ஸ்ருதிஹாசன் – பேஜ் 3 தமிழ்!
நவம்பர் 28, 2011
ஏழாம் அறிவு நேற்று இரவு பார்த்தேன். பல விமர்சனங்களில், ஸ்ருதிஹாசனின் உச்சரிப்பு, நடிப்பு எல்லாவற்றையும் ஒரு மாதிரி கிண்டல் செய்தும் ஆலோசனை சொல்வது போலவும் எழுதப்பட்டதைப் படித்திருந்தேன். அதனாலேயே ஏழாம் அறிவு பார்க்கவேண்டும் என்று நினைத்துக்கொண்டு இருந்தேன்.
ஸ்ருதிஹாசனே டப்பிங் பேசியிருக்கிறார்; அவருக்குப் பதில் வேறு யாரேனும் நல்ல தெளிவான தமிழில் டப்பிங் பேசியிருக்கலாம் என்றெல்லாம் கருத்துக்கள் கேட்டு இருந்தேன். நேற்று படத்தை முழுமையாக நிதானமாக பார்த்தபோது, வேறு எண்ணங்களே ஏற்பட்டன.
ஸ்ருதி, இன்றைய தமிழ் இளைஞர்கள், பெண்களின் ஒரு வகை மாதிரி. இன்றைக்குப் பல குடும்பங்களில் வெளிநாடுகளில் போய் படித்து, அங்கேயே செட்டிலான இளைஞர்கள் உண்டு. திரும்பி வந்தவர்களும் உண்டு. நகர்ப்புறங்களில் ஆங்கிலப்பள்ளிகளில் மட்டுமே படித்து வளர்ந்தவர்களும் உண்டு. வீட்டில் மட்டுமே தமிழ் பேசும் வாய்ப்புள்ளவர்கள் அவர்கள். பல நிறுவன உயர்பதவிகளில் இருக்கும் தமிழ் இளைஞர்களுக்கு தமிழ் புரியும்; பேசுவது கொச்சையாக இருக்கும். சரளமாக தமிழ் பேச வரவில்லை என்பது குறித்து கவலை கொள்ளும் இளைஞர்கள் உண்டு.
இவர்கள் எல்லாம் தமிழ் பேசாததாலேயே, பழகாததாலேயே இவர்களுக்குத் தமிழ் மேல் காதல், ஆர்வம் இல்லை என்று அர்த்தமில்லை. தமிழைப் பேசிப் புழங்குவதற்கான தேவை, அவர்களைப் பொறுத்தவரை வெகுசில இடங்களிலேயே இருக்கிறது. இப்படிப்பட்டவர்களை, தமிழ் சினிமாவிலும் சரி, நேர்ப்பேச்சிலும் சரி ஒரு மாதிரி “பீட்டர்” என்று வகைப்படுத்தி, கிண்டல் அடிப்பதையே செய்திருக்கிறோம்.
அதேசமயம், மறைமுகமாக இந்தத் தன்மையை ரசிக்கவும், மேட்டிமையின் வெளிப்பாடாக உணர்ந்துகொள்ளவும் பின்பற்ற முடியுமா என்று முயன்றும் பார்த்தவர்கள் உண்டு. இன்றைய பல்சமூக, பல் இன வாழ்க்கைச் சூழலில், இத்தகைய ஓர் காஸ்மோபாலிடன் கலாசாரம் கவர்ச்சிகரமாக இருப்பதைப் பார்க்க முடிகிறது.
டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் பேஜ் 3 கேரக்டர்கள் இவர்கள். பேஜ் 3 பிரபலங்கள் ஆக, பலர் முயல்கின்றனர்.
ஏழாம் அறிவில், முருகதாஸ், இளைஞர்கள் மத்தியில் உள்ள ஆர்வத்தை நன்கு பயன்படுத்திக்கொண்டு இருக்கிறார். ஸ்ருதி, அந்தக் கேடரக்டருக்குப் பொருத்தமானவர். ஓர் அழகான முரணை உள்ளே வைத்து, கேரக்டரை இன்னும் மெருகேற்றி இருக்கிறார்.
அதாவது, வாழ்க்கை அவுட் லுக், நடை உடை பாவனை, பேச்சு எல்லாம் இன்றைய பேஜ் 3 மாடர்னிட்டி; உள்ளே உள்ளது, தீராத தமிழ் உணர்வு. இந்த முரண், இந்தக் கதைக்கு மிகவும் தேவை. ஒருபக்கம், சூர்யா நல்ல தமிழில், உணர்ச்சிப் பொங்க பேசவும் நடிக்கவும் வேண்டும்; அவருக்கு ஜோடியானவர் மாடர்னிட்டியோடு, தமிழ் உணர்வு கொண்டவராக இருக்கவேண்டும்.
இன்றைக்கு சினிமா பார்க்கப் போகும் இளம்பெண்கள், தம்மை, ஸ்ருதிஹாசனோடு இனங்கண்டு கொள்பவர்கள் ஏராளம். பயங்கரமாக கிண்டல் அடிக்கப்படும் அவரது “ஷ” மொழி, ஸ்டைல் மொழியானால் ஆச்சரியப்படுவதற்கில்லை.
ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பு, அசினை, இன்றைய பெண்களின் பிரதிபலிப்பாக நினைத்திருந்தேன். ஸ்ருதி, அடுத்த கட்டம். இன்றைய 15 – 22 வயதுள்ள நகர்புறப் பெண்களின் பிரதிபலிப்பு. ஏழாம் அறிவின் அபரிமிதமான தமிழுணர்வுக்கு பின்புலமாக இருந்து வலிமை சேர்க்க, ஸ்ருதியின் நுனிநாக்கு, கடித்துத் துப்பும் தமிழை பயன்படுத்தியிருப்பது முருகதாஸின் புத்திசாலித்தனம்.
பிடிக்கறதோ இல்லையோ, ஸ்ருதி வகை தமிழுணர்வு, இன்றைய நிஜம். அதை ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும்!
கூடங்குளமும் தி.நகரும்
நவம்பர் 11, 2011
கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக, கூடங்குளம் அணுமின் நிலையமும் தி.நகர் கடைகள் சீல் வைக்கப்பட்டதும் பெருமளவில் எல்லா செய்திப் பத்திரிகைகளின் இடங்களையும் ஆக்கிரமித்துக்கொண்டன. தவறில்லை. இரண்டுமே முக்கியமானவை. பேசப்படவேண்டியவை.
இரண்டு பிரச்னைகளின் பின்னிருந்து செயல்படும் ஒரு மனோநிலைதான் என்னை ரொம்பவும் இம்சிக்கிறது.
கூடங்குளம் அணு மின் நிலையத்தை பல கோடி ரூபாய் செலவில் கட்டியாயிற்று. உற்பத்தி தொடங்க வேண்டியதுதான் பாக்கி. இந்த நிலையில், அணுமின் நிலைய விபத்துக்கள் பற்றி ஏன் பேச வேண்டும்? செயல்பட வேண்டியதுதானே? இல்லை என்றால், மொத்த செலவும் வேஸ்ட். மொத்த புத்திசாலித்தனமும் வீண்.
பிரச்னை வரும் போது பார்த்துக்கொள்ளலாம். விபத்து நடக்க வாய்ப்பில்லை என்று சொல்வதற்கு முன்னாள் குடியரசுத் தலைவர் வந்து சர்டிபிகேட்டும் கொடுத்துவிட்டார்.
அணுமின் ஆதரவாளர்களுக்கு மக்களின் தார்மிக எதிர்ப்பு பயங்கர எரிச்சலாக இருக்கிறது. அதனால்தான், கல்லணையையும் பெரிய கோவிலையும் நெல்லையப்பர் கோவிலையும் உதாரணமாகக் காட்டிப் பேசுகிறார் கலாம்.
இதேபோன்ற, “வந்தால், பார்த்துக்கொள்ளலாம்” மனப்பான்மைதான், தி.நகர் கடைகள் விஷயத்திலும் செயல்படுகிறது. ரங்கநாதன் தெருவில் ஒரு கடை தீப் பிடித்ததே, ஏதேனும் காப்பாற்ற முடிந்ததா என்ற கேள்வி எழவே மாட்டேன் என்கிறது.
கடைகளை சீல் வைத்ததால், பெருத்த நஷ்டம். பல ஆயிரம் தொழிலாளர்கள், வேலை தேடிச் சென்னை வந்தவர்கள் நடுத்தெருவில் நிற்கிறார்கள். அவர்கள் வாழ்க்கை கேள்விக்குறியாகிவிட்டது. இதற்கு மாநில அரசு தீர்வு காண வேண்டும் என்று பேசுகிறார்கள், வியாபாரிகள் சங்கத் தலைவர்கள்.
அவர்கள் ஒரு படி மேலே போய், இதையும் சொல்கிறார்கள்: தி.நகர் முழுவதையும் வணிக வளாகமாக (ஸ்பெஷல் ஸோன்) அறிவித்து, நகர்புற கட்டடங்களின் சட்ட விதிகளில் இருந்து விலக்கு அளியுங்கள். ஏனெனில், அங்கே வியாபாரம் கொழிக்கிறது. அரசுக்கு ஏராளமான வரி செலுத்தப்படுகிறது. அங்கே வணிகம் தடைபட்டால், அரசுக்கு வரிவருவாய் குறைந்துவிடும் என்றெல்லாம் மறைமுக மிரட்டல்கள்.
ஆனால், இங்கும் அடிப்படை கேள்வி கேட்கப்படுவதில்லை. அல்லது, மிக சாமர்த்தியமாக, மெளனம் காக்கப்படுகிறது. இவ்வளவு பெரிய கட்டடங்களைக் கட்டி இருக்கிறீர்களே? பல லட்சம் மக்கள் புழங்குகிறார்களே? அவர்களுடைய பாதுகாப்புக்கு உகந்தாற்போல், என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறீர்கள்? தீ ஏற்பட்டால்? நெரிசல் ஏற்பட்டால்? வேறு பாதிப்புக்கள் ஏற்பட்டால் என்ன சேஃப்டி நடவடிக்கைகள் அங்கே அமலில் இருக்கிறது?
அதெல்லாம் பார்த்துக்கொள்ளலாம். முதலில், கடை நடத்த அனுமதியுங்கள். சீலை நீக்குங்கள். மற்ற விஷயங்களைச் சரிசெய்யலாம் என்று சொல்கிறார்கள். இவையெல்லாம் கட்டடங்களைக் கட்டும்போதே செய்திருக்க வேண்டியவை. இனியேனும் செய்துவிட்டு, கடைகளைத் திறவுங்கள் என்பதுதான் சரியான அணுகுமுறை.
ஆனால், “நடந்த பின்னால் பார்த்துக்கொள்ளலாம்” என்ற மோசமான நம்பிக்கை எவ்வளவு அபாயமானது? அணுவிபத்து நடந்தபின்னர் பார்க்க என்ன இருக்கிறது? இரண்டு கட்டடங்கள் தீ பிடித்துக்கொண்டால், உயிரிழப்புக்களைத் தடுத்துவிட முடியுமா?
ஒன்று அரசு; மற்றொன்று தனியார். இரண்டிலுமே பிடிவாதமும் உள்நோக்கங்களுமே நிறைந்திருக்கின்றன. மேலும், தெரிந்தே செய்யும் தவறுகள் இவை. உலக நாடுகள் எங்கும் அணு உலைகளை மூடிக்கொண்டு இருக்கும்போது, இங்கே நடத்த வேண்டும் என்கிறார்கள். பாதுகாப்பான கடைகள் வேண்டும், வசதியான ஷாப்பிங் அனுபவம் வேண்டும் என்ற எண்ணம் பெருகும் வேளையில், புறாக்கூண்டுகளைக் கட்டி வணிகத்தோடு, அபாயத்தையும் சேர்த்தே வளர்க்கிறார்கள் தி.நகர் கடைக்காரர்கள்.
நீதிமன்றமும் மக்கள் சக்தியும் இல்லை என்றால், இவர்களெல்லாம் நம்மை கால் தூசுக்குக் கூட மதிக்க மாட்டார்கள் என்பது மட்டும் நிஜம்.
ஐசிஐசிஐ – பகல் கொள்ளை!
அக்டோபர் 28, 2011
ஐசிஐசிஐ பற்றி எழுதக்கூடாது என்று இருந்தேன். மறுபடியும் அதே வங்கியின் இன்னொரு பிரிவிடம் மாட்டிக்கொண்டு, என் கோபத்தைத் தொலைக்க வேண்டியதாயிற்று.
இந்த முறை ஐசிஐசிஐ லோம்பார்ட் – காப்பீடு நிறுவனம். சென்ற டிசம்பர் மாதமே என் இரண்டு சக்கர வாகனத்தின் வாகன காப்பீடு முடிந்துவிட்டது. கடந்த சில ஆண்டுகளாக நான் வாகனம் பயன்படுத்துவதை முழுவதும் குறைத்துவிட்டு, பேருந்துகளையே பயன்படுத்தி வருகிறேன். வீட்டுக்கு அருகே இருக்கும் ஒரு சில இடங்களுக்கு மட்டும் வாகனம்.
வழக்கம்போல், சென்ற வெள்ளியன்று இராதாகிருஷ்ணன் சாலையில், நீல்கிரீஸ் அருகே இருக்கும் பெரிய பெட்ரோல் பங்குக்கு பெட்ரோல் போடப் போனேன். நான் சென்றிந்த நேரம், அங்கே ஐசிஐசிஐ வாகன காப்பீடு வழங்கும் நபர் உட்கார்ந்திருந்தார்.
ஏற்கெனவே இரண்டு ஆண்டுகள் அந்த பெட்ரோல் மையத்தில்தான் என் இன்ஷூரன்ஸைப் புதுப்பித்து இருக்கிறேன். அதனால், அவர் அருகே போய் வாகனத்தை நிறுத்திவிட்டு, பழைய பாலிசியை எடுத்துக்கொடுத்தேன். பாலிசி எக்ஸ்பைர் ஆகிவிட்டது, புதுதாக போட, ரூ.950க்கு மேல் ஆகும் என்றார். சரியென்று சொல்லிவிட்டு, கொஞ்சம் தள்ளிப் போய் தொலைபேசியில் பேசத் தொடங்கினேன். அவர் மீண்டும் கூப்பிட, பாலிசி போட்டிருந்தார்.. ரூ. 972க்கு கிரெடிட் கார்டைத் தீற்றவும் ஒத்துக்கொண்டேன். சிலிப்பில் கையெழுத்தும் போட்டாச்சு.
அப்போதுதான், எனக்கு அது ஞாபகம் வந்தது. சென்ற ஆண்டு, பாலிசி போடும் போது ரூ. 604 தானே கட்டினோம். எதற்கு 900க்கு மேல் ஆச்சு என்று யோசனை.
“ பத்தாயிரம் ரூபாய்க்கு ஆக்ஸிடெண்ட் இன்ஷூரன்ஸ் கூட போட்டு இருக்கு சார்.. அதுக்கு பிரிமியம் ரூ. 290.”
“நான் அதை கேக்கலியேப்பா… எதுக்கு என்கிட்ட சொல்லாம போட்டீங்க?”
“பாலிசி எக்ஸபைர் ஆயிடுச்சு சார்… அதனாலயும் ஜாஸ்தி ஆயிடுச்சு..”
“பிரதர், இன்ஷூரன்ஸ் தெரியாதவங்க சொல்லுங்க. வேற நேஷனலைஸ்டு இன்ஷூரன்ஸ் கம்பெனி கிட்ட போனா..இதை விட பிரிமியம் கம்மியாகும்.. எதுக்கு என்னகிட்ட சொல்லாம செஞ்சீங்க?”
“ஐசிஐசிஐல ரெண்டையும் சேர்த்துத்தான் போடணும்னு இன்ஸ்டரக்ஷன் சார்…”
“இது அநியாயமா இல்ல. நீங்க பாலிசி விக்க நான் தான் கெடைச்சேன்?”
“ஆக்ஸிடெண்ட் கவரேஜ்தானே சார்?”
“அதை முடிவு செய்ய நீங்க யாரு? வேணும் வேணாங்கறது என் முடிவுதானே?”
மேலும் பேச்சைத் தொடர விரும்பாதவர் போல், இன்னொரு பில்லையும் எழுதத் தொடங்கினார் அந்த நபர்.
“இது என்ன?”
“சர்வீஸ் சார்ஜ்ஜுக்கு பில்.”
“எதுக்கு சர்வீஸ் சார்ஜ்?”
“ஐசிஐசிஐ லோம்பார்ட் இந்த டெஸ்க்கை நிர்வாகம் செய்ய எங்கிட்ட கொடுத்துட்டாங்க சார்.. 99 ரூபாய் எங்க சர்வீஸ் சார்ஜ்.”
ஏதோ ஒரு புரோக்கரேஜ் நிறுவனம் அந்த வாகன இன்ஷூரன்ஸ் மேஜை நிர்வாகம் செய்வது அப்போதுதான் தெரிந்தது.
“போன வருஷம் கூட, ஐசிஐசிஐ ஆள் இங்கே இருந்தாரேப்பா”
“எங்கிட்ட கொடுத்துட்டாங்க சார்.”
“அப்படின்னா.. இன்ஷூரன்ஸ் கமிஷன், சர்வீஸ் சார்ஜ் எல்லாம் நீங்க ஐசிஐசிஐ லோம்பார்ட் கிட்டதானே வாங்கிக்கணும். என்கிட்ட ஏன் வாங்கறீங்க?”
என் கேள்வி காற்றி தொங்கிக்கொண்டு நிற்க, அடுத்து வந்த வாகனத்தின் இன்ஷூரன்ஸைப் பார்க்க போனார் அந்த நபர். அத்தனை அலட்சியம். அத்தனை பொறுப்பு. என்ன படித்து, என்ன விவரம் தெரிந்துகொண்டு என்ன பயன்? கண்ணெதிரே ஒருவர் ஏமாற்றுகிறார். அதையும் மிக லாகவமாய், நேர்த்தியாய், சுத்தமாக. ஒன்றும் செய்ய முடியாமல், எரிச்சலும் கோபமும் மட்டுமே மிச்சம்.
படித்தவனையும் படிக்காதவனையும் சேர்ந்து மொத்தமாக முட்டாளாக்கும் செயல் இது. பகல்கொள்ளை என்ற வார்த்தைக்கு அன்றுதான் எனக்கு அர்த்தம் புரிந்தது!
ஐசிஐசிஐ – நவீன முரட்டுத்தனம்!
அக்டோபர் 26, 2011
சொந்தக் கதையை எழுதக்கூடாது என்று எப்போதுமே நினைத்துக்கொள்வேன். இந்த முறையும் முடியவில்லை. ஐசிஐசிஐ வீட்டுக் கடன் வழங்கும் நிறுவனத்தின் பொறுப்பற்ற தன்மை என்னை மிகுந்த மனவேதனைக்கு உள்ளாக்கிவிட்டது.
சென்னை மாநகரில் ஃப்ளாட் வாங்க ஆசைப்படும் லட்சோபலட்சம் மத்தியமர்களின் நானும் ஒருவன். 2001 திருவல்லிக்கேணியில் ஒரு ஃப்ளாட் வாங்கினேன். முதலில், கடன் வாங்கியது எல்.ஐ.சி.யின் வீட்டுக்கடன் நிறுவனத்தில். 13 சதவிகிதம் வட்டி அப்போது. வட்டி விகிதம் மிக அதிகமாக இருந்த சமயம் அது. பின்னர் 2002ல் வட்டி விகிதங்கள் குறையத் தொடங்கின. ஐசிஐசிஐ வங்கி 9.5 சதவிகிதத்துக்கு கடன் வழங்கத் தொடங்கியது.
உடனே என் கடனை ஐசிஐசிஐ வீட்டுக்கடன் நிறுவனத்துக்கு 2002ல் மாற்றினேன். தொடர்ந்து வட்டிவிகிதம் குறைந்துகொண்டே வர, ஒரு கட்டத்தில், ஐசிஐசிஐயிலேயே வீட்டுக்கடனை, ஃப்ளோட்டிங் ரேட்டில் இருந்து ஃபிக்சட் ரேட்டுக்கு மாற்றினேன். அதற்கு மொத்தத் தொகையில் 1.75 சதவிகிதமோ என்னவோ கட்டிய ஞாபகம்.
2005 என்று நினைவு. வீடு சம்பந்தமாக ஏதோ ஒன்றைத் தேடும்போது, வீட்டுப் பத்திரங்களின் பிரதியும், தாய்ப்பத்திரங்களின் பிரதிகளும் தேவைப்பட்டன. ஐசிஐசிஐ போய், பிரதிகள் வேண்டி விண்ணப்பித்து, அதற்கான கட்டணமாக ரூ. 500 கட்டிவிட்டு வந்தேன். பதிலே இல்லை. இரண்டு மூன்று முறை போய் கேட்டபோது, இதோ வந்துவிடும், அதோ வந்துவிடும் என்று சொன்னார்கள். இது நடுவே, வேறு வேலைகள் முந்திக்கொள்ள, பத்திரங்களின் பிரதிகளை வாங்கவேண்டிய அவசியம் ஏனோ மறைந்துவிட்டது. நானும் பின் தொடராமல் விட்டுவிட்டேன்.
2010 அக்டோபரோடு கடன் முடிந்தது. என்னுடைய சேல் டீட், சேல் அக்ரிமெண்ட், இதர தாய்ப்பத்திரங்கள் வேண்டி, ஐசிஐசிஐ வீட்டுக்கடன் நிறுவனத்திடம் போய் விசாரித்தேன். இன்னும் 21 நாள்களில் வந்துவிடும். வந்து பெற்றுக்கொள்ளலாம் என்றார்கள். 22 ஆம் நாள் போய் நிற்க, ஒரு சின்ன கவர் வருகிறது. உள்ளே கடனை கட்டிவிட்டதற்கான நோ அப்ஜெக்ஷன் சர்ட்டிபிகேட், டாக்குமெண்ட்ஸ் லிஸ்ட் மட்டுமே அதில் இருக்கிறது. அந்த லிஸ்டில், ஒரு பத்திரமும் அவர்களிடம் இருந்ததற்கான முகாந்தரமே இல்லை.
கதைகளில், “தூக்கி வாரிப் போட்டது” என்று எழுதுவார்களே, அதுதான் என் அப்போதைய உணர்வு. 2002ல் எல்.ஐ.சி.யில் இருந்து கடனை ஐசிஐசிஐக்கு மாற்றியபோது, ஐசிஐசிஐக்கான ஜெனரல் சேல்ஸ் ஏஜென்சிகள் இருந்தன. அவர்கள்தான் கடன் வாங்க உதவியவர்கள். பின்னர், ஜி.எஸ்.ஏ.க்களை எல்லாம் ஐசிஐசிஐ நிறுத்திவிட்டு, தாமே எல்லா செயல்பாடுகளை ஏற்றுக்கொண்டன. அந்தச் சமயத்தில்தான் நான் கடன் வாங்கினேன். எனக்கு உதவிய ஜி.எஸ்.ஏ. தாமே எல்லா பத்திரங்களையும் எல்.ஐ.சி.யில் இருந்து ஐசிஐசிஐக்கு மாற்றிக்கொள்வதாகவும், அதற்கு அனுமதி தரும் விதமான 150 ரூபாய் ஸ்டாம்ப் பேப்பரில் அத்தாட்சிப் பத்திரமும் எழுதி வாங்கிக்கொண்டார்கள்.
இதையெல்லாம் இப்போது ஐசிஐசிஐ வீட்டுக்கடன் நிறுவன ஊழியர்களிடம் விளக்க, பத்திரம் உங்களிடம்தான் வந்திருக்க வேண்டும், உடனே தேடிப் பார்க்கச் சொல்லுங்கள் என்று கேட்டுக்கொண்டேன். ஐசிஐசிஐ வீட்டுக்கடன், மந்தைவெளி அலுவலகத்தில் இது நடந்தது. வழக்கம்போல், சிரித்த முகத்தோடு என்னைக் கையாளத் தொடங்கிய அலுவலருக்கு கொஞ்ச நாளிலேயே நான் இம்சையாகிப் போனேன். என் அழைப்பை எடுக்க மாட்டார். நேரே போய் பேசும்போது, மேலும் மேலும் காரணங்களும், தேடுவதற்கான புதிய இடங்களும் அகப்பட்டுக்கொண்டே இருந்தன. ஒரு கட்டத்தில், பத்திரங்களை வைக்கும் மைய அலுவலக ஊழியரின் செல்பேசி எண்ணைக் கொடுக்க, அவர் பின்னால் லோ லோ என்று மூன்று நான்கு மாதங்கள் அலைந்திருப்பேன். அவர் மும்பை என்பார், சென்னை அடையாறு என்பார்… ஆனால், பத்திரம் போன இடம் தெரியவில்லை. ஒரு கட்டத்தில் இந்த நபரும் என் அழைப்பைத் தவிர்க்கத் தொடங்கிவிட்டார்.
இந்த இக்கட்டு ஏற்படுத்தியிருக்கும் மன உளைச்சல் கொஞ்சம் நஞ்சம் அல்ல. மொத்த பணத்தையும் கட்டியாகிவிட்டது; ஆனால் கையில் பத்திரமில்லை. எங்கு இருக்கிறது என்றும் தெரியவில்லை. என் மனைவி அமைதி மெல்ல மெல்ல குறையத் தொடங்கிவிட்டது. ஒரு கட்டத்தில் இருவரும் வீட்டுப் பத்திரம் சம்பந்தமாக பேசிக்கொள்ளவே கூடாது என்று சபதமெடுக்கும் அளவுக்கு மனவேதனை. சட்ட ரீதியாக என்ன செய்யவேண்டும், அப்படியே செய்தாலும், காணாமல் போன பத்திரத்தை வைத்துக்கொண்டு என்ன வேண்டுமானாலும் நடக்கலாமே. என்னென்ன விதமான இடர்களைச் சந்திக்கப் போகிறோமோ என்ற பதற்றம் ஒருபக்கம். ஐசிஐசிஐயின் விட்டேற்றித்தனம் மற்றொரு பக்கம்.
முகம் நிறைய புன்னகையும், அலுவலகப் பொலிவும், நிதானமும் நவீன வங்கியியலின் அடையாளங்களாக இருந்தாலும் உள்ளே இருக்கும் பொறுப்பற்றதன்மை எல்லா இடங்களிலும் ஒன்றாகவே இருப்பது மெல்ல மெல்ல புரியத் தொடங்கியது.
ஒரு நாள், நேரே எல்.ஐ.சி. வீட்டுக்கடன் நிறுவனத்தையே போய் கேட்டால் என்ன என்று எண்ணம் தோன்ற, பழைய வீட்டுக்கடன் எண்ணைத் தேடி எடுத்துக்கொண்டு, சைதாப்பேட்டையில் இருக்கும் அலுவலகத்துக்குப் போனேன். அங்கே இருந்த அதிகாரி, அப்போதுதான் ஓர் உண்மையை எனக்குச் சொன்னார். எல்.ஐ.சி.யில் வீட்டுக்கடன் அடைக்கப்பட்டாலும் வேறு வங்கிகளுக்கு மாற்றப்பட்டாலும், உரிமையாளர்களிடம்தான் மூலப் பத்திரங்கள் திருப்பி அளிக்கப்படும், வேறு வங்கிகளுக்கோ, நிதி நிறுவனங்களுக்கோ கொடுக்கப்படாது என்றார்.
மேலும், இது பத்தாண்டுகளுக்கு மேலான விஷயம், கோரிக்கை கடிதம் கொடுத்துவிட்டுச் செல்லுங்கள், எங்களால் முடிந்ததைச் செய்கிறோம் என்றார். கடிதம் கொடுத்துவிட்டு, கிட்டத்தட்ட இரண்டு வாரங்கள் காத்திருந்தேன்.
மூன்றாவது வாரம் அந்த எல்.ஐ.சி. வீட்டுக்கடன் நிறுவனப் பெண் அலுவலரைப் போய் பார்க்க, ஒரு மணி நேரம் காத்திருக்கச் சொன்னார். இரண்டு மணி நேரங்கள் கழித்து கூப்பிட்டவர் மேஜையில், நான் கொடுத்திருந்த பத்திரங்கள் அத்தனையும் சீலிடப்பட்ட உறையில் இருப்பது தெரிந்தது. என் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. அந்தம்மா எல்லா நலன்களும் வளங்களும் பெற வாழ்த்திவிட்டு, கையில் இருந்த இதழ்களைப் பரிசாக கொடுத்துவிட்டு, என் பத்திரங்களை வாங்கி வந்தேன்.
என் பத்திரங்களை பத்திரமாக வைத்துக்கொண்டு இருக்கவேண்டும் என்று எல்.ஐ.சி.க்கு தலையெழுத்தா என்ன? ஆனால் வைத்திருந்து பத்திரமாகத் திருப்பிக் கொடுத்தார்கள். எல்.ஐ.சி.மேல் இருந்த மரியாதை ஒரு சில படிகள் உயர்ந்தது உண்மை.
மீண்டும் ஐசிஐசிஐ. புதிய அலுவலர். புதிய முகங்கள். நான் இரண்டு மூன்று கேள்விகள்தான் கேட்கவேண்டும் என்று நினைத்துக்கொண்டு சென்றேன்.
பத்தாண்டுகளாக கடனுக்கு ஈடான பத்திரமே இல்லாமல் எப்படி நீங்கள் கடன் கொடுத்தீர்கள்? பத்திரங்கள் இல்லை என்று தெரியவந்ததும், என்னை எப்படிக் கேட்காமல் போனீர்கள்? அப்படியானால், உங்களுக்குப் பத்திரங்கள் முக்கியமில்லை. கடனை அடைத்துவிட்டால் போதும். அவ்வளவுதானே.
நவீன மோஸ்தரில் மயங்கி, சிஸ்டம்ஸ் அண்ட் பிராசஸஸில் மயங்கி, அழகிய புன்னகையில் மயங்கி, மேம்பட்ட சேவை என்ற ஹம்பக்கில் மயங்கி, இத்தனைஆண்டுகளாக, பத்திரங்கள் ஐசிஐசிஐயில் பத்திரமாக இருக்கின்றன என்ற என் எண்ணம் எவ்வளவு பைத்தியக்காரத்தனமானது?
அங்கு இருந்த அலுவலரின் உடல் மொழி எனக்கு ஒன்றைத்தான் திருப்பித் திருப்பிச் சொன்னது. பல லட்சம் நபர்களில் நீயும் இன்னொரு கஸ்டமர். நான் தொழில் செய்ய வந்திருக்கிறேன். உனக்கு பத்திரம் கிடைத்துவிட்டது அல்லவா? வாயை மூடிக்கொண்டு அடுத்த வேலையைப் பார்.
நடந்தது ஒரு தவறு என்றோ, ஒரு வாடிக்கையாளரின் மனவேதனைக்கு மன உளைச்சலுக்கு தாம் காரணமாக இருந்தோம் என்றோ துளிகூட நெக்குருகும் மனம் அங்கே இல்லை. புரொபஷனலிசம். பிளாஸ்டிக் புன்னகை. நவீன முரட்டுத்தனம். வருத்தம் தெரிவிக்கும் பக்குவம் தொலைத்த கார்ப்பரேட் கலாசாரம்.
என்.ஓ.சி.ஐ மட்டும் வாங்கிக்கொண்ட பின்னர், என் மனைவி கேட்டார், “பத்திரம் கிடைக்கலன்னா என்ன செஞ்சிருப்பீங்க?”
“மூணு மாசம் பார்த்துட்டு, போலீஸ்ல எஃப்.ஐ.ஆர். கொடுத்திருப்போம். அப்புறம், டூப்ளிக்கேட் காப்பி வாங்கியிருப்போம்…”
எல்லாவற்றுக்கும் துணிந்துதான் இருக்கிறார்கள். என்னைப் போல் எத்தனை ஏமாளிகளைப் பார்த்திருக்கிறார்களோ? முதல் முறையாக, நவீன வங்கியியலின் மேல் இருந்த மதிப்பு என்வரையில் சரியத் தொடங்கியது.
இதை நான் செஞ்சிருக்கணும்…
அக்டோபர் 19, 2011
நல்ல நாவல், நல்ல சிறுகதை, நல்ல சினிமா, எதைப் பார்த்தாலும், சே..இதை நான் செஞ்சிருக்கணும்… மிஸ் பண்ணிட்டேனே என்று ராத்தூக்கம் இல்லாமல் அவஸ்தை படுவேன். இதழியலில், இது இன்னும் கொஞ்சம் ரொம்பவே ஓவர்.
ஏதாவது நல்ல லேஅவுட், டிசைன், கட்டுரை, தொடர், அட்டைப்படம் பார்த்துவிட்டால், மனசே ஆறாது. திருப்பித் திருப்பி அதையே பார்த்துக்கொண்டு இருப்பேன், பேசுபவர்களிடமே சம்பந்தம் இருக்கிறதோ இல்லையோ, அதை எடுத்துச் சொல்லுவேன். ஆற்றாமை ஆற ரொம்ப நேரம் ஆகும்!
சமீபத்தில் இப்படி என்னை ஆற்றாமைக்குள் ஆட்படுத்தும் ஆச்சரியங்கள் நடந்துகொண்டு இருக்கின்றன:
1. புதிய தலைமுறை இதழில் சட்டென பிரியல்லண்டாக தென்படும் சில கட்டுரைகள். குறிப்பாக, எழுத்தாளர் பிரபஞ்சனின் தொடர். நேர்த்தியான மொழி, அழகான வடிவம், மனத்தைத் தீண்டும் அனுபவங்கள்.
2. பாவை சந்திரன் இதழ் ஆசிரியராக பொறுப்பேற்ற பின்பு வரும் தினமணி கதிர் வார இதழை, அப்படியே கண்களில் ஒற்றிக்கொள்ளலாம். பாவையின் டிசைன் சென்ஸ் என்னை எப்போதும் கட்டிப்போடும். புதிய பார்வை இணை ஆசிரியராக இருந்தபோது, அவர் அதில் செய்த லே அவுட்கள் ஒவ்வொன்றும் அபாரம்! பத்திரமாக பழைய இதழ்களைச் சேமித்து வைத்திருக்கிறேன். இயற்கையாகவே அவருக்குள் ஓர் அழகியல் பார்வை உண்டு. அதுதான் இதழ் முழுவதும் வியாபித்திருக்கும். இப்போது, தினமணி கதிர் அந்த டிசைன் பாக்கியத்தைப் பெற்றிருக்கிறது.
3. சமநிலை சமுதாயம் என்று ஒரு இஸ்லாமிய இதழ் வருகிறது. ரொம்ப தைரியமான இதழ். இஸ்லாமிய சமுதாயத்துக்கு உள்ளேயே கேட்கப்பட வேண்டிய கேள்விகளின் திறவுகோல் இந்த இதழ். ஹஜ் யாத்திரை அழைத்துப் போகிறேன் என்று கல்லா கட்டும் பயண முகவர்களைப் பற்றி மிக நல்ல கட்டுரை இதன் ஓர் இதழில் இடம்பெற்றது. வேலூரில் இருக்கும் மற்றொரு இஸ்லாமிய மார்க்க கல்லூரியின் குறைகளைப் பற்றி இந்த இதழில் கட்டுரை வந்திருக்கிறது. ச.ச. இதழ், அட்டைப்படத்துக்கு கொடுக்கும் முக்கியத்துவம் என்னை பரவசப்படுத்தும். ஜெ. ஜெயித்து வந்தபோது, ச.ச. இதழின் முகப்பில் ஓர் அட்டைப்படம் வைத்தார்கள். இன்றுவரை அதை எல்லோருக்கும் நான் சொல்லிக்கொண்டு இருக்கிறேன்.
4. அடுத்து, இன்னும் கொஞ்ச நாளைக்கு நான் சொல்லிக்கொண்டு திரியும் ஒரு விஷயத்தை நேற்று படித்து முடித்தேன். தி சண்டே இந்தியன் இதழில் தீபாவளி இதழோடு, ரசிகன் என்றொரு இணைப்பு இதழும் வந்திருக்கிறது. தமிழின் முக்கிய நடிகைகளைக் குறித்த மலரும் நினைவுகள். முக்கிய எழுத்தாளர்கள் அனைவரும் எழுதியிருக்கிறார்கள். ஒவ்வொரு நடிகையும் எவ்வாறு தமிழ்சமூகத்தின் மனத்திரையில் நீக்காத இடம் பிடித்திருக்கிறார்கள் என்று நாஸ்டால்ஜியாவைத் தூண்டு சுவையான கட்டுரைகள். கலெக்டர்ஸ் ஐட்டம் மாதிரியான ஓர் நூல். அ.முத்துலிங்கம், மாலன், சுகுமாரன், இயக்குநர் வஸந்த், ஜெயமோகன், நாசர் ஆகியோரின் கட்டுரைகள் முதல் தரமானவை. பத்திரப்படுத்திக்கொள்ளத் தூண்டும் ஆவணம்.
இரண்டு மரணங்கள்
அக்டோபர் 10, 2011
விவரிக்கவியலா வெறுமையை ஏற்படுத்துகின்றன மரணங்கள். சிறிது காலம் பழகினாலும் நீண்ட காலம் பழகினாலும், நல்ல நட்புக்களின் மறைவு ஏற்படுத்தும் வெற்றிடம், மனம் நெகிழச் செய்பவை.
1. கல்யாண் என்கிற கல்யாணராமன்: இரண்டு நாட்களுக்கு முன்பு இந்த மாதம் புத்தகம் பேசுது இதழ் படிக்கையில், ஒரு மூலையில் சின்ன பெட்டிச் செய்தி. தோழர் டி. கல்யாணராமன் மறைவுக்கு வருத்தம்.
சென்னை ஃபிலிம் சொஸைட்டி பற்றி தெரிந்தவர்களுக்கு கல்யாணும் நாயுடுவும் கண்டிப்பாக தெரிந்திருக்கும். 80களின் கடைசி, தொண்ணூறுகளின் தொடக்கத்தில், சி.எஃப்.எஸ்.சில் நான் ஏராளமான வெளிநாட்டுப் படங்களைப் பார்த்ததற்கு, கல்யாண் முக்கிய காரணம். மெலிந்த தேகம். கத்தையான மீசை. ஆங்கிலமும் கொஞ்சம் அழகிய தமிழும் கலந்து அவர் பேசும் மொழி, வசீகரம். எல்லா விஷயங்களிலும் அவருக்கு இருந்த ஈடுபாட்டைத் தொடர்ந்து பார்த்திருக்கிறேன். பத்திரிகை, புத்தகம், நல்ல சினிமா என்று அறிவின் விசாலம், கவர்ச்சி நிரம்பியவர் கல்யாண். சி.எஃப்.எஸ். பின்னர் “சலனம்” என்ற நல்ல சினிமாவுக்கான இதழை நடத்தியது. அதன் ஆசிரியர் குழுவில் என் பெயரும் இருந்தது. அதற்காக சினிமா கட்டுரைகளை நான் மொழிபெயர்த்துக் கொடுத்திருக்கிறேன்.
கால ஓட்டத்தில், அவர் கிருஷ்ணமூர்த்தி புக் செல்லர்ஸ் – தீரர் சத்தியமூர்த்தி மகள் லக்ஷ்மி கிருஷ்ணமூர்த்தியின் கணவர் உருவாக்கிய பதிப்பகம் / விற்பனை துறை – பதிப்பு ஆசிரியராக இருந்தபோது, தி.நகர் தணிகாசலம் தெருவில் சந்தித்து உரையாடியிருக்கிறேன். அவருடைய உற்சாகம் ததும்பும் குரலையும் மேனரிஸம்களையும் மறக்கவே முடியவில்லை.
2. ஸ்ரீதர் – விகடன் குழுமத்துக்குள், பர்சேஸ் ஸ்ரீதர் என்றால் அனைவருக்கும் தெரியும் நபர். நல்ல உயரம். புன்சிரிப்பு. மாந்தளிர் நிறம். நல்ல அழகர். நான் பழகியபோதே அவருக்கு ஐம்பது வயதுக்கு மேல் இருக்கும். இளமையில் இன்னும் மகா அழகராக இருந்திருக்க வேண்டும்.
விகடன் பிரிட்டானிகா வெளியிடும் சமயத்தில் அவரோடு நிறைய நேரம் செலவிட்டு இருக்கிறேன். வெளிநாடுகளில் இருந்து விதம்விதமான பேப்பர்களை இறக்குமதி செய்தல், அட்டைகளை இறக்குமதி செய்தல், தாளின் தரம், கெட்டித்தன்மை…ஏராளமான விஷயங்களைத் தெரிந்த நல்ல மனிதர்.
பதற்றமே இல்லாமல், ஒவ்வொரு பிரச்னையையும் அணுகக்கூடியவர். அவரது ஆளுமையை கண்டு வியந்திருக்கிறேன். சில பேரைக் கண்டால் போய் நின்று இன்னும் கொஞ்சம் நேரம் பேசப் பிடிக்குமே…அது மாதிரியான கவர்ச்சி அவரிடம் உண்டு.
எனக்கு ஒரு புத்தகம் அன்பளிப்பாக கொடுத்தார். ஃபின்னிஷ் கதைகள் என்ற ஆங்கிலச் சிறுகதைத் தொகுதி. கனமே இல்லாத தாளில் அச்சடித்த நூல். 200 பக்கங்களுக்கு மேல் இருந்தாலும் தக்கையான புத்தகம். ஆன்ஸ் கிரிஸ்டி ஆண்டர்சனின் டேல்ஸ் என்ற லண்டனில் அச்சடித்த நூலொன்றை இதற்கு முன்பு பார்த்திருக்கிறேன். முழுத் தொகுதி. ஆனால், தக்கையாக இருக்கும்.
ஸ்ரீதர், ஹார்ட் அட்டாக்கில் போய்விட்டார் என்று கேள்விப்பட்டேன். ஒரு மாதம் ஆகிவிட்டது என்றார்கள்.
மரணம் ஏற்படுத்தும் வெற்றிடம், வலி நிரம்பியது.
உள்ளாட்சித் தேர்தல் கணக்குகள்!
செப்டம்பர் 27, 2011
தமிழக உள்ளாட்சித் தேர்தல் களைகட்டத் தொடங்கிவிட்டது. அ.தி.மு.க., தி.மு.க. தனித்து நிற்க முடிவு செய்தவுடன், மற்ற கட்சிகள் அனைத்தும் தனித்தே களம் காண வேண்டிய நிர்ப்பந்ததுக்குத் தள்ளப்பட்டு இருக்கின்றன. தே.மு.தி.க., மார்க்சிஸ்டோடு கூட்டு அமைத்து இருக்கிறது.
இந்த நிலையை மனத்தில் வைத்துக்கொண்டு என்ன கார்ட்டூன் போடலாம் என்று யோசித்தபோது, உதித்த சில ஐடியாக்கள் இவை:
1. அம்மாவும் அய்யாவும் மிட்டாய் டப்பாவை காலி என்பது போல் தட்டி மூடிக்கொண்டே தத்தமது வீடுகளுக்குள் நுழைய, காத்திருக்கும் கட்சிகள் அனைத்தும் ஏக்கம் பீடிக்க நிற்க வேண்டும். “அடுத்த பண்டிகைக்குப் பார்த்துக்கலாம், இப்போ ஒண்ணுமில்லை… போயிட்டு வாங்க!” என்று கமெண்ட் வைக்கலாம்.
2. எல்லா கட்சியினரும் தத்தமது கட்சிக் கொடிகளோடு முண்டியடுக்க, அய்யாவும் அம்மாவும், யாரையும் சீந்தாமல், தமது கட்சிக் கொடிகளை உயர்த்துவதில் முனைப்புடன் நிற்கவேண்டும். “முதல்ல எங்க கொடி ஏறட்டும். அப்புறம் பார்த்துக்கலாம்” – கமெண்ட் வைக்கலாம்.
மெனக்கெட்டால் இன்னும் சிறப்பான ஐடியாக்கள் வரலாம். ஆனால், இதெல்லாம் ஒரே செய்தியைத்தான் சொல்கின்றன. தி.மு.க.வும் அ.தி.மு.க.வும் தனித்தே உள்ளாட்சித் தேர்தலைச் சந்திக்க என்ன காரணம் இருக்க முடியும்? பல தியரிகள் உலவுகின்றன.
1. இரு பெரிய கட்சிகளுமே தத்தமது அடிமட்ட கட்சிக்காரர்களை எங்கேஜ் செய்யவும் வாய்ப்பளிக்கவும் உற்சாகமூட்டவும் இதைவிட வேறு சிறந்த வாய்ப்பு இல்லை. கூட்டணிக் கட்சிகளுக்கு சில இடங்களைப் பிரித்துக்கொடுக்கும்போது, பெரிய கட்சியின் உள்கட்டுமானத்தில் தேவையற்ற மனக்கசப்புகள் ஏற்படவும் பிளவுகள் ஏற்படவும் ஏதுவாகிவிடலாம். அதைத் தடுக்க, கூட்டணியைத் தவிர்த்துவிட்டு, தாமே அனைத்து இடங்களிலும் தம் கட்சிக்காரர்களை நிறுத்துவது சரியான அணுகுமுறை. இருகட்சிகளுமே அதைத்தான் செய்திருக்கின்றன.
2. உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி தோல்வி, பெரிய பாதிப்பை ஏற்படுத்திவிடப் போவதில்லை. மக்கள் மனத்தில் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டு இருந்தால், அது ஒரு சில இடங்களில் மட்டுமே பிரதிபலிக்க வாய்ப்புண்டு. மற்றபடி, ஆளுங்கட்சியினரே, உள்ளாட்சி அமைப்புகளிலும் வெற்றி பெறுவார்கள்; பெற்றிருக்கிறார்கள். மாற்றுக் கட்சிக்கு உள்ளாட்சி அமைப்புகளில் வாய்ப்பளித்தால், அவர்களால் பெரிதாக ஏதும் திட்டங்களைச் செயல்படுத்திவிட முடியாது; மாநில அரசைச் சார்ந்தே செயல்படுவது உகந்த வழி என்று மக்கள் ஒருவித தீர்மானத்தில்தான் வாக்களிக்கவே வருவார்கள். இந்தப் பின்னணியில் இருந்து பார்க்கும்போது, மற்றொரு வெற்றி வாய்ப்பை ஏன் இழக்க வேண்டும் என்று அ.தி.மு.க நினைக்கலாம். கடுமையாக மோதி, மக்களிடம் தம் செல்வாக்கு இன்னும் மிச்சமிருக்கிறது என்று காண்பிக்க இது ஒரு வாய்ப்பு என்று தி.மு.க. கருதலாம். கூட்டணி சேர்த்துக்கொண்டால், கூட்டணி பலத்தால்தான் வெற்றி கிடைத்தது என்ற அவப்பெயர் ஏற்பட வழியேற்பட்டுவிடலாம். அதைத் தவிர்க்கவே தி.மு.க. விரும்பி இருக்கக்கூடும்.
3. இன்னொரு கோணத்தில் இதையே புரிந்துகொள்ளலாம். சட்டமன்றத் தேர்தலில், தே.மு.தி.க.வின் ஆதரவில்தான் அ.தி.மு.க. வெற்றி பெற்றது என்ற கருத்து ஆழமாக இருக்கிறது. இதை உடைக்கவேண்டும்; தம் சொந்த செல்வாக்காலும், அ.தி.மு.க.வின் தீவிர தொண்டர்களாலுமே வெற்றி கிடைத்தது என்பதை நிரூபிக்க இதை ஒரு சரியான வாய்ப்பாக ஜெ. கருதியிருக்கலாம்.
4. இதற்கு இன்னொரு கோணமும் உண்டு: ஜெ. மெல்ல மெல்ல பா.ஜ.க. பக்கம் நகர்ந்துகொண்டு இருக்கிறார் என்றே தெரிகிறது. 2014ல் நரேந்திர மோதி பிரதமர் வேட்பாளராக நிறுத்தப்படலாம் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. கம்யூனிஸ்டுகளோ, தே.மு.தி.க.வோ அப்போது தேவையற்ற சுமை. இப்போதே மெல்ல அவர்களைக் கழட்டி விட்டுவிடுவது உத்தமம் என்று ஜெ. கணக்கு போட்டு இருக்கலாம்.
5. தி.மு.க.வோடு கூட்டணி சேர்ந்ததால்தான், தோற்றுப் போனோம் என்ற கருத்து பல இடங்களில் காங்கிரஸ்காரர்களால் முன்வைக்கப்படுகிறது. தம் கட்சி ஆதரவு இல்லையெனில், காங்கிரஸ் பெற்றிருக்கும் குறைந்தபட்ச சீட்களைக் கூட பெற்றிருக்க முடியாது என்பதை நிரூபிக்க இது சரியான வாய்ப்பு என்று கலைஞர் நினைத்து இருக்கலாம். வருங்காலத்தில் தி.மு.க. கூட்டணியில் தொடர வேண்டிய தேவையை, காங்கிரசுக்கு வலியுறுத்த இதைவிட சிறப்பான சந்தர்ப்பம் அமையாது என்றும் அவர் கணக்கு போட்டு இருக்கலாம்.
6. மற்ற கட்சிகள் அனைத்துக்கும் இத்தேர்தல் ஓர் ரியாலிட்டி செக். ஆசிட் டெஸ்ட். தாம் அடிமட்ட தொண்டர்கள் வரை உண்மையிலேயே செல்வாக்கு பெற்றிருக்கிறோம் என்பதை பெரிய கட்சிகளுக்கு நிரூபிக்க வேண்டிய தேவை இப்போது ஏற்பட்டுவிட்டது. தே.மு.தி.க.வின் 10 சதவிகித, கம்யூனிஸ்ட்டுகளின் 3-4 சதவிகித வாக்குவங்கிகள் பத்திரமாக இருக்கின்றனவா; செல்வாக்கில் உயர்வா, சரிவா என்பதை இத்தேர்தல் அவர்களுக்குக் காண்பித்துவிடும். வாக்குகள் சேதாரம் இல்லாமல் இருந்தால்தான் அடுத்து வரும் தேர்தல்களில் பெரிய கட்சிகளுடன் பேரம் பேச முடியும்; இல்லையெனில், கட்சி வளர்ச்சிப் பணிகளில் இனி முனைந்து செயல்பட முயலவேண்டும்.
7. பா.ம.க., விடுதலை சிறுத்தைகள் வேகமாக வளர்ந்த கட்சிகள்; கூட்டணி ஆதரவிலேயே செல்வாக்கு பெற்றவை. ஆரம்ப காலத்தில் அக்கட்சித் தலைவர்களுக்கு அடிமட்ட தொண்டர்களோடு இருந்த அணுக்கம், கால ஓட்டத்தில் மெல்லக் குறைந்துவிட்டது. இப்போது, உண்மையில் தம் செல்வாக்கை அவர்கள் புரிந்துகொள்வார்கள். தம் அடிப்படை பலம் கைநழுவிப் போய்விட்டதா? வலுப்பெற்றிருக்கிறதா என்று தெரிந்துவிடும்.
8. உள்ளாட்சி அமைப்புகளில் வெற்றி பெற்று வந்தவர்கள் என்ன செய்தார்கள் என்று மக்களுக்கு தெரியவே தெரியாது என்பதுதான் உண்மை. மக்களின் தேவைகளுக்காக அவர்கள் குரல் கொடுத்தார்களா? மாமன்றக் கூட்டங்களில் அவர்களுடைய செயல்பாடுகள் எப்படி இருந்தன? என்ன புதிய திட்டங்களை அவர்கள் தம் வார்டுகளில் செயல்படுத்தினார்கள்? எம்.எல்.ஏ.க்கள் என்ன செய்தார்கள் என்று தேடினால், தெரிந்துகொண்டுவிடலாம். ஆனால், மாமன்ற, நகராட்சி உறுப்பினர்கள்? தம் வார்டுகளில் உள்ள மக்கள் பிரச்னைகளுக்கு மிக அருகிலேயே இருக்கும் இந்த உறுப்பினர்கள்தான், மிகவும் விலகி இருக்கிறார்கள் (விதிவிலக்குகள் உண்டு). மக்கள் சம்பந்தமான வேலைகளை விட, இந்த உறுப்பினர்கள், அவர்கள் சார்ந்த கட்சி வேலைகளிலேயே அதிகம் ஈடுபட்டு வருகின்றனர். அடுத்த கட்ட வளர்ச்சியை நோக்கி அவர்கள் முன்னேற வேண்டுமல்லவா
9. இந்த நிலையில், உள்ளாட்சித் தேர்தலில் கட்சி சார்ந்த உறுப்பினர்களுக்கு வாக்களிப்பதைத் தவிர்ப்பது நல்லது. எம்.எல்.ஏ. தேர்தல் என்றால், மக்கள் தொகை அதிகம். அக்கவுண்டபிளிட்டி குறைவு (அங்கும் அக்கவுண்டபிளிட்டி வேண்டும்; ஆனால் வலியுறுத்தும் வழிகள் குறைவு!). வார்டு என்பதோ, நகராட்சி, பஞ்சாயத்து என்பதோ, இன்னும் அருகில் இருக்கும் அலகுகள். அங்கே மக்கள் நலனில் அக்கறை உள்ளவர்களை சுலபமாக அடையாளம் காண முடியும். அவர்கள் இத்தேர்தலில் நின்றால், அவர்களுக்கு வாக்களிக்க முன்வாருங்கள்.
10. உள்ளாட்சி அமைப்புகளுக்கு, மத்திய மாநில அரசுகள், உலக வங்கி, இன்னபிற நிதியங்கள் ஏராளமாக பணம் ஒதுக்குகின்றன. அங்கே நல்லவர்கள், நேர்மையாளர்கள் உறுப்பினர்களாக இருந்தால், பலன் நிச்சயம் மக்களைப் போய்ச் சேரும். இன்றைக்கு இருக்கும் மோசமான அரசியல் சூழலில், நல்லவர்களால் என்ன செய்ய முடியும்? நேர்மையாளர்கள் என்பதெல்லாம் பம்மாத்து என்றெல்லாம் குரல்கள் ஒலிக்கின்றன. இருக்கலாம். அவர்களால் ஒன்றுமே செய்ய முடியாமல் கூட போகலாம். பரவாயில்லை. குறைந்தபட்சம், நமக்குத் தெரிந்த நல்லவருக்கு, நேர்மையாளருக்கு, மக்கள்நலப் பணியாளருக்கு வாக்களித்தோம் என்ற திருப்தியாவது இருக்கட்டுமே. முதல் செங்கல் நம்முடையதாக இருக்கட்டுமே.
இதைக்கூடச் செய்யாமல் விலகி இருப்பதில் அர்த்தமில்லை. மறக்காமல், வாக்கு அளியுங்கள்.
அண்ணா ஹசாரேவை ஏன் ஆதரிக்கவேண்டும்?
ஆகஸ்ட் 15, 2011
அண்ணா ஹசாரே மீது காங்கிரஸ் கட்சி கடும் குற்றச்சாட்டுக்களை வீசத் தொடங்கிவிட்டது. இதுநாள் வரை கொஞ்சம் மிதமாக போனவர்கள், உண்ணாவிரதப் போரை நடத்த அவர் காட்டும் உறுதியைக் கண்டு, அவரைக் கீழ்த்தரமாக பேச ஆரம்பித்து இருக்கிறார்கள். காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் மணீஷ் திவாரி, ஒரு படி மேலே போய், அண்ணாவையும் அவரது குழுவினரையும் “armchair fascists, over-ground Maoists, closet anarchists” என்று பேசியிருப்பது விஷமத்தனமானது. உள்நோக்கம் கொண்டது.
இந்த நிலையில், அண்ணாவை ஆதரிப்பது என் வரையில் முக்கியம் என்று கருதுகிறேன். அவநம்பிக்கைவாதிகளைப் போல் எல்லாவற்றையும் எல்லோரையும் இழித்தும் பழித்தும், குறை கண்டும் குற்றம் சொல்லிக்கொண்டும் இருப்பது சுலபம். அண்ணா, தமது டிரஸ்டுக்கு வந்த பணத்தில் பிறந்த நாள் விழா கொண்டாடினார், அது தவறு என்று நீதிபதி சாவந்த் கருத்து சொல்லியிருக்கிறார்.
ஆனால், இதையெல்லாம் மீறியது அண்ணாவின் இயக்கமும் அதன் தேவையும்.
1. இன்று அண்ணா மிடில் கிளாஸ் இளைஞர்களின் கோபத்தின் முகமாக உருவாகி இருக்கிறார். தம்மால் ஒன்றும் செய்ய முடியவில்லையே, நாட்டின் ஊழல் கேடுகளுக்கு வழி தேட முடியவில்லையே என்று குமுறும் மிடில் கிளாஸ், தம் குரலை, அண்ணாவிடம் இனம் காணுகிறது. அண்ணா இந்த நம்பிக்கையைத் தோளில் சுமப்பதற்கு முழுவதும் தகுதியானவர் என்று மத்தியமர்கள் நம்புகிறார்கள். எத்தனை குட்டையைக் குழப்பினால், அவரது செயல்களுக்கு உள்ளர்த்தம் கற்பித்தாலும், மேன்மேலும், அவரது புகழ் உயரவே செய்கிறது. செய்யும். அதுதான் நம்பிக்கையின் பலம்!
2. ஊழல் சீர்கேடுகளுக்கு, முகம் கொடுக்க மத்திய அரசு தயங்குகிறது என்பது வெளிப்படை. லோக்பால் வரைவு மசோதா பாராளுமன்றத்தில் வைக்கப்பட்டு, சட்டமாக்கப்படலாம். அதனால், எந்தப் பயனும் விளைந்துவிடாது என்பதில் அக்கறை உடைய மத்யமர்கள் கவலைகொள்ளுகிறார்கள். பல்லைப் பிடுங்கிவிட்டுப் பாம்பு என்றால், யாரேனும் அச்சப்படுவார்களா என்ன? மக்கள் எழுச்சியை ஓரளவுக்குத் திருப்தி செய்து, கவனத்தைத் திசை திருப்பவேண்டும் என்பதே காங்கிரஸின் எண்ணமாக இருக்கிறது.
3. அண்ணா, லஞ்ச ஊழலை, நவீன முழக்கமாக புதுப்பித்து இருக்கிறார். மக்கள் மனத்தின் தேவை அது. அவர் அதற்கு உடனடியாக தீர்வு கண்டுவிடுவார் என்று நான் நினைக்கவில்லை. ஆழப் புரையோடிய புண்ணை மருந்திட்டு குணமாக்கிவிட முடியுமா என்ன? ஆனால், லஞ்ச ஊழல் ஓர் நோய், அதைக் குணமாக்கவேண்டும் என்ற பதற்றத்தை, அண்ணா விதைத்து வருகிறார். ஏற்கெனவே விதை ஊன்றிய மனங்களில் அதை வளர்த்தெடுக்கிறார். இந்த அவேர்னஸ் பில்டிங், மிக முக்கியமான பணி. இதை நான் இப்படிப் பார்க்கிறேன் : காங்கிரஸ் கட்சியை காந்தி தலைமையேற்று நடத்த வருவதற்கு முன்பு, அவரை ஏற்பதற்கான பண்பட்ட மனங்கள் தயாராக இருந்தன. கோகலே உள்ளிட்டோர் அதற்கு முன்பு செய்தது இப்படிப்பட்ட பண்படுத்துதலைத்தான். இப்போதும் அப்படிப்பட்ட பண்படுத்துதல் அவசியம். அண்ணா ஹசாரே இயக்கத்தினரின் முயற்சி இத்தகையதே.
4. நண்பர் ஒருவரோடு பேசிக்கொண்டு இருந்தபோது, இந்தச் செய்தியைச் சொன்னார்: ஷீர்டி பாபாவிடம், கோபாலகிருஷ்ண கோகலே, தனக்குப் பின்னர் காங்கிரஸ் பேரியக்கம் என்னாகும், யார் தலைமை ஏற்பார்கள் என்று கவலையோடு கேட்டாராம். அதற்கு பாபா, “வந்துகொண்டே இருக்கிறார், நீ உன் வழியில் போ” என்றாராம். அண்ணா ஹசாரே வழிநடத்தும் இயக்கம் அதுபோல் ஒரு எதிர்காலத் தலைவரின் வரவுக்கானஆரம்பமோ என்னவோ?
5. அரசையும் ஆளுபவர்களையும் கொஞ்சமேனும் பயத்தோடும் கட்டுப்பாடுடனும் நடந்துகொள்ள வைக்க, அண்ணாவின் இயக்கம் நிச்சயம் துணை செய்யும். மக்கள் கண்கொத்திப் பாம்பாக இருக்கிறார்கள் என்று புரிய வைக்க இந்த இயக்கம் மிக முக்கியம்.
6. தகவல் அறியும் சட்டத்தை மக்கள் நலனுக்குப் பயன்படுத்தும் ஓர் நண்பரிடம் பேசும்போது, அவர் சொன்ன செய்தி சுவாரஸ்யமானது. குஜராத்தில், திட்டங்கள் லஞ்சம் ஊழல் இல்லாமல் செயல்படுத்தப்படுவதற்கும், உரிய பலன்கள் ஏழை எளியவர்களிடம் போய் சேருவதற்கும் காரணமாக இருப்பது தகவல் அறியும் சட்டம்தானாம். நரேந்திர மோடி, அரசு நிர்வாகத்தை ஒழுங்காக செயல்பட வைக்க, இந்த வசதியை நன்கு பயன்படுத்துகிறாராம். எல்லாவற்றுக்கும் பதில் சொல்லவேண்டுமே, சொல்லவில்லை என்றால், மேலே இருக்கும் முதல்வர் கவனத்துக்கு தவறுகள் சென்றுவிடுமே என்ற அச்சம், அங்கே நிர்வாகத்துறையில் பரவி இருக்கிறது. இதுதான் அரசு நிர்வாகத்தின் அக்கவுண்டபிளிட்டிக்கும் பொறுப்புமிக்கத்தன்மைக்கும் உதாரணம். சட்டங்களை முறையாகப் பயன்படுத்துதல்.
காங்கிரஸ் அண்ணாவைக் கண்டு, அவரது இயக்கம் கண்டு பதற்றம் கொள்ளத் தொடங்கியுள்ளது. நாளை நடக்கவிருக்கும் போராட்டத்துக்கு அனுமதி அளிக்க 22 நிபந்தனைகள் போடுவது, அனுமதி மறுப்பு என்றெல்லாம் செய்திகள் வருகின்றன. நல்ல ஆரம்பம்! இப்படியே முன்னேறுவது நல்லதே செய்யும்!
தேவதையை முன்வைத்து…
ஜூலை 24, 2009
சென்ற செவ்வாய்கிழமை அன்று (14.07.09) சென்னையில் இரண்டு புதிய இதழ்களின் வெளியீடு நடைபெற்றது. கிரிகுஜாம்பாள் பப்ளிகேஷன்ஸ் பெண்களுக்காக தேவதை என்ற இதழையும் ஆன்மிகத்துக்காக திரிசக்தி என்ற இதழையும் வெளியிட்டு இருக்கிறது. இதழ் விலை ரூ.15. தேவதைக்கு ஆசிரியர் தயாமலர். இவர் அவள் விகடன் இதழின் முன்னாள் பொறுப்பாசிரியர். திரிசக்திக்கு பி.சுவாமிநாதன் ஆசிரியர். இவர் சக்தி விகடனின் முன்னாள் பொறுப்பாசிரியர்.
எனக்கு புதிய இதழ்கள், புதிய மீடியா முயற்சிகள் மீது எப்போதும் ஒருவித மோகம் உண்டு. ஓர் இதழியல் மாணவனாக, வெளிவரும் ஒவ்வொரு புதிய இதழையும் வாங்கி, அதன் உள்ளடக்கத்தைப் பார்த்து, அதன் தன்மைகளைப் புரிந்துகொள்வதில் எனக்கு பெரும் ஆர்வம் உண்டு.
நான் பல ஆண்டுகளாக எல்லாவிதமான பெண்கள் இதழ்களையும் வாங்கியிருக்கின்றேன். ஆரம்பத்தில் இருந்து கடைசி வரை பெண்கள் இதழ்களின் பக்கங்களை நான் அப்படியே தள்ளிக்கொண்டு போன காலம் உண்டு. எனக்கு அதில் படிக்க ஒன்றுமில்லை என்ற எண்ணம் மிகுந்திருந்தது. ஆனால் ஒவ்வொரு பெண்கள் இதழும் தனக்கான வெற்றியைப் பெற்று வந்திருக்கின்றன. படிக்க ஒன்றுமில்லாமல் எப்படி ஒரு பத்திரிகை விற்பனையில் வெற்றி பெற முடியும் என்ற கேள்வி என்னைக் குடைந்துகொண்டே இருக்கும்.
நான் பெண்கள் இதழின் வாசகன் இல்லை என்ற உண்மை புரிய கொஞ்சம் காலம் ஆயிற்று. ஆனாலும் பெண்கள் இதழ்களை நான் தொடர்ந்து பின்பற்றி வந்திருக்கிறேன். வணிக ரீதியாக இந்த இதழ்கள் ஒரு முக்கிய விஷயத்தைச் செய்கின்றன. வாசகர்களின் பரப்பை ஒவ்வொரு புதிய இதழும் விரிவாக்குகின்றன. இல்லை, இருக்கும் வாசகர் பரப்பைத்தான் ஒவ்வொரு புதிய இதழும் பங்குபோட்டுக்கொள்கின்றன என்ற கருத்தும் உண்டு. மார்க்கெட்டிங் ரிசர்ச் துறையில், ஒவ்வொரு புதிய பிராடக்டும் பழைய பிராட்கட் ஒன்றின் இடத்தை பிடிக்கவே வருகிறது என்று சொல்லுவார்கள். பத்திரிகை விற்பனையிலும் இப்படி நடப்பதாக ஆய்வுகள் சொல்வதுண்டு. இதுவும் சரியாக இருக்கலாம். ஆனால், ஒவ்வொரு இதழும் குறைந்தபட்சம் ஒரு புதிய வாசகர் குழுவை நோக்கி பேசுவதாக நான் நினைக்கிறேன். இந்த எண்ணிக்கை குறைவாக இருக்கலாம்.
தேவதை இதழை முன்வைத்து என் எண்ணங்களைப் பதிவு செய்யவே இக்கட்டுரையை எழுத ஆரம்பித்தேன். தேவதைக்கு ஓர் முன்னோடி உண்டு. அது அவள் விகடன். அவள் விகடனின் இன்னொரு அச்சுப் பிரதி, மல்லிகை மகள் என்ற இதழ். இதற்கு ஆசிரியர் ம.கா.சிவஞானம். இவரும் முன்பு அவள் விகடனின் நிர்வாக ஆசிரியராக இருந்தவர். ம.கா.சிவஞானம், தயாமலர் ஆகியோர் அவள் விகடனின் உள்ளடக்க வடிவத்தை (Content Mix) உருவாக்கியதில் முக்கிய பங்கு வகித்திருக்க வேண்டும். அந்த வடிவம், வியாபார ரீதியாக பெரிய வெற்றியைப் பெறவே, அதை அப்படியே பின்பற்றி தம் இதழ்களை உருவாக்கி இருக்கிறார்கள். சினிமா போல், சக்ஸஸ் ஃபார்முலாவை அப்படியே மறுமுறை பயன்படுத்திப் பார்க்கிறார்கள். ஒரு இடத்தில் வெற்றி பெற்றது மற்றொரு இடத்திலும் வெற்றி பெற வேண்டும் என்ற எதிர்பார்ப்பு நியாயம்தானே?
இந்த வெற்றி ஃபார்முலா என்ன? இதற்கு முன்பு பெண்கள் இதழ்களுக்கான வேறு வெற்றி ஃபார்முலா இருந்ததுண்டா? அதற்கு ஏதும் வழித்தோன்றல்கள் உண்டா? இந்த குறிப்பிட்ட ஃபார்முலா மட்டும் சட்டென ஏன் இவ்வளவு முக்கியத்துவம் பெறுகிறது?
அவள் விகடனுக்கு முன்பு உருவாக்கப்பட்ட வெற்றி ஃபார்முலா என்றால் அது மங்கையர் மலர் ஃபார்முலா தான். அப்போது அதன் ஆசிரியராக இருந்த மஞ்சுளா ரமேஷ் இந்த வெற்றி ஃபார்முலாவை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகித்திருக்க வேண்டும். ஒரு கட்டத்தில், அவர் மங்கையர் மலரை விட்டு வெளியேறி சினேகிதி (குமுதம் சிநேகிதி வேறு) என்ற இதழைத் தொடங்கி நடத்தி வருகிறார். சினேகிதி இதழில் மங்கையர் மலரின் தாக்கம் அதிகம் இருக்கும். அதன் உள்ளடக்கம், வடிவமைப்பு, எழுதும் முறை என்று அனைத்திலும் இந்தத் தாக்கத்தைப் பார்க்க முடியும்.
சொல்லப்போனால், இந்த மங்கையர் மலர் வெற்றி ஃபார்முலாதான் பல ஆண்டுகள் சந்தையில் கோலோச்சிக்கொண்டு இருந்தது. இன்னும் இருக்கிறது. எந்த வீட்டுக்குப் போனாலும் நிச்சயம் அங்கே மங்கையர் மலரைப் பார்த்திருக்கிறேன். அதைப் பொக்கிஷம் போல் பல ஆண்டுகள் பாதுகாத்து வைத்து வரும் குடும்பங்களும் உண்டு. இதற்கு மாற்றாக அல்லது இணையாகவேனும் மற்றொரு வெற்றி ஃபார்முலா கண்டுபிடிக்கப்படாமல் இருந்தது. அவள் விகடன் கடந்த பத்து ஆண்டுகளாக உருவாக்கி, திருத்தி, செம்மைப்படுத்தி, மேம்படுத்தி மற்றொரு வெற்றி ஃபார்முலாவை உருவாக்கியது. இன்று பல வீடுகளில் இரண்டு இதழ்களும் வாங்கப்படுகின்றன.
மேலும் பல பெண்கள் இதழ்கள் சந்தையில் கிடைக்கின்றன. லேடீஸ் ஸ்பெஷல், குமுதம் சிநேகிதி, தங்க மங்கை என்றில்லாமல், தினசரிகளும் பெண்கள் இணைப்பிதழ்களும் வெளியிடுகின்றன. இணைப்பிதழ்கள் பெரிய அளவில் பெண்களிடையே கவனம் பெறுவதில்லை. அதன் உள்ளடக்கம் சிரத்தையாக உருவாக்கப்படாமையே இதற்குக் காரணம்.
தமிழ் பெண்கள் இதழ்களைப் பொறுத்தவரை இரண்டு முக்கிய பள்ளிகள் இருக்கின்றன: ஒன்று மங்கையர் மலர் வழி, இன்னொன்று அவள் விகடன் வழி.
இரண்டுக்கும் உள்ள ஒற்றுமை வேற்றுமைகள்தான் சுவாரசியமானது.
அடிப்படையில், அவள் விகடன் 28 – 35 வயதுடைய அலுவலகம் போகும் பெண்களை முன்னிலைப்படுத்தி பேச, மங்கையர் மலர் 40+ பெண்களுக்கான விஷயங்களைப் பேசுகிறது. இரண்டிலும் தாய்மைக்கான அம்சங்கள் இருந்தாலும், மங்கையர் மலரில் அதன் அளவு கொஞ்சம் அதிகமாக இருக்கும்.
மங்கையர் மலர் முன்னிலைப்படுத்தும் பெண்ணை வர்ணிக்கச் சொன்னால் இப்படித்தான் ஒருவரால் வர்ணிக்க முடியும்: வழக்கமான குடும்பத் தலைவி. படித்தவர், விவரங்கள் தெரிந்தவர், ஆனால் வேலைக்குப் போகாதவர். குறைந்தபட்சம் 15 வயதில் ஒரு பெண்ணோ பையனோ இருக்கக்கூடியவர். பழமையில் நம்பிக்கை மிகுந்தவர், நெற்றித் திலகத்துடன் புடைவை கட்டுபவர், அழகை செய்துகொள்வதில் கொஞ்சம் அக்கறை குறைவானவர்.
அவள் விகடன் பெண் எப்படி இருப்பாள்? படித்து முடித்து வேலைக்குப் போக ஆரம்பித்து இரண்டு மூன்று ஆண்டுகள் ஆகியிருக்கலாம், திருமணம் ஆகி மனதளவில் புதுக்கருக்கு கலையாமல் இருக்கலாம், சமையலை இப்போதுதான் கற்றுக்கொள்ள ஆரம்பித்து இருக்கலாம், நவீன டெக்னாலஜி சார்ந்த கருவிகளை லாவகமாக உபயோகிக்கத் தெரிந்தவர், சுடிதாரோ பிற நவீன உடைகளோ அணிவதில் ஆர்வமுள்ளவர், தன்னை அழகாக வைத்துக்கொள்ள வேண்டும் என்பது கவனம் உண்டு, பழைய கருத்துகள் அதிகம் தெரியாது, கணவர், குழந்தை என்று ஓர் அழகிய இல்லத்தை உருவாக்குவதில் நாட்டமுள்ளவர்.
இரண்டு மேஜர் கேட்டகரி பெண்களை இந்த இரண்டு பத்திரிகைகளும் தமதாக்கிக்கொண்டு இருக்கின்றன. இந்தப் பெண்களை மனத்தில் வைத்துக்கொண்டு இவ்விரு இதழ்களையும் நீங்கள் பார்த்தால், அவர்களுக்குத் தேவைப்படும் அத்தனை அம்சங்களையும் இப்பத்திரிகைகள் வழங்குவதை புரிந்துகொள்ள முடியும்.
இதனால்தான் மங்கையர் மலரில் ஆன்மிகம் சற்று தூக்கலாக இருக்கும். வரன் தேடும் விளம்பரப் பகுதி தனியாக இருக்கும். அதில் வரக்கூடிய பெண்கள் புகைப்படங்கள் எல்லாம் 35 வயதுக்கு மேற்பட்ட பெண்களின் புகைப்படங்களாக இருக்கும். இல்லை, நிறைய கோட்டோவியங்களைப் பயன்படுத்தியிருப்பார்கள்.
இதே காரணத்தினால்தான், அவள் விகடன் வாசகி, 32 பக்க சமையல் இணைப்பிதழை முக்கியமானதாகக் கருதுகிறார். ஃபேஷன் ஜுவல்லரிக்கென்றே தனி பக்கங்கள் உண்டு. மேலும் உலக நடப்புகளைத் தெரிந்துகொள்ள ஏதுவாக செய்திகளைத் திரட்டி இரண்டு பக்கங்கள் தந்திருப்பார்கள், பெண்கள் ஜெயித்த வெற்றிக் கதைகளை ஒவ்வொரு இதழிலும் கவர் ஸ்டோரியாக ஆக்கியிருப்பார்கள். ஒவ்வொரு இதழிலும் தன் தனிப்பட்ட சோகக் கதையை ஒரு பெண் எழுத, அதற்குப் பிற பெண்கள் வழிகாட்டும் பகுதியான வாசகி டைரி இதில் மிகவும் பிரபலம்.
இவ்விரு இதழ்களையும் தொடர்ந்து பார்த்து வந்தால், தமிழ் பெண்களின் ஓர் குறுக்குவெட்டுத் தோற்றம் கிடைத்துவிடும். வெகுஜன கலாச்சாரம் உருவாக்கியிருக்கும் தமிழ் பெண்ணின் பிம்பம் இவ்விரு இதழ்களிலும் முழுமையாக வெளிப்பட்டு இருக்கிறது.
இருபத்தெட்டு வயதுக்கு கீழே உள்ள பெண்கள் என்ன செய்கிறார்கள் என்று பார்த்தால், ஒன்று அவர்கள் இன்னும் பெண்கள் பத்திரிகையைப் படிக்க ஆரம்பிக்கவில்லை. கல்லூரிப் படிப்பு, வேலையில் நிலைபெறுபவது, காதலிப்பது, திருமணம் செய்துகொள்வது போன்ற வாழ்வின் முதற்தேவைகள் அங்கே கவனம் பெற்றிருக்கின்றன. அவர்கள் படிக்க ஆரம்பிக்கும்போது, முதலில் அவர்களுக்கு அணுக்கமாக இருப்பது அவள் விகடன் தான்.
அதேபோல் 33 – 35 வயதைக் கடந்த பெண்கள், மெல்ல மங்கையர் மலரை நோக்கி முன்னேறத் தொடங்குகிறார்கள். திடீரென்று, அவர்களுக்கு அவள் விகடன் போதாமல் போய்விடுகிறது. படிக்க ஒன்றுமே இல்லை என்ற எண்ணம் தோன்றிவிடுகிறது. 40க்குப் பின் 60 – 70 வயது வரை உள்ள பெண்களுக்கு மங்கையர் மலர் முக்கியமான இதழாக தெரிகிறது. குடும்ப மதிப்பீடுகள், பண்பாடு, கலாச்சாரம் போன்ற பிடிப்புகளின் மேல் அவர்களின் கவனம் குவியத் தொடங்க, மங்கையர் மலர் அந்த எண்ணத்தை எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்து வருகிறது.
இந்த வயது வித்தியாசமே, இருபத்திரிகைகளின் எழுதும் முறையையும் வித்தியாசப்படுத்திக் காட்டுகின்றன. மங்கையர் மலர் எழுதும்முறை ஒருவித அமரிக்கையான, நிதானமான தொனியோடு இருக்க, அவள் விகடன் மொழியோ இன்னும் இளமையாக இருக்கும். துணுக்கின் தன்மை அதிகம் இருக்கும். நீண்ட பத்திகளாக இல்லாமல், சின்ன சின்ன வாக்கியங்களில் அவளில் கட்டுரை எழுதுவார்கள்.
இரண்டு பத்திரிகைகளுமே தங்கள் உள்ளடக்கங்களை பெருமளவு நேர்த்தி செய்துவிட்டன. அதில் புதிதாக சேர்க்க்க என்று ஒன்றை இனிமேல் தான் கண்டுபிடிக்க வேண்டும். அந்த அளவுக்கு நியர் பர்பெக்ஷனுக்கு இவ்விரு இதழ்களும் வந்துவிட்டன.
இந்த நிலையில், அவள் மாதிரியே இன்னும் இரண்டு இதழ்கள் – மல்லிகை மகள், தேவதை – சந்தைக்கு வந்திருப்பதைப் பார்க்கும்போது கொஞ்சம் ஆச்சரியமாக இருக்கிறது. அவள் வாங்கும் வீடுகளில் அவள் மாதிரியே இருக்கும் இன்னொரு இதழை வாங்க மாட்டார்கள். அதே சமயத்தில் அவள் விகடனை ரீபிளேஸ் செய்யவும் தயங்குவார்கள். ரீபிளேஸ் செய்ய முடியாது என்று இல்லை. ஆனால், புதிய இதழ்களின் உள்ளடக்கம் அவ்வளவு ஈர்க்கக்கூடியதாக இருக்கவேண்டியது அவசியம்.
இன்னொரு வகையில் சொல்வதனால், இப்போது போட்டி உள்ளடக்கத்தில் இல்லை. மார்க்கெட்டிங்கில் இருக்கிறது. மக்களிடம் கொண்டு போய் சேர்ப்பதில் இருக்கிறது. மங்கையர் மலரை ஒட்டியே உருவாக்கப்பட்ட சினேகிதி, அதன் மூல இதழ் அளவுக்கு விற்பனை ஆகவில்லை. உள்ளடக்கம் மட்டும் இருந்தால் போதும், பெரிய வாசகர் கூட்டத்தை அது தானாகவே கொண்டு வந்துவிடும் என்ற நம்பிக்கை தவறானது. சினேகிதி விஷயத்தில் நடந்தது அதுதான். மார்க்கெட்டிங் முனைப்பு போதவில்லை. மல்லிகை மகள் விஷயத்தில் நடந்தது அதுதான். மார்க்கெட்டிங் பலம் போதவில்லை.
இதெல்லாம் பாடங்கள். இதழியல் மாணவனாக எனக்குள் சேமித்துக்கொண்ட விஷயங்கள். உள்ளடக்கம், மார்க்கெட்டிங் மாதிரி சுவாரசியான விஷயங்கள் எனக்குத் தெரிந்து வேறு இல்லை.
தேர்தல் நெருங்கிவிட்டது…
மார்ச் 4, 2009
பாராளுமன்றத்துக்கான தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டு விட்டன. வழக்கம்போல், மிகப் பெரிய செலவில், நமது பிரதிநிதிகளை நாம் பாராளுமன்றத்துக்கு அனுப்பி வைக்கப்போகிறோம். அதுவும் இன்று உலகெங்கும் பொருளாதாரத் தேக்கம், சரிவு ஏற்பட்டிருக்கும் நிலையில் இவ்வளவு அதிக செலவு நமக்கு தேவையா? தேர்தலை நடத்த எளிய வழி ஏதேனும் கண்டுபிடிக்கவேண்டியது அவசியம் என்று ஏன் அரசுக்குத் தோன்றவில்லையோ தெரியவில்லை.
வேட்பாளர்களும் இந்தமுறை மீண்டும் கணக்கிலடங்கா பணத்தை வாரி இறைப்பார்கள். ஒவ்வொரு வோட்டுக்கும் மதுரை திருமங்கலத்தில் கொடுத்த மாதிரி கட்டுக்கட்டாகக் கொடுக்கப் போகிறார்கள். ஓட்டுகளை வாங்கப் போகிறார்கள்.
ஏற்கனவே, தமிழக அரசு, இந்தத் தேர்தலை மனத்தில் வைத்துத்தான், வெள்ள நிவாரண நிதி என்று ஒவ்வொரு ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கும் ரூ. 2000 வழங்கியிருக்கிறது. இன்னும் ஆறாவது ஊதியக் குழுவின் பரிந்துரையை ஏற்று, அதை முழுமையாகக் கொடுப்பதற்கு முன்பு, குறிப்பட்ட தொகையை முன்பணமாகவும் அரசு ஊழியர்களுக்குக் கொடுத்திருக்கிறது.
இதெல்லாம் வெறும் சலுகைகள். ஏமாற்றுதல்கள். உண்மையான பிரச்னைகளை கடுகளவும் இந்த சலுகைகள் தீர்க்கப் போவதில்லை.
அடுத்து வரும் பதிவுகளில் நான் முக்கியமாக நினைக்கும் தேர்தல் பிரச்னைகளை ஒவ்வொன்றாக எழுத இருக்கிறேன். மீண்டும் பார்ப்போம்.