தேர்தல் நெருங்கிவிட்டது…
மார்ச் 4, 2009
பாராளுமன்றத்துக்கான தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டு விட்டன. வழக்கம்போல், மிகப் பெரிய செலவில், நமது பிரதிநிதிகளை நாம் பாராளுமன்றத்துக்கு அனுப்பி வைக்கப்போகிறோம். அதுவும் இன்று உலகெங்கும் பொருளாதாரத் தேக்கம், சரிவு ஏற்பட்டிருக்கும் நிலையில் இவ்வளவு அதிக செலவு நமக்கு தேவையா? தேர்தலை நடத்த எளிய வழி ஏதேனும் கண்டுபிடிக்கவேண்டியது அவசியம் என்று ஏன் அரசுக்குத் தோன்றவில்லையோ தெரியவில்லை.
வேட்பாளர்களும் இந்தமுறை மீண்டும் கணக்கிலடங்கா பணத்தை வாரி இறைப்பார்கள். ஒவ்வொரு வோட்டுக்கும் மதுரை திருமங்கலத்தில் கொடுத்த மாதிரி கட்டுக்கட்டாகக் கொடுக்கப் போகிறார்கள். ஓட்டுகளை வாங்கப் போகிறார்கள்.
ஏற்கனவே, தமிழக அரசு, இந்தத் தேர்தலை மனத்தில் வைத்துத்தான், வெள்ள நிவாரண நிதி என்று ஒவ்வொரு ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கும் ரூ. 2000 வழங்கியிருக்கிறது. இன்னும் ஆறாவது ஊதியக் குழுவின் பரிந்துரையை ஏற்று, அதை முழுமையாகக் கொடுப்பதற்கு முன்பு, குறிப்பட்ட தொகையை முன்பணமாகவும் அரசு ஊழியர்களுக்குக் கொடுத்திருக்கிறது.
இதெல்லாம் வெறும் சலுகைகள். ஏமாற்றுதல்கள். உண்மையான பிரச்னைகளை கடுகளவும் இந்த சலுகைகள் தீர்க்கப் போவதில்லை.
அடுத்து வரும் பதிவுகளில் நான் முக்கியமாக நினைக்கும் தேர்தல் பிரச்னைகளை ஒவ்வொன்றாக எழுத இருக்கிறேன். மீண்டும் பார்ப்போம்.
காணாமல் போகும் தி.நகர்
ஆகஸ்ட் 14, 2008
இன்று காலை [14.08.08] வெளியான இந்து நாளிதழோடு தி.நகர் மேம்பாலத் திறப்பு விழாவை ஒட்டி ஒரு விளம்பரதாரர் சப்ளிமெண்ட் வந்திருக்கிறது. பார்த்திருப்பீர்கள். அதில் முக்கியமாக கவனிக்க வேண்டியது, கீழே உள்ள வாக்கியம்தாம்:
T. Nagar plays pivotal role in the textiles and jewellery trade at an international level. It is the earnest request of our association to declare the area comprising Usman Road, North Usman Road, Nageswara Rao Road, Prakasam Road and Ranganthan Street as a ‘Special Retail Zone’ to enhance shopper’s delight.
இந்தக் கோரிக்கையை நீங்கள் வேறு பல விஷயங்களோடு இணைத்துப் பார்க்க வேண்டும்.
1. நகரின் கட்டட வரைமுறைகளை எல்லாம் மீறி, தம்முடைய இஷ்டத்துக்கு அடுக்குமாடிகளைக் கட்டிக்கொண்டே போனார்கள் வியாபாரிகள். உயர்நீதி மன்றம், அனுமதி பெறாமல் கட்டப்பட்ட பல மாடிகளை இடிக்க உத்தரவிட்டிருக்கிறது.
2. உச்ச நீதிமன்றம வரை போய் தம்முடைய கட்டடங்களைக் காப்பாற்ற முனைந்தார்கள் வியாபாரிகள். அதுவும் முடியாமல் போகவே, இப்போது முற்றிலும் வேறு ஒரு கோரிக்கையை கூட்டாக முன்வைக்கிறார்கள்.
3. மக்களுக்குச் சேவை செய்யவே இதுபோல் கட்டடங்களைக் கட்டியதாகவும், பேராசையினால் அல்ல என்று வியாபாரிகள் சங்கம் கூறியது இதே இந்து நாளிதழில் பிரசுரமாகி உள்ளது.
இதில் பிரச்னை என்ன? ஏன் அவர்களுடைய கோரிக்கையில் உள்ள குற்றம் என்ன என்று கேட்பவர்களுக்கு:
1. தி.நகர் என்பது பொதுமக்கள் வாழும் இடம். அது வணிகத் தலம் அல்ல. ஆனால், பணபலத்தாலும் ஆள் பலத்தாலும் ஆட்சி பலத்தாலும் பனகல் பூங்காவை ஒட்டி உள்ள அத்தனை இடங்களையும் வியாபாரிகள் ஆக்கிரமித்துக் கொண்டு இருக்கிறார்கள். அதனால் நேர்ந்தது என்ன? போக்குவரத்து நெரிசல், அசுத்தம், மாசு, நோய்கள். வியாபாரிகள் பணம் சம்பாதிக்க, பொதுமக்கள் திண்டாட வேண்டுமா என்ன?
2. யார் கொடுத்த தைரியத்தில் இவர்கள் மாடி மேல் மாடி கட்டி விண்ணை முட்டவிட்டார்கள்? பொதுமக்கள் வாழும் நகரம் என்று தெரிந்தும் தைரியமாக கட்டட வரைமுறைகளை மீறி கட்டடம் எழுப்பத் தூண்டியது எது? பேராசைதானே? மக்கள் சேவை என்பது வெறும் பம்மாத்து அல்லாமல் வேறு என்ன?
3. செய்தது தவறு. அதற்கு நீதிமன்றம அனுமதிக்கவில்லை என்று தெரிந்தவுடன், தங்கள் கட்டடங்களைக் காத்துக்கொள்ள சட்டென அந்த முழு இடத்தையும் ஸ்பெஷல் எகனாமிக் சோன் மாதிரி ஸ்பெஷல் ரீடெயில் சோன் என்று அறிவிக்கக் கோருகிறார்கள். இப்படி ஒரு அந்தஸ்து அந்த ஏரியாவுக்குக் கிடைக்குமானால், அதில் அவர்கள் முற்றும்முழுவதும் குளிர்காய வசதியாக இருக்கும் என்ற எதிர்பார்ப்புதானே?
4. அப்படியே ஒரு ஸ்பெஷல் ரீடெயில் சோன் வேண்டும் என்று விரும்புவார்களாயின், அதற்கான முன்னுதாரணங்களைப் பின்பற்றவேண்டியதுதானே? கொத்தவால்சாவடி, கோயம்பேடு போனதுபோல், பிராட்வே பஸ்நிலையம் கோயம்பேடு போனதுபோல், எல்லாரும் வந்துபோக ஏதுவாக, சரியான அனைத்து வசதிகளோடு கூடிய மாற்று இடத்துக்குச் செல்வதுதானே நியாயம்?ஆனால், அதைச் செய்ய மாட்டார்கள்.
5. ஒவ்வொரு துறையினரும் இதுபோல் தாம் இருக்கும் இடங்களையே ஸ்பெஷல் சோன் ஆக்க கேட்டால், அரசு ஏற்றுக்கொள்ளுமா? தி.நகரில் பதிப்பாளர்கள் நிறைந்திருக்கிறார்கள். ஸ்பெஷல் பப்ளிஷர்ஸ் சோன் கேக்கலாமா? என்.எஸ்.சி.போஸ் சாலையை என்னவென்று அழைக்கலாம்? தேவராஜ முதலி தெருவை ஸ்பெஷல் கண்ணாடி சோன் என்று அழைக்கலாமா? பந்தர் தெருவை ஸ்பெஷல் பேப்பர் சோன் ஆக்கலாமா?
6. ஒரு இடத்தில் ஒரு குறிப்பிட்ட தொழில் மையம் கொள்வது தவிர்க்கமுடியாத விஷயம். ஆனால், நகரின் மொத்த கட்டுமானத்துக்குள், அதன் வசதிகளுக்குள், அதனை ஒட்டி உள்ள மக்களின் வாழ்வுக்கு இணையவே தொழில் நடக்க முடியுமே தவிர, தி. நகர் மாதிரி ராட்சத்தனமாக, பேராசையின் பெருங்கனவாக வளர அனுமதித்ததே தவறு. ராட்சத்தனமாக வளர்ந்துவிட்டதால், அது தனக்கு இன்னும் வேணும் இன்னும் வேணும் என்று பகாசுரத் தீனியைக் கேட்கிறது.
இன்று மாலை, கலைஞர் தி.நகர் மேம்பாலத்தைத் திறந்துவைத்து பேசுகிறார். என்ன சொல்கிறார் என்று பார்ப்போம்.
விமானத்துள் இதழ்கள்
ஆகஸ்ட் 6, 2008
இந்தியாவில் செயல்படும் ஒவ்வொரு விமான சேவை நிறுவனமும், இன் ஃபிளைட் மேகசின் நடத்துகின்றன. மிக அழகிய அச்சு, நல்ல தாள், வண்ணம், உருவாக்கம் என்று திறமையான தயாரிப்பு. கையில் பிடிக்கவே அழகாக இருக்கிறது.
உள்ளடக்கம், உயர் மத்தியதர வர்க்கத்தை மையப்படுத்தியே கொடுக்கப்படுகின்றன. உடைகள், ஆபரணங்கள், ஓட்டல்கள், ரிசார்ட்டுகள், ஸ்பா, அல்லது பயண அனுபவங்கள். பல பக்கங்களைத் தள்ளிக்கொண்டே போய்விடலாம். கஷ்டப்படுத்தாத லைட் ரீடிங் உள்ளடக்கம்.
என் பக்கத்தில் உட்காருபவர்கள் பெரும்பாலும் இதழைத் தொட்டுக்கூட பார்க்க மாட்டேன் என்கிறார்கள். அப்படியே பிரித்துப் பார்ப்பவர்களும் மேய்கிறார்கள், புரட்டிக்கொண்டே போகிறார்கள்.
எவ்வளவு சுலபமான கேப்டிவ் ஆடியன்ஸ்? விமானத்தில் உட்காரும் ஒவ்வொருவரும் அவர் இறங்கும்வரை – அது அரை மணியாக இருக்கலாம், 3 மணி நேரமாகவும் இருக்கலாம் – வேறு ஒன்றையுமே செய்ய முடியாது. சட்டென புற உலகில் இருந்து துண்டிக்கப்பட்ட தருணம் இது. இதில் உருப்படியாக இதழைத் தயாரித்துக்கொடுத்தால், எவ்வளவு நன்றாக இருக்கும்?
சில விமானங்களில் தினசரிகள் உண்டு. லோ-காஸ்ட் ஏர்லைன்களில் அதுவும் இல்லை. இந்த இதழ்தான் உண்டு. ஏதோ ஒரு ஏர்லைனில், பிசினஸ் வேர்ல்டு இதழையும் இன்னொன்றில் வீக் இதழையும் பார்த்தேன்.
இதில் சிக்கல் எங்கே தெரியுமோ? இந்த விமான இதழ்களைத் தயாரிக்கும் பணியை விமான நிறுவனங்கள் அவுட்சோர்ஸ் செய்து இருக்கின்றன. எனக்குத் தெரிந்து மும்பையில் இருக்கும் மூன்று நிறுவனங்களே எல்லா இதழ்களையும் தயாரித்துக் கொடுக்கின்றன. இவையெல்லாம், காண்ட்ராக்ட் பப்ளிஷிங் நிறுவனங்கள். எடிட்டோரியல், விளம்பரத் துறை, அச்சு என் எல்லாவற்றையும் செண்ட்ரலைஸ் செய்து வைத்து இருக்கின்றன.
முன்னணி இதழ்களோ, தினசரிகளோ இந்த காண்ட்ராக்ட் பப்ளிஷிங் தொழிலில் இறங்கத் தயாரில்லை போல் இருக்கிறது. விளைவு, இதுபோல் அரைகுறை இதழ்களே படிக்கக் கிடைக்கின்றன.
இதில் உள்ளடக்கத்தை விட விளம்பர வருவாயே முக்கியமாகக் கருதப்படுகிறது. மேலும், உள்ளடக்கம் பற்றி விவரம் தெரிந்தவர், எல்லா விமான சேவை நிறுவனத்திலும் இருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை இல்லையா?
வேறு எங்கோ இதைப் படித்தேன். கத்தார் ஏர்வேஸ் என்று ஞாபகம். விமானத்தின் உள்ளே வைக்கப்படும் பத்திரிகை, இதழ்கள், விவர அட்டைகளை எல்லாம் நீக்கினார்களாம்; விமானத்தின் எடையில் ஒரு டன் குறைந்துவிட்டதாம். இப்போ, எல்லாவற்றையும் சீட் முன்னே இருக்கும் டிஜிட்டல் திரையில் படிக்க ஏற்பாடு செய்துவிட்டார்கள்.
விமானத்துள் உள்ளடக்கம் மேம்பட, இதுவும் ஒருவழியாக உருவாகலாம்.
ஏராளமான சிறுபத்திரிகைகள்
ஆகஸ்ட் 5, 2008
சமீத்திய சென்னை பயணத்தின் போது, தி.நகரில் உள்ள நியூ புக்லேண்ட்ஸ் சென்றிருந்தேன். புக்லேண்ட்ஸ் விரிவாக்கப்பட்டு நிறைய நூல்களுக்கு இடம் கொடுக்கப்பட்டிருக்கிறது. எத்தனை நூல்கள், எத்தனை இதழ்கள்.. அப்பப்பா.. சட்டென தமிழ்ப் பதிப்புலகம் வீறுகொண்டு எழுந்துவிட்டதோ என்று ஆச்சரியப்படுத்தும் விதத்தில் கடை முழுக்க நூல்கள்.
நான் வாங்கிய சிறு பத்திரிகைகள்:
யுகமாயினி, உயிர் எழுத்து, மணல் வீடு, மணல் புத்தகம், நிழல், புதிய விசை, புத்தகம் பேசுது, விருட்சம், உயிர்மை, காலச்சுவடு, புதிய பெண்ணியம், புதிய பார்வை.
என்னை பெரும் மகிழ்ச்சிக்குள் ஆழ்த்திய விஷயம், இந்த இதழ்களில் நிறைய சிறுகதைகள் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக யுகமாயினி, உயிர் எழுத்து இதழ்கள் நல்ல சிறுகதைகளுக்கு இடம் கொடுக்கின்றன.
இது ஒரு சக்கரம். இலக்கியத்தில் இருந்து தொடங்கி, வேறு பல அறிவுத் துறைகள் எல்லாம் போய்விட்டு, மொழிபெயர்ப்புகளுக்கும் போய்விட்டு, மீண்டும் படைப்பு இலக்கியத்துக்கு வந்து சேர்ந்திருக்கின்றன சிறு பத்திரிகைகள். பல புதிய பெயர்கள் தென்படுகின்றன. படித்துவிட்டுச் சொல்கிறேன்.
விற்பனை பெருகியிருக்கிறதா என்று தெரியவில்லை. சிறுபத்திரிகையிலேயே (அல்லது இடைநிலை இதழ்களில்) அதிகம் விற்பனை ஆவது காலச்சுவடு இதழ்தான் என்று நினைக்கிறேன். 8000 பிரதிகள் விற்பனை ஆவதாகக் கேள்விப்பட்டேன். மற்ற புதிய இதழ்கள் 1000 – 2000 பிரதிகள் விற்பனை ஆகுமோ என்னவோ? 300 -500 இதழ்கள் விற்ற நிலையில் இருந்து பார்க்கும்போது, இது நல்ல வளர்ச்சிதான். ஆனால், சஸ்ட்டெயின் பண்ண முடியுமா என்று தெரியவில்லை.
படைப்பு இலக்கியத்துக்கு மீண்டும் மவுசு வந்திருப்பது கண்டு எனக்கு பெரு மகிழ்ச்சியே.
யூத்ஃபுல் விகடன்
ஆகஸ்ட் 5, 2008
ஆனந்த விகடனின் புதிய அவதாரம், ஆல் நியூ யூத்ஃபுல் விகடன். பெரிய சைஸில்
ஒன்றும், சின்ன சைஸில் ஒன்றுமாக இரண்டு விகடன்கள், இனி வாராவாரம். விலை
ரூ.15 ( ரூ. 10 இல் இருந்து ரூ.15 ஆகிவிட்டது).
புதன்கிழமை மாலை இதற்கான வெளியீட்டு விழா, சென்னை லீ ராயல் மெரிடியனில்
நடந்தது. அடியேனை விகடன் நிர்வாக இயக்குநர் அழைத்திருந்தார். மாலை
7.30க்கு நிகழ்ச்சி தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டு, தொடங்குபோது மணி
8.15ஐ நெருங்கி இருந்தது. சோ ராமசாமி, நக்கீரன் கோபால், தயாநிதி மாறன்,
ஹிந்து ராம் போன்றோர் முன்வரிசையில் அமர்ந்திருந்தனர். சோவும் ராமும்
ரொம்பநேரம் நின்றுகொண்டே பேசிக்கொண்டு இருந்தார்கள்.
ஒளிவிளக்குகள் நிறைந்த மேடை. இரண்டு பக்க புரஜக்டர் ஸ்கிரீன்களிலும்,
ஆ.வி. எப்படி காலத்திற்கேற்ப மாறிக்கொண்டே வந்திருக்கிறது விளக்கும்
குறும்படம். ஆ.வி. அட்டைகளை வைத்தே, பின்னணியில் அவ்வக்காலப் பாடல்களை
ஓடவிட்டு, குறும்படம் தயாரிக்கப்பட்டிருந்தது.
நிகழ்ச்சி தொடங்கியது. நான்கு அழகிய பெண்களும் நான்கு ஆண்களும்
கண்ணாமூச்சி ஏனடா என்ற பாடலுக்கு மேடையில் நடனம் ஆடத் தொடங்கினார்கள்.
அடுத்து அடுத்து இன்னும் இரண்டு பாடல்களுக்கு ஆடி முடித்தார்கள்.
பின்னர் மீண்டும் ஸ்கிரீன்களில் எப்படி மாற்றம் தவிர்க்கமுடியாதது என்று
பல்வேறு துறைகளில் இருந்து விளக்கிக்கொண்டே வந்தவர்கள், இப்போது ஆ.வியும்
“ஆல் நியூ யூத்ஃபுல்” விகடனாக மாறியிருப்பதைத் தெரிவித்தார்கள். மேடையின்
நடுவே இருந்த ஒரு பலகை திரும்பி, சென்ற வார ரஜினி – பசுபதி கவரில்
இருந்து இந்த வார இரட்டை விகடனுக்கு மாறியது.
மீண்டும் ஒரு பாடல், நடனம்.
அப்புறம், விகடன் எம்.டி. பா.சீனிவாசன் மேடை ஏறினார். சிக்கனமான உரை.
இளமை என்பதூ ஒரு மனநிலை, அதை வயதை வைத்துக் கணக்கிட முடியாது. இந்த புதிய
விகடன், இளைஞர்களுக்கு, இளைஞர்களால் உருவாக்கப்படும் விகடன் என்றார்.
உடனே அரங்குக்கு வந்திருந்த அனைவருக்கும் ஒரு வெள்ளை பையில் விகடன் செட்
போட்டுத் தரப்பட்டது.
அதைத் தொடர்ந்து காக்டெயில், டின்னர். பின் வந்தவர்கள் கிளம்பி,
தங்கியவர்கள் தள்ளாடி முடிய விடிகாலை மணி இரண்டு.
******
மிகவும் தைரியமாக ரிஸ்க் எடுத்து இருக்கிறார் பா.சீனிவாசன்.
பொதுவாக பத்திரிகைகள் பற்றி நடத்தப்பட்ட பல்வேறு சர்வேக்கள் ஒரே ஒரு
விஷயத்தைத்தான் திரும்பத் திரும்பச் சொல்கின்றன: இளைஞர்கள் இதழ்களை
வாங்குவதில்லை. அவர்களது கனவுகளும் தேவைகளும் முற்றிலும் மாறிவிட்டன.
அவர்களுக்கு முன்பெல்லாம் அரசுமேல் கோபம் இருந்தது உண்டு. இன்று அரசைப்
பற்றியோ அரசியலாளர் பற்றியோ அக்கறையே இல்லை.
தான் உண்டு, படிப்பு உண்டு, வேலை வாய்ப்பு உண்டு, முன்னேற்றம் உண்டு,
காதல் உண்டு, இதையெல்லாம் தக்கவைத்துக்கொள்ள கடவுளின் மேல் பக்தியும்
உண்டு. இவர்களுடைய சைக்காலஜியைப் புரிந்துகொண்டு இதழ்களை உருவாக்கவே
முடியவில்லை. மேலும் ஆங்கிலத்திலும் இவர்களது தேவைகளை பகுதி
பகுதியாகத்தான் நிறைவேற்றுகிறார்களே அன்றி, முழுமையாக நிறைவேற்றக்கூடிய
ஒரே இதழ் என்பதும் இல்லை. விளையாட்டுக்குத் தனி இதழ், ஃபேஷனுக்கு தனி
இதழ், ஃபிட்நஸுக்கு தனி இதழ்.
இன்றைய இளைஞன் பயங்கர காப்ளிகேட்டானவன். இவனது முன்னுரிமைகள்
மாறிப்போய்விட்டன. தேசியமோ, கம்யூனிசமோ, லட்சியவாதமோ ஏதேனும் ஒன்றுகூட
இவர்களை இணைக்கும் கண்ணியாக இல்லை. பயங்கரமாகப் பிரிந்து இருக்கிறார்கள்.
இப்படிப்பட்ட பின்னணி கொண்ட இளைஞர் குழுவுக்கு ஆ.வி.யின் தன்மையே மாற்றி
அமைத்து, அவர்களது ஆர்வங்களுக்கு இடம்கொண்டுக்க முடியும், அதன் மூலம்
ஆ.வி.யை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு போக முடியும் என்று நினைத்து,
இப்போது அதைச் செயல்படுத்தியும் காட்டி இருக்கும் சீனிவாசன் உண்மையில்
தொலைநோக்கு கொண்டவர்தான்.
இதில் வெற்றி கிடைத்தால், இன்னும் முப்பது ஆண்டுகளுக்கு ஆ.வி.
கொண்டாடப்படும், நினைக்கப்படும், எதிர்பார்க்கப்படும். வெற்றி தவறினாலோ,
என்னாகும் என்று சொல்வதற்கு இல்லை.
*****
எல்லா பெரிய தமிழ்ப் பத்திரிகைகளும் ஒரு குறுக்குச் சாலைக்கு வந்து
நிற்கின்றன. அவர்களோடு வளர்ந்த தலைமுறை இன்று வழுக்கைத் தலையர்களாகி,
மெல்ல மெல்ல இறைவனடி சேர்ந்தும் கொண்டு வருகிறார்கள். ஒவ்வொரு முறையும்,
இதுபோன்ற இதழ்கள் தங்கள் தோலை உரித்துப் போட்டுவிட்டு,
புத்துணர்ச்சியுடன் கிளம்ப வேண்டி இருக்கிறது.
எனக்குத் தெரிந்து 1997 அக்டோபரோ / நவம்பரோ மாதத்தில், ஆ.வி இதுப்போல்
ஒருமுறை புது உணர்வு பெற்றது. அதுவரை நவீன இலக்கியம் பக்கம் அதிகம்
தலைவைக்காத ஆ.வி. சட்டென அனைத்து நவீனர்களையும் அரவணைத்துக்கொண்டு புதிய
முகமும் பொலிவும் பெற்றது.
அதேபோல் மீண்டும் புதுப் பொலிவு பெற்ற மற்றொரு தருணம், 2006 ஏப்ரல்
புத்தாண்டு இதழ். எப்போதும் விற்கும் கவர்ச்சி, கும்மாளம் போன்றவற்றை
விட்டுவிட்டு, மிகவும் சீரியஸ்ஸான விஷயங்களைப் பேசத் தொடங்கியது.
சென்ற பல சமயங்களில் நடைபெற்ற மாற்றங்கள் அனைத்தும் பொதுவாக இதழ்கள்
வாங்கும் 30+ / 35+ வாசகர்களை மனத்தில் வைத்தே செய்யப்பட்டன. ஆனால்,
இம்முறை இன்னும் தைரியமாக 20+ வாசகர்களை மனத்தில் கொண்டு
செய்யப்பட்டிருக்கிறது.
*****
இதழ்கள் இரண்டையும் படித்துவிட்டேன். இளைஞர்களுக்கான பெரிய விகடனில்
க.சீ.சிவகுமார், நாஞ்சில் நாடன், தமிழச்சி போன்ற இலக்கியவாதிகள் தலை
தென்படுகிறது. இதில் அதிகம் கை வைக்கவில்லை.
மற்ற எல்லா பக்கங்களிலும் பேசும் மொழி, விளி, நடை, உள்ளடக்கம் என்று
அனைத்தும் முற்றிலும் வேறோர் தொனியையும் கொண்டாட்டத்தையும் கொண்டு
இருக்கின்றன. லே-அவுட், டிசைன் அம்சங்களும் நிறைய மாற்றமடைந்திருக்கிறது.
வெகுஜன ஊடகமாக இளைஞர்களை சென்றுசேர அனைத்து அம்சங்களும் சேர்க்கப்பட்டு
இருக்கின்றன. காண்டன் மிக்ஸ் மிகச்சரியாக இருக்கிறது.
சின்ன இதழ் ரீப்ரிண்ட் விகடன் மாதிரி இருக்கிறது. பழைய விஷயங்களை நிறைய
மறு பதிப்பு செய்திருக்கிறார்கள். இணையத்தில் இருக்கும் பழைய
தலைமுறையினர் இதனை நிச்சயம் வரவேற்பார்கள். வெளியில் காசுகொடுத்து
வாங்கும் புதிய தலைமுறை இதனை எவ்வளவு தூரம் ரசிக்கும் என்று தெரியவில்லை.
விகடனைச் சேர்ந்தவர்கள் எல்லோரும் புதுப்படம் ரிலீஸ் செய்துவிட்டு,
ரிசல்டுக்குக் காத்திருக்கும் தயாரிப்பாளர் மூடில் இருக்கிறார்கள்.
வழக்கம்போல், வெகுஜன வாசகர்கள் எப்படி இதை எடுத்துக்கொள்ளப் போகிறார்கள்
என்பது இனிமேல்தான் தெரியும்.
பிரம்மராஜன் வலைப்பதிவு எழுதுகிறார்
ஜூன் 4, 2007
இன்று வலையில் என்னவோ தேடிக்கொண்டு இருந்தபோது, கவிஞர், மொழிபெயர்ப்பாளர் பிரம்மராஜனின் ஆங்கில வலைப்பதிவு தென்பட்டது.
மஞ்சள் வெயில் – விமர்சனம்
ஜூன் 3, 2007
தமிழில் காதல் நாவல்கள் மிகவும் அருகிவிட்ட நிலையில், யூமா வாசுகியின் மஞ்சள் வெயிலையும், ஜெ.பிரான்சிஸ் கிருபாவின் கன்னி நாவலையும் படியுங்கள் என்று நண்பர்கள் பரிந்துரைத்தார்கள்.
மஞ்சள் வெயில் 132 பக்கமுள்ள நாவல். கதிரவன் என்ற ஓவியன் / எழுத்தாளனின் ஒருதலைக் காதலைப் பேசும் நாவல் இது. தினச்செய்தி என்ற பத்திரிகை அலுவலகத்தில் பணிபுரியும் பெண் ஜீவிதா. அவள், கதிரவன் ஓவியங்களின் வாசகி. அதைத் தெரிந்துகொண்டு, ஜீவிதாவோடு மனதளவில் காதல் கொள்ள முயலும் கதிரவன் கதை இது.
நாவல் முழுவதும் கதிரவன், ஜீவிதாவுக்கு எழுதும் கடிதம் போன்றே அமைக்கப்பட்டிருக்கிறது.
இதில் கதிரவன் ஒரு introvert. தனனையே நொந்துகொள்ளும் தன்மையுடையவன். நாவல் முழுவதும் ஒருவிதத் தனிமைப் பினாத்தல் எக்கச்சக்கமாக இருக்கிறது. கதிரவன் இரண்டு மூன்று வேலையைத்தான் நாவல் முழுவதும் அதிகம் செய்கிறார்: ஒன்று கடற்கரைக்குப் போய், கடலோடும் மணலோடும் மனத்தாங்கலைப் பகிர்ந்துகொள்கிறார். இரண்டு, அங்கே போவதற்கு முன்பு மறக்காமல் குடித்துவிடுகிறார்.
இந்த நாவலை எப்படி அணுகவேண்டும் என்று எனக்குத் தெரியவில்லை. தனிமையும் சுயவெறுப்பும் மிகுந்த loner ஒருவனின் கதை இது. அப்படியானால், இதை பரிதாபத்தோடு அணுகவேண்டுமா? தான் தனி, உலகம் தனி என்று விலகியிருப்பது அல்லது உலகியலோடு ஒட்டமுடியாமல் இருப்பதை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?
இந்த நாவலில் இரண்டு அம்சங்கள் பாராட்டுக்குரியன: கான் சாகிபு என்றொரு சின்ன பாத்திரம் வருகிறது. மிக அழகான மனத்தை நெருடும் பாத்திரம் அது. இரண்டு, சந்திரன் என்றொரு பத்திரிகை உதவி ஆசிரியர் வருகிறார். அதிகம் மது குடித்தபின், ஒரு இரவு எப்படி கதிரவனை அவர் சமாதானப்படுத்த முடியாமல் தவிக்கிறார் என்றொரு காட்சி வருகிறது. மிக அழகாக உருவாக்கப்பட்ட காட்சி அது.
மிக எளிமையான காதல் கதை. ஆனால், அதீத தனிமையையும் தேவையற்ற வார்த்தைச் சிடுக்குகளையும் வலிந்து திணித்து, அதற்கு ஒரு தீவிரத்தன்மையை உருவாக்க ஆசிரியர் முனைந்திருப்பதாகவே தோன்றுகிறது.
ஒரு நாவலாக எனக்கு இந்தப் படைப்பு அவ்வளவாக திருப்தி தரவில்லை.
வெளியீடு: அகல், 342, டி.டி.கே. சாலை, சென்னை 14, தொ.பே: 28115584.
விலை: ரூ.65.00
எப்படி புத்தகம் எழுத வேண்டும்?
ஜூன் 2, 2007
என்னிடம் பேச வரும் பலரிடம் எழுதும் ஆர்வம் இருப்பதைப் பார்க்கிறேன். அது ஒரு பெரிய வேலையா என்ன என்ற ஒருவிதமான சுலபமாக எடுத்துக்கொள்ளும் தன்மையும் இருக்கிறது. அப்படி பேச வருகிறவர்கள், பத்திரிகைகளில் நிறைய கட்டுரைகளை எழுதி இருப்பார்கள். அதனால் புத்தகம் எழுதுவது மிகவும் லகுவான வேலை என்று நினைத்துக்கொண்டு இருக்கிறார்கள்.
பொறுமையாக நேரம் செலவிட்டுப் பேசத் தொடங்கும்போதுதான், புத்தகம் என்று எதைச் சொல்கிறோம், அதை எழுத எப்படி அணுக வேண்டும், சிந்திக்க வேண்டும், உழைக்க வேண்டும் என்றெல்லாம் புரியத் தொடங்குகிறது. இதனால் நான் கண்ட பலன்கள் இரண்டு: அடுத்த முறை என்னைப் பார்க்கவே வரமாட்டார்கள். பார்த்தாலும், எழுதணும்னு நினைச்சேன், டைமே இல்ல சார் என்பார்கள்.
புத்தகம் எழுதுவதைப் பற்றி பல தவறான அபிப்பிராயங்கள் இருக்கின்றன. அதில் இருந்துதான் இத்தகைய எதிரிவினைகள் ஏற்படுகின்றன. முக்கியமானவை:
1. ஆரம்பத்தில் இருந்து கடைசி வரை என்ன சொல்லப் போகிறோம் என்ற தெளிவு புத்தகம் எழுதத் தொடங்கும் முன்பே இருக்க வேண்டும். விரிவாக யோசிக்கத் தெரியவேண்டும். எழுத எடுத்துக்கொண்ட விஷயத்தின் பல்வேறு முகங்களை பார்க்கத் தெரியவேண்டும்.
2. தனக்கான நோக்குநிலை என்ன என்பதைப் பற்றியும் தெளிவு வேண்டும். எந்த ஒரு ஸ்டாண்ட்டும் எடுக்காமல், உள்ளது உள்ளபடி தெரிவிக்க விரும்பினாலும் அதுவும் ஒரு நோக்குநிலைதான். இந்த நோக்குநிலை தடுமாற்றமில்லாமல் இருந்தால்தான், எழுத்தின் பின்னணியில் இயக்கும் தொனி சீராக இருக்கும்.
3. அதிரடி வாக்கியங்கள், வெறும் அனுமானத்தின் பேரில் எழுதப்படும் வாக்கியங்கள் எல்லாம் எவை என்பதைப் பற்றிய தெளிவு வேண்டும். இப்படிப்பட்ட வாக்கியங்களைப் பயன்படுத்தும் முன்பு, அதற்கான உரிய ஆதாரமோ, ஆவணங்களோ இருக்கிறதா என்று உறுதி செய்துகொள்ள வேண்டும்.
4. மிகவும் பொறுமை வேண்டும். பத்திரிகை கட்டுரை எழுதுவதில் காட்டக்கூடிய வேகம் இதற்கு எடுபடாது. அத்தியாயம் அத்தியாயமாக, ஒரு செடி வளர்ந்து தழைப்பதைப் போல், ஒரு புத்தகம் வளர முடியும். திட்டமிடலும், தொடர்ந்த உழைப்பும் மிக மிக அவசியம். எழுத எழுத மாளவே மாள மாட்டேன் என்கிறதே என்று எரிச்சல் எரிச்சலாக வரும். புத்தகத்துக்கு இந்த எரிச்சல் எதிரி.
5. எழுதும்போதுதான், நாம் எடுத்துக்கொண்ட விஷயத்தில் நமக்கு இருக்கக்கூடிய தகவல் போதாமை, ஞானம் போதாமை எல்லாம் பளிச்சென்று தெரியவரும். அதுவரை ஒரு விஷயத்தைப் பற்றி எல்லாம் தெரிந்ததாக நினைத்துக்கொண்டு இருந்ததெல்லாம், 50 பக்கம் தாண்டும்போதே வற்றிப்போகும். திடீர் வெறுமை படர்ந்துவிடும். நமக்கு இவ்வளவுதான் தெரியுமா? என்று நம் மேலே நமக்குச் சந்தேகம் ஏற்பட்டு விடும். இதற்கு இருக்கும் ஒரே மருந்து, எடுத்துக்கொண்ட தலைப்பு பற்றி படிப்பதும், மேலும் மேலும் படிப்பதுதான்.
6. எழுதுவதைத் தவிர எழுதுவதற்கு வேறு குறுக்கு வழியே இல்லை. எழுத்தைப் பற்றிய பிரமிப்போ, அயர்வோ ஏற்பட்டுவிட்டால், எழுத்தைப் பற்றி பகல்கனவு கண்டுகொண்டு இருக்கலாம்.
7. எழுதும் செய்தியில் நிரம்ப காதல் வேண்டும். கடனுக்குப் பேனா பிடிக்கக் கூடாது. எழுதத் தொடங்கும்போது காதல் இல்லையென்றாலும் எழுதிக்கொண்டே போகும்போதாவது அந்த ஆர்வத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும். இல்லையெனில், முடிக்கும்போது, மனத்தில் மகிழ்ச்சியோ உற்சாகமோ பூரிப்போ இருக்காது. வாங்கின கடனைத் திருப்பிச் செலுத்திய ஆசுவாசமும் நிம்மதியும்தான் இருக்கும்.
இயல்பாகவே சில பேருக்கு மேலே சொன்ன தகுதிகள் எல்லாம் இருக்கின்றன. அவர்களிடம் பிரச்னையே இல்லை. 15 நாள், 20 நாளில் ஒரு புத்தகத்தை எழுதிக் கொடுத்துவிடுவார்கள்.
மற்றவர்களுக்கு இப்போது நான் வைத்திருக்கும் ஒரே உபாயம் இதுதான்: மேலே உள்ள எதையும் அவர்களுக்குச் சொல்வதில்லை!
ஒரு செயதி பற்றி நீங்கள் எழுத விரும்பினால், அதில் என்னென்னவெல்லாம் எழுதப்படலாம் என்ற ஒரு டேபிள் ஆஃப் கண்டெண்ட் மட்டும் எழுதிக்கொண்டு வாருங்கள் என்று சொல்லி அனுப்புகிறேன். அப்புறம், அவர்களோடு ஒரு நீண்ட அமர்வு. பின்னர் ஒவ்வொரு அத்தியாயமாக எழுதிக்கொண்டு வரச்செய்தல். சின்னச் சின்ன கோல்களை உருவாக்கி அதை அடைய ஒத்துழைத்தல்.
ஒரு பதிப்பாளராக இப்படி நேரம் செலவிடுவது, என் பணியின் ஒரு பகுதியாகவே தோன்றுகிறது. எல்லாம் ரெடிமேடாக கிடைத்துவிட்டால் அப்புறம் அதில் சவாலே இல்லையே!
அட்டையின் கதை
மே 28, 2007
தமிழில் புத்தக அட்டைகளில் பெரும் மாறுதலைக் கொண்டு வந்தது ழ வெளியீடுதான் என்று நினைக்கிறேன். அல்லது அதற்கு முன்பே இது ஆரம்பித்துவிட்டதோ, தெரியவில்லை. அதுவரை, புத்தக அட்டையோ, அல்லது புத்தக வடிவமைப்போ, ஒரு தேர்ந்த ஓவியரைக் கொண்டு செய்யப்பட்டதில்லை.
லக்ஷ்மி கிருஷ்ணமூர்த்தி நடத்திய புக்வென்சர் நிறுவன நூல்களில், கலாசாகரம் ராஜகோபால் என்றொரு ஓவியரின் பங்களிப்பு பெரிய அளவில் இருந்திருக்கிறது. பின்னாளில் அவர் திருவண்ணாமலை சென்று ரமண மகரிஷியின் மார்பளவு சிலையைச் செய்துகொடுத்தார் என்று எஸ்.வைதீஸ்வரன் சொல்லியிருக்கிறார்.
ழ வெளியீடுகளில்தான் ஓவியர் ஆதிமூலத்தின் கைவண்ணம் அதிகம் மிளிர்ந்தது. அவர் ழ வெளியீடுகளின் நூல்களுக்கு அட்டை ஓவியம் வரைந்து தந்ததோடு, அவரே அதன் ஆர்ட் டைரக்டராகவும் இருந்திருக்கிறார். ஆத்மாநாம், ஞானக்கூத்தன், ஆர்.ராஜகோபாலன் போன்றவர்களுக்கு நவீன ஓவியத்தையும் நவீன இலக்கியத்தையும் ஏதோ ஒரு புள்ளியில் இணைக்கவேண்டும் என்ற அவா இருந்திருக்கிறது.
சொல்லப்போனால, கசடதபற பத்திரிகையில்தான் இதற்கான ஆரம்பம் ஏற்பட்டது. அதுநாள் வரை இருந்த புத்தக வெளியீடுகளில் ஒரு ஓவியம் அட்டைப் படத்தை அலங்கரிக்கும். அல்லது வெறும் எழுத்துகள் பளிச்சிடும். கட் கலர் அட்டைப் படங்கள்தான் பெரும்பாலும். அந்தக் காலத்தில் இன்று இருக்கும் வசதிகள் இல்லாததால், பிளாக் எடுத்து, ஒவ்வொரு கலராக ஓட்டி, புத்தக அட்டை தயார் செய்வார்கள்.
தொழில்நுட்பம் எல்லாவற்றையும் எளிமைப்படுத்தியிருப்பது உண்மை.
தொண்ணூறுகளில், ஆதிமூலத்தின் தொடர்ச்சியாக ஓவியர் மருது பெரிய அளவில் தமிழ் புத்தகங்களின், தலைப்பு எழுத்துகளின் தலையெழுத்தை நிர்ண்யித்தார். வித்தியாசம் என்ற பெயரில், எல்லா நூல்களும் இந்தக் கோணல்மாணலான எழுத்துகளைத் தாங்கி வெளிவந்தன. அன்னம், அகரம் ஆகிய பதிப்பகத்தின் நூல்கள் இத்தகைய அட்டைகளைக் கொண்டு இருந்தன. நர்மதா பதிப்பகமும் தமது நாவல் புத்தகங்களுக்கு இத்தகைய ஓவியங்களைப் பயன்படுத்தின.
ஆனால், இந்தப் புதுமையை ஏற்காதவர்களும் நிறையவே தமிழ்ப் பதிப்புலகில் இருந்திருக்கிறார்கள். தீபாவளி, பொங்கல் வாழ்த்து அட்டை ஓவியங்கள், புகைப்படங்களையே அட்டைப் படஙக்ளாக வைத்தவர்கள் நிறைய பேர்.
முகப்பு அட்டை என்பது புத்தக உள்ளடக்கத்தை வெளிப்படுத்தும் ஒரு சாதனம். அட்டை, உள்ளடகக்கத்தின் தன்மையை ஓரளவாவது எடுத்து இயம்ப வேண்டும். அது அலங்காரமல்ல. உடலுக்கு உள்ள் முகம் போன்றது அது.
என் நூலகளுக்கு இதுவரை எனக்குப் பிடித்தமான ஒரு அட்டை கிடைத்ததில்லை. ஒவ்வொரு முறையும் அந்த நேரத்து அவசரத்துக்கு ஏற்ப, மனநிலைக்கு ஏற்ப ஒரு அட்டையை தேர்வு செய்திருக்கிறேன். அட்டையில் உள்ள ஓவியம் அல்லது புகைப்படம் கொஞ்ச நாளிலேயே ரொம்ப அன்னியமாக ஆகிவிடுகின்றன. அல்லது குழந்தைத்தனமாக இருக்கின்றன. சாதாரண வண்ணத்தில் புத்தகத்தின் பெயரை மட்டும் வைத்துத் தந்தால் போதும் என்று தோன்றும்.
இது என் எண்ணம்.
ஆனால், புத்தகப் பதிப்பளர்கள், நல்ல அட்டையை உருவாக்க எப்படி முயற்சிக்கிறார்கள் என்பதை இங்கே படியுங்கள்.
வாடகை நூல் நிலையம்
மே 28, 2007
ப்ளாஹர் வலைதளத்தைப் படித்துக்கொண்டு இருந்தேன். புக்ஸ்விம் என்ற வலைதளத்தைப் பற்றி ஒரு வலைப்பதிவைப் படிக்க முடிந்தது. நான் ரொம்ப நாளாய் யோசித்துக்கொண்டு இருந்த விஷயம் இது. ஆன்லைனில் ஒரு வாடகை நூலகத்தை நடத்தினால் எப்படி இருக்கும் என்று யோசித்திருக்கிறேன்.
புக்ஸ்விம் அதைத்தான் அமெரிக்காவில் செய்திருக்கிறது. இதில் ஒரு விசேஷம் என்னவென்றால், புத்தகங்கள் அனுப்பவும் திரும்பப் பெறவும் ஆகும் அஞ்சல் செலவு இந்த நிறுவனத்துடையதே. மாதச் சந்தா 23.99 டாலரில் இருந்து 35.99 டாலர் வரை, வாடகை புத்தக எண்ணிக்கையைப் பொறுத்து அமைந்திருக்கிறது. ஒரு குறிப்பிட்ட புத்தகம் உங்களுக்குப் பிடித்துவிட்டால், அதை நீங்கள் அப்படியே வைத்துக்கொண்டு அதற்குரிய பணத்தை மட்டும் கட்டிவிட்டால் போதுமாம்.
அதேபோல், புத்தகத்தைப் படித்தவுடன் திருப்பித் தர வேண்டும் என்று அவசரப்பட வேண்டாமாம். லேட் ஃபீஸும் கிடையாது. இந்த பிசினஸ் மாடல் ரொம்ப ஆச்சரியமாக இருக்கிறது. வாடகை நூல் நிலையங்களில் முதலில் கட்டும் பதிவுக் கட்டணம் அதிகமாக இருக்கும். இதுபோல் தாமதப்படுத்துவோர், புத்தகத்தைத் திருப்பித் தராமலேயே இருந்துவிடுவோர் ஏற்படுத்தும் நஷ்டத்தைத் தாங்கவே கூடுதலான பதிவுக் கட்டணம்.
எனக்குத் தெரிந்த தனியார் வாடகை நூல் நிலையங்களில், படாத பாடு படுகிறார்கள். புத்தகத்தைத் திருப்பித் தராதவர்களுக்கு போன் மேல் போன் போட்டு கூப்பிட்டு ஞாபகப்படுத்துவார்கள். அதையும் மீறி, வராமல் இருந்துவிடுவோர் அதிகம். அத்தகையவர்களின் வீடுகளுக்கு அலுவலக ஆள்களையே அனுப்பி வைத்து, புத்தகத்தைத் திரும்ப வாங்கி வரச் செய்வார்கள்.
எந்த ஒரு தலைப்பிலும் குறைந்தபட்சம் ஐந்து படிகளாவது இத்தகைய நூல் நிலையங்களில் வாங்கி வைக்கப்படுகின்றன. ஆனால், ஆண்டு இறுதிக்குள், சில படிகள் காணாமல் போய்விடும். சில கசங்கி, கிழிந்து பயனற்றுப் போய்விடும். அடுத்த ஆண்டு, மீண்டும் புதிய படிகள் வாங்கி வைக்க வேண்டும்.
வாடகை நூல் நிலையங்களில் அனுராதா ரமணன், ரமணி சந்திரன், வித்யா சுப்பிரமணியன் போன்ற பெண் எழுத்தாளர்களின் நாவல்களுக்கு நல்ல மெளசு இருக்கிறது. தேவிபாலா, இன்றும் பெண் வாசகிகளிடையே உள்ள ஃபேவரைட் ஆண் எழுத்தாளர்.
கதை படிக்கும் பழக்கமே குறைந்துவிட்டது என்று யாராவது சொன்னால், நான் அவ்வளவாய் நம்புவதில்லை. வாடகை நூல் நிலையங்களில் இன்றும் லக்ஷ்மியின் கதைகள் கிடுகிடுவென போய்க்கொண்டு இருக்கின்றன. அதுவும் அது ஓவியங்களோடு வந்த பத்திரிகை கட்டிங்குகளின் பைண்டட் வால்யூம் என்றால் இன்னும் புகழ் அதிகம்.
புக்ஸ்விம் ஆஃப்லைனில் இருப்பது போல் தெரியவில்லை. ஈஸ்வரி நூல் நிலையம் போன்ற கடை வைத்து வாடகை நூல் நிலையம் நடத்துபவர்கள், ஆன்லைனிலும் இந்தச் சேவையைத் தரலாம். ஆனால், ஓடிப்போகிறவர்களை எப்படி கட்டுப்படுத்துவது என்று மட்டும் கண்டுபிடித்துவிட்டால் போதும். புக்ஸ்விம் மாதிரி வாசகர்களின் நேர்மையில் அதீத நம்பிக்கை வைத்து ஒரு வாடகை நூலகம் நடத்துவது நம்ம ஊரில் சாத்தியமா என்று தெரியவில்லை.