்க முடியவில்லை என்ற வேதனை என்னை ஆட்டிப் படைத்த இரவுகள் எண்ணற்றவை. பலமுறை இதே சென்னை பல்கலைக்கழகம் வழியாகத்தான் போவேன், வருவேன். ஒருமுறை கூட உள்ளே போய், நின்றுவிட்ட நான்கு பேப்பர்களை எழுதி, எம்.பி.ஏ. கிளியர் செய்யவேண்டும் என்ற உந்துதல் ஏற்பட்டதில்லை. 

ஆனால், அதிசயம் 2010ல் நடந்தது. விடுபட்ட நான்கு தாள்களையும் ஒருசேர படித்து எழுதி, முடித்தேன். தாமதமானாலும் நான் எம்.பி.ஏ. படிப்பை முடித்த மகிழ்ச்சியோடு, நான் வாங்கிய வார்த்தை என்னை இவ்வளவு தூரம் அலைக்கழித்திருக்கிறது, அதை ஓரளவு தகர்ந்தெரிந்து மீண்டுவிட்டேன் என்ற ஆசுவாசமே நிம்மதி அளித்தது. 

எம்.பி.ஏ. முடிக்கவே முடியாது என்ற உறுதியாக இருந்த சமயத்தில், வேறு ஏதேனும் படிக்கவேண்டும் என்ற எண்ணம் பிறந்தது. அப்போது, எம்.ஏ. இதழியல் படிக்க ஆரம்பித்தேன். எப்போது எந்தத் தடை ஏற்பட்டுவிடுமோ என்ற பதற்றம் அந்த இரண்டு ஆண்டுகளும் எனக்கிருந்தது. என் வரையில் நான் ஒழுங்காக படித்தேன், பல செய்திகள் புதியவை, புரிந்துகொண்டேன். ஆனால், தேர்வு அறைக்குப் போனபோதுதான், மனம் வெதும்பிற்று. முழு அறையிலும் மாஸ் காப்பி. ஒருவர் புத்தகத்தைத் திறந்துவைத்துக்கொண்டு பதில் எழுதினார். கேள்வி கேட்ட இன்விஜிலேட்டரிடம் சண்டைக்கே போய்விட்டார் அவர். இப்படிப்பட்ட ஒரு டிகிரி எனக்குத் தேவையா என்று எண்ணம் ஏற்பட்டுவிட்டது. தேர்வு அறையில் இருந்து எழுந்து வெளியே வந்துவிடத் துணிந்துவிட்டேன். ஒன்றரை மணிநேரத்துக்குப் பின்னரே வெளியே செல்ல அனுமதி என்ற நிலை. மனம் ஒருநிலைப்பட கொஞ்ச நேரமானது. என்னால் எதையும் மாற்ற முடியாது; என் வரையில் ஒழுங்காக எழுதினேன் என்ற மத்தியமர்களின் திருப்தி / கையாலாகத்தன லாஜிக் எட்டிப் பார்த்தது. அமைதியாக அத்தனை தாள்களையும் எழுதி முடித்து, இரண்டு ஆண்டுகளில் இதழியல் டிகிரி பெற்றேன். 

இப்போது அடுத்த கட்டமாக, முனைவர் ஆய்வு செய்யும் முயற்சியில் இறங்கியிருக்கிறேன். எல்லாம் ஒழுங்காக நடந்திருக்குமானால், என்னுடைய 25 வயதில் பி.எச்.டி. முடித்திருக்கவேண்டும்; அதுதான் நான் அடைய நினைத்த இலக்கு. இருபதாண்டுகள் தாமதம். கல்வி என்னும் மலையில் நான் விழுந்து விழுந்து, தடுமாறித் தடுமாறியே மேலே உயர்ந்திருக்கிறேன்.

ஆனால், அதில் எனக்கு இருக்கும் ஆர்வம் என்றுமே குறைந்ததில்லை. யார் கல்வி வாய்ப்புகள், புதிய துறைகள், புதிய படிப்புகள் பற்றிப் பேசினாலும், ஆவென வாயைத் திறந்து பார்த்துக்கொண்டு இருப்பேன். இப்போதேனும் எந்தத் தடையும் இன்றி, என் முனைவர் ஆய்வு தொடங்கவேண்டும், நல்லதொரு தீசிஸ் எழுதி வழங்கவேண்டும் என்றெல்லாம் ஆயிரம் பயங்கள். 

கல்வி பெரும்சொத்து. அதற்கு புத்திசாலித்தனம், உழைப்பு மட்டும் போதாது, கூடவே கொஞ்சம் இறைவன் அருளும் வேண்டும். வார்த்தைகள் வாங்காமலும் இருக்கவேண்டும்.

கூருணர்வுச் சொற்கள்!

தொலைக்காட்சியில் நான் செய்திப் ப்ரியன். மெகா தொடர்கள் பார்ப்பவன் அல்ல. இரண்டு நாள்களுக்கு முன்பு, கூடத்தில் ஓடிக்கொண்டு இருந்த தொலைக்காட்சி தொடர் நடுவே சில நொடிகள் நின்றேன். பிரபலமான “சரவணன் – மீனாட்சி” தொடரின் இடையே வரும் முன்னோட்டம் அது. ஒரு முதிய பெண் இன்னொரு பெண்ணைப் பார்த்துச் சொல்கிறார் : “தமிழுக்குத்தான் இது ஃபர்ஸ்ட் நைட். உனக்கு அப்படியா என்ன…” அந்தப் பெண் கூனிக் குறுகி தவித்தாள். அதற்கு மேல் அங்கே என்னால் நிற்க முடியவில்லை. கதையில் வரும் அந்தச் சூழ்நிலையை என்னால் புரிந்துகொள்ள முடிந்தது. இந்த வசனத்தை எழுதியவருக்கு எவ்வளவு மனவக்கிரம் இருக்கவேண்டும்? அதைக் காட்சிப்படுத்தி திரைக்கதை எழுதிய இயக்குனர் எவ்வளவு கூருணர்வு இல்லாதவராக இருக்கவேண்டும்? மக்கள் அனைவரும் பார்க்கும் ஒரு தொடரில் இவ்வளவு கீழ்த்தரமாக யோசிக்க முடியுமா? என்னால் ஜீரணித்துக்கொள்ளவே முடியவில்லை.

வார்த்தைகளை மணிமணியாகப் பயன்படுத்த வேண்டாமா? சூழ்நிலைக்கேற்ப, அங்கு நிலவும் உணர்வுகளுக்கு ஏற்ப, சொற்களைத் தட்டித் தட்டிப் பார்த்துப் பயன்படுத்த வேண்டாமா? இரண்டாயிரம் ஆண்டு பண்பாடு, வளர்ச்சி, மூத்த குடி என்றெல்லாம் பெருமைப்படுகிறோம். அப்படியானால், நம் மனங்களில் எவ்வளவு தூரம் பண்பாடு மேலோங்கி இருக்கவேண்டும்? அது நம் வார்த்தைகளில் எவ்வளவு அழகாக பிரதிபலிக்க வேண்டும்? ஏன் இல்லாமல் போச்சு நாகரிகம்? தெரியவில்லை.

பல சொற்களைப் பயன்படுத்த நான் மிகவும் சங்கடப்படுவேன். வேறு வார்த்தைகளுக்காக ரொம்ப நேரம் காத்திருந்த அனுபவமும் உண்டு. “விதவை” அப்படிப்பட்ட சொல். பயன்படுத்த மனம் ஒப்பாத சொல். பயன்படுத்தித் தேய்ந்து போன சொல் மட்டுமல்ல; அது எதிர்மறை எண்ணங்களைச் சுமந்துள்ள சொல். பெண்ணுக்கு எந்த வகையிலும் பெருமை சேர்க்காத சொல் அது. சொல்லப் போனால், அது அப்பெண்ணை இன்னும் காயப்படுத்தவல்லது, இழிவுபடுத்தவல்லது. மனம் நிறைந்த கணவனை இழந்து நிற்கும் ஒரு பெண்ணை, எவ்வளவு கெளரவத்தோடு எடுத்துப் பேசவேண்டும்? அவளை எழுத்தால் கூட நான் காயப்படுத்த விரும்பவில்லை.

“கைம்பெண்” என்று கொஞ்ச நாள் எழுதினேன். அதுவும் ஒப்பவில்லை. பின்னர், “வைதவ்யம்” என்ற சொல்லைக் கண்டுபிடித்தேன். புழக்கத்தில் இல்லாத சொல்தான். ஆனால், ’விதவை’யும், ’கைம்பெண்’ணும் அடைந்துள்ள நலிவை, இச்சொல் இன்னும் அடையவில்லை. என் மனத்துக்குள் உணர்வு ரீதியாக ”வைதவ்யம்” இன்னும் தேய்ந்து, பொருளழிந்து போகவில்லை. கெளரவமும் சிதையவில்லை.

இதேபோல், பெண்ணைக் குறிக்கும் “ஃபிகர்” என்ற சொல்லை என்னால் பயன்படுத்தவே முடியாது. இது அவளைக் கொச்சைப்படுத்துவது மட்டுமல்ல, எல்லாவிதமான தப்பர்த்தங்களுக்கும் இட்டுச்செல்லவல்லது. அதுவும் “செம ஃபிகர்” என்பதெல்லாம் பாலியல் ரீதியாக மிகவும் வக்கிர மனத்தின் வெளிப்பாடு. ஒரு பெண்ணை சகமனுஷியாக அல்லாமல் சதைப் பிண்டமாக நோக்கும் கற்காலச் சிந்தனையை வெளிப்படுத்தும் சொல் அது.

கூருணர்வு என்பது சமூகமொழியில் வெளிப்பட வேண்டும். சமூகம் முன்னேறி இருக்கிறது என்பதற்கு அதுதான் அடையாளம். இப்போதெல்லாம் யாரும் “ஊனமுற்றவர்” என்று பயன்படுத்துவதில்லை; நல்ல சொல் “மாற்றுத் திறனாளி.” அரசியலில் யாரும் “பொய்” சொல்வதில்லை; “உண்மைக்கு மாறான” செய்திகளையே சொல்வார்கள். ”அலி” அவதூறு; “அரவாணி” நீங்கி, இப்போது எங்கும் “திருநங்கை”தான்.  ”தாழ்த்தப்பட்டவர்கள்”, “தலித்”, “பிற்படுத்தப்பட்டவர்கள்” எல்லாம் சமூகம் இவர்களுக்கு உரிய மரியாதையைக் கொடுக்க விரும்புகிறது என்பதை வெளிப்படுத்தும் சொற்கள்.  இதற்கு முன்பு பயன்படுத்தப்பட்ட சொற்களில் தொக்கி நின்றவை மேலாதிக்கம், ஆணவம், திமிர் ஆகியவை. அவற்றை சமூகம் விலக்க விரும்புகிறது என்பதற்கு முதல் படிதான், சொற்களில் காட்டப்படும் கரிசனம். பொலிட்டிக்கல் கரெக்ட்னஸ், ஜெண்டர் கரெக்ட்னஸ் மிகவும் முக்கியம்.

உணர்வுகளுக்கான மொழி வார்த்தைகள். அது அடுத்தவரைக் காயப்படுத்தக் கூடாது. கொச்சைப்படுத்தக் கூடாது. இந்த ஜாக்கிரதையோடுதான் ஒவ்வொரு எழுத்தும் உருவாக வேண்டும். டிவியாக இருந்தாலும் சரி, இதழாக இருந்தாலும் சரி – இது தான் நியதி.