விவரிக்கவியலா வெறுமையை ஏற்படுத்துகின்றன மரணங்கள். சிறிது காலம் பழகினாலும் நீண்ட காலம் பழகினாலும், நல்ல நட்புக்களின் மறைவு ஏற்படுத்தும் வெற்றிடம், மனம் நெகிழச் செய்பவை.
1. கல்யாண் என்கிற கல்யாணராமன்: இரண்டு நாட்களுக்கு முன்பு இந்த மாதம் புத்தகம் பேசுது இதழ் படிக்கையில், ஒரு மூலையில் சின்ன பெட்டிச் செய்தி. தோழர் டி. கல்யாணராமன் மறைவுக்கு வருத்தம்.
சென்னை ஃபிலிம் சொஸைட்டி பற்றி தெரிந்தவர்களுக்கு கல்யாணும் நாயுடுவும் கண்டிப்பாக தெரிந்திருக்கும். 80களின் கடைசி, தொண்ணூறுகளின் தொடக்கத்தில், சி.எஃப்.எஸ்.சில் நான் ஏராளமான வெளிநாட்டுப் படங்களைப் பார்த்ததற்கு, கல்யாண் முக்கிய காரணம். மெலிந்த தேகம். கத்தையான மீசை. ஆங்கிலமும் கொஞ்சம் அழகிய தமிழும் கலந்து அவர் பேசும் மொழி, வசீகரம். எல்லா விஷயங்களிலும் அவருக்கு இருந்த ஈடுபாட்டைத் தொடர்ந்து பார்த்திருக்கிறேன். பத்திரிகை, புத்தகம், நல்ல சினிமா என்று அறிவின் விசாலம், கவர்ச்சி நிரம்பியவர் கல்யாண். சி.எஃப்.எஸ். பின்னர் “சலனம்” என்ற நல்ல சினிமாவுக்கான இதழை நடத்தியது. அதன் ஆசிரியர் குழுவில் என் பெயரும் இருந்தது. அதற்காக சினிமா கட்டுரைகளை நான் மொழிபெயர்த்துக் கொடுத்திருக்கிறேன்.
கால ஓட்டத்தில், அவர் கிருஷ்ணமூர்த்தி புக் செல்லர்ஸ் – தீரர் சத்தியமூர்த்தி மகள் லக்ஷ்மி கிருஷ்ணமூர்த்தியின் கணவர் உருவாக்கிய பதிப்பகம் / விற்பனை துறை – பதிப்பு ஆசிரியராக இருந்தபோது, தி.நகர் தணிகாசலம் தெருவில் சந்தித்து உரையாடியிருக்கிறேன். அவருடைய உற்சாகம் ததும்பும் குரலையும் மேனரிஸம்களையும் மறக்கவே முடியவில்லை.
2. ஸ்ரீதர் – விகடன் குழுமத்துக்குள், பர்சேஸ் ஸ்ரீதர் என்றால் அனைவருக்கும் தெரியும் நபர். நல்ல உயரம். புன்சிரிப்பு. மாந்தளிர் நிறம். நல்ல அழகர். நான் பழகியபோதே அவருக்கு ஐம்பது வயதுக்கு மேல் இருக்கும். இளமையில் இன்னும் மகா அழகராக இருந்திருக்க வேண்டும்.
விகடன் பிரிட்டானிகா வெளியிடும் சமயத்தில் அவரோடு நிறைய நேரம் செலவிட்டு இருக்கிறேன். வெளிநாடுகளில் இருந்து விதம்விதமான பேப்பர்களை இறக்குமதி செய்தல், அட்டைகளை இறக்குமதி செய்தல், தாளின் தரம், கெட்டித்தன்மை…ஏராளமான விஷயங்களைத் தெரிந்த நல்ல மனிதர்.
பதற்றமே இல்லாமல், ஒவ்வொரு பிரச்னையையும் அணுகக்கூடியவர். அவரது ஆளுமையை கண்டு வியந்திருக்கிறேன். சில பேரைக் கண்டால் போய் நின்று இன்னும் கொஞ்சம் நேரம் பேசப் பிடிக்குமே…அது மாதிரியான கவர்ச்சி அவரிடம் உண்டு.
எனக்கு ஒரு புத்தகம் அன்பளிப்பாக கொடுத்தார். ஃபின்னிஷ் கதைகள் என்ற ஆங்கிலச் சிறுகதைத் தொகுதி. கனமே இல்லாத தாளில் அச்சடித்த நூல். 200 பக்கங்களுக்கு மேல் இருந்தாலும் தக்கையான புத்தகம். ஆன்ஸ் கிரிஸ்டி ஆண்டர்சனின் டேல்ஸ் என்ற லண்டனில் அச்சடித்த நூலொன்றை இதற்கு முன்பு பார்த்திருக்கிறேன். முழுத் தொகுதி. ஆனால், தக்கையாக இருக்கும்.
ஸ்ரீதர், ஹார்ட் அட்டாக்கில் போய்விட்டார் என்று கேள்விப்பட்டேன். ஒரு மாதம் ஆகிவிட்டது என்றார்கள்.
மரணம் ஏற்படுத்தும் வெற்றிடம், வலி நிரம்பியது.
Remembered Gibrans words, “what is it to cease breathing, but to free the breath from its restless tides, that it may rise and expand and seek God unencumbered? Only when you drink from the river of silence shall you indeed sing”…
விருப்பத்துக்குரியவர்களின் மரணம் என்பது நம்மிடமிருந்து உடல் ரீதியான விடை பெறலாகத்தான் இருக்கிறது. நினைவில் வாழும் என்று இதைத்தான் சொல்கிறார்கள் போல…