கூடங்குளமும் தி.நகரும்

கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக, கூடங்குளம் அணுமின் நிலையமும் தி.நகர் கடைகள் சீல் வைக்கப்பட்டதும் பெருமளவில் எல்லா செய்திப் பத்திரிகைகளின் இடங்களையும் ஆக்கிரமித்துக்கொண்டன. தவறில்லை. இரண்டுமே முக்கியமானவை.  பேசப்படவேண்டியவை.

இரண்டு பிரச்னைகளின் பின்னிருந்து செயல்படும் ஒரு மனோநிலைதான் என்னை ரொம்பவும் இம்சிக்கிறது.

கூடங்குளம் அணு மின் நிலையத்தை பல கோடி ரூபாய் செலவில் கட்டியாயிற்று. உற்பத்தி தொடங்க வேண்டியதுதான் பாக்கி. இந்த நிலையில், அணுமின் நிலைய விபத்துக்கள் பற்றி ஏன் பேச வேண்டும்?  செயல்பட வேண்டியதுதானே? இல்லை என்றால், மொத்த செலவும் வேஸ்ட். மொத்த புத்திசாலித்தனமும் வீண்.

பிரச்னை வரும் போது பார்த்துக்கொள்ளலாம். விபத்து நடக்க வாய்ப்பில்லை என்று சொல்வதற்கு முன்னாள் குடியரசுத் தலைவர் வந்து சர்டிபிகேட்டும் கொடுத்துவிட்டார்.

அணுமின் ஆதரவாளர்களுக்கு மக்களின் தார்மிக எதிர்ப்பு பயங்கர எரிச்சலாக இருக்கிறது. அதனால்தான், கல்லணையையும் பெரிய கோவிலையும் நெல்லையப்பர் கோவிலையும் உதாரணமாகக் காட்டிப் பேசுகிறார் கலாம்.

இதேபோன்ற, “வந்தால், பார்த்துக்கொள்ளலாம்” மனப்பான்மைதான், தி.நகர் கடைகள் விஷயத்திலும் செயல்படுகிறது.  ரங்கநாதன் தெருவில் ஒரு கடை தீப் பிடித்ததே, ஏதேனும் காப்பாற்ற முடிந்ததா என்ற கேள்வி எழவே மாட்டேன் என்கிறது.

கடைகளை சீல் வைத்ததால், பெருத்த நஷ்டம். பல ஆயிரம் தொழிலாளர்கள், வேலை தேடிச் சென்னை வந்தவர்கள் நடுத்தெருவில் நிற்கிறார்கள். அவர்கள் வாழ்க்கை கேள்விக்குறியாகிவிட்டது. இதற்கு மாநில அரசு தீர்வு காண வேண்டும் என்று பேசுகிறார்கள், வியாபாரிகள் சங்கத் தலைவர்கள்.

அவர்கள் ஒரு படி மேலே போய், இதையும் சொல்கிறார்கள்: தி.நகர் முழுவதையும் வணிக வளாகமாக (ஸ்பெஷல் ஸோன்) அறிவித்து, நகர்புற கட்டடங்களின் சட்ட விதிகளில் இருந்து விலக்கு அளியுங்கள். ஏனெனில், அங்கே வியாபாரம் கொழிக்கிறது. அரசுக்கு ஏராளமான வரி செலுத்தப்படுகிறது. அங்கே வணிகம் தடைபட்டால், அரசுக்கு வரிவருவாய் குறைந்துவிடும் என்றெல்லாம் மறைமுக மிரட்டல்கள்.

ஆனால், இங்கும் அடிப்படை கேள்வி கேட்கப்படுவதில்லை. அல்லது, மிக சாமர்த்தியமாக, மெளனம் காக்கப்படுகிறது. இவ்வளவு பெரிய கட்டடங்களைக் கட்டி இருக்கிறீர்களே? பல லட்சம் மக்கள் புழங்குகிறார்களே? அவர்களுடைய பாதுகாப்புக்கு உகந்தாற்போல், என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறீர்கள்? தீ ஏற்பட்டால்? நெரிசல் ஏற்பட்டால்? வேறு பாதிப்புக்கள் ஏற்பட்டால் என்ன சேஃப்டி நடவடிக்கைகள் அங்கே அமலில் இருக்கிறது?

அதெல்லாம் பார்த்துக்கொள்ளலாம். முதலில், கடை நடத்த அனுமதியுங்கள். சீலை நீக்குங்கள். மற்ற விஷயங்களைச் சரிசெய்யலாம் என்று சொல்கிறார்கள். இவையெல்லாம் கட்டடங்களைக் கட்டும்போதே செய்திருக்க வேண்டியவை. இனியேனும் செய்துவிட்டு, கடைகளைத் திறவுங்கள் என்பதுதான் சரியான அணுகுமுறை.

ஆனால்,  “நடந்த பின்னால் பார்த்துக்கொள்ளலாம்” என்ற மோசமான நம்பிக்கை எவ்வளவு அபாயமானது? அணுவிபத்து நடந்தபின்னர் பார்க்க என்ன இருக்கிறது? இரண்டு கட்டடங்கள் தீ பிடித்துக்கொண்டால், உயிரிழப்புக்களைத் தடுத்துவிட முடியுமா?

ஒன்று அரசு; மற்றொன்று தனியார். இரண்டிலுமே பிடிவாதமும் உள்நோக்கங்களுமே நிறைந்திருக்கின்றன. மேலும், தெரிந்தே செய்யும் தவறுகள் இவை. உலக நாடுகள் எங்கும் அணு உலைகளை மூடிக்கொண்டு இருக்கும்போது, இங்கே நடத்த வேண்டும் என்கிறார்கள். பாதுகாப்பான கடைகள் வேண்டும், வசதியான ஷாப்பிங் அனுபவம் வேண்டும் என்ற எண்ணம் பெருகும் வேளையில், புறாக்கூண்டுகளைக் கட்டி வணிகத்தோடு, அபாயத்தையும் சேர்த்தே வளர்க்கிறார்கள் தி.நகர் கடைக்காரர்கள்.

நீதிமன்றமும் மக்கள் சக்தியும் இல்லை என்றால், இவர்களெல்லாம் நம்மை கால் தூசுக்குக் கூட மதிக்க மாட்டார்கள் என்பது மட்டும் நிஜம்.

2 thoughts on “கூடங்குளமும் தி.நகரும்

  1. இது கம்பேரிசன் சரியாகப் படவில்லை.

    முதலில் தி.நகர் கடைகளும் கூடங்குள அணு உலையும் ஒரே மாதிரியான பாதுகாப்பில்லாமல் கட்டபட்டது என்று சொல்ல முடியாது.

    தி நகர் கடைகள் தகுந்த பாதுகாப்புடன் திறக்கபடலாம். ஆனால் அணு உலைக்கு தகுந்த பாதுகாப்பு நடவடிககை எது ? அதை யார் சொன்னால் போராடும் “மக்கள்”
    ஏற்றுக்கொள்வார்கள் ?

அணு உலைகளை ஏன் அமெரிக்கா உதயகுமார் எதிர்க்கிறார்? | Snap Judgment -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி